Sunday, March 1, 2015

இலக்கியம் என்ன செய்யும்

இலக்கியத்தின் பயன் என்ன என்பது குறித்து எப்போதும் ஏராளமான கருத்துகள் காலம் காலமாக இலக்கிய வாதிகளாலும் விமர்சகர்களாலும் கூறப் பட்டு வருகின்றன.முதல் நாவல் ஆசிரியர் மாயவரம் முன்சீப் வேதநாயகரின் கருத்துப்படி "சுவையும்,பயனும் அளிப்பது எதுவோ அதுதான் இலக்கியம் ".ஆனால் இன்று நவீன இலக்கியவாதிகள் இக்கருத்தில் பெரும்பாலும் உடன்படுவதில்லை.எழுத்து இந்த சமூகத்தின் எந்த அம்சத்தையும் எந்த விதத்திலும் மாற்றியமைக்கப் போவதில்லை என்பது அவர்கள் கருத்து.இலக்கியம் நேரடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரச் சக்தியற்றதாக இருக்கலாம்.ஆனால்,சமூக மாற்றம் வேண்டிப் போராடும் போராளிகளுக்கு உத்வேகம் அளிப்பது,உந்து சக்தியாக இருப்பது இலக்கியமே.உலகெங்கிலும் பெரும் புரட்சியாளர்கள் தங்கள் பணிகளுக்கு உத்வேகம் அளித்த சக்திகளில் முதல் இடத்தைப் புத்தகங்களுக்கு குறிப்பாக மாபெரும் இலக்கியப் படைப்புகளுக்கே அளித்து வந்திருப்பதை நாம் பார்க்க முடியு.ம் .அங்கிள் டாம் இன் காபின் என்ற நாவல் அமெரிக்க கறுப்பின அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டது.கார்க்கியின் "தாய்"நாவல் சோவியத் ரஷ்யாவின் புரட்சியில் ஆற்றிய பங்கு உலகறிந்த ஒன்று.வால்டேரும் ரூச்சோவும் பிரெஞ்சுப் புரட்சியின் பெரு நெருப்பில் எண்ணெய் வார்த்த இலக்கியவாதிகள்.இப்படி உலகம் முழுவதும் இலக்கியம் ஆற்றிய பங்கு குறித்த எடுதுக்காட்டுகளைப் பார்க்க முடியும்.பார்க்க வேண்டும்.   

Wednesday, February 4, 2015

புதிய ஆண்டு....புதிய காலங்கள்..

புதிய ஆண்டில்,இன்றுதான் எனது முதல் பதிவை இடுவதற்கு முனைகிறேன்.இன்றைய சூழல் புதிய நம்பிக்கைகளைத் தருவதாக ஒரு
 புறம் தோற்றம் தருகிறது.மறுபுறம் மத அடிப்படை வாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.அரசின் எல்லையற்ற அதிகார பலமும்,மக்களின் மத உணர்வுகளும்,கார்ப்பொரேட் ஊடகங்களின் ஆரவாரமிக்க பிரசாரங்களும் இந்த நாட்டின் நீண்ட காலப் பாரம்பரியம் ஒன்றை அழித்துக் கொண்டிருக்கின்றன."யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற நல்லிணக்க உணர்வுதான் இந்த மண்ணின் சுயம்.சாதி,மதம்,இனம் இப்படியான வேற்றுமைகளின் தீ பரவிக் கொண்டிருக்கிறது.பொதுவாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இப்படியான நிலைமைகளை எதிர்த்து வலுமிக்க குரலை எழுப்புவதுதான் வழக்கம். ஆனால்,அபூர்வமாக பெருமாள் முருகன் விசயத்தில் விதிவிலக்காக ஒன்றுபட்டு நின்ற எழுத்தாளர்கள், தொடர்ந்து அப்படி இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.கலையும்,இலக்கியமும் மனிதர்களை ஒன்றுபடுத்தி மேன்மையுறச் செய்ய வேண்டும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிளவுபடுத்தி பகைமை வளர்க்க உதவுவதாக ஆகி வருவது அதிகம் ஆகி வருகிற காலம் இது.என்ன செய்யப் போகிறோம்?கேள்வி எழுகிறது.பதில்?