Sunday, December 28, 2014

மாதொரு பாகன் நாவலும் பண்பாட்டுக் காவலர்களும்

பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல்,"மாதொரு பாகன்" என்பது.அந்த நாவல் வந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன.இப்போது அந்த நாவல் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு காலச் சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.அதில் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஊரில் உள்ள இறைவன் மாதேஸ்வரனை இழிவு படுத்தியும்,குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பண்பாடு குறித்து தவறான சித்தரிப்புகளைச் செய்தும் பெருமாள் முருகன் எழுதி இருப்பதாக ஹிந்துத்வா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.நூலின் ஆசிரியர்,  பதிப்பாளர் கண்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பிரச்னை முன்னுக்கு வந்திருப்பது மிக ஆச்சரியம் அளிக்கிறது.திட்டமிட்டு இப்படி கலைஞ்ர்களையும் ஓவியர்களையும்,படைப்பாளிகளையும் ஹிந்துத்வ அமைப்புகள் குறி வைத்துத் தாக்குவது சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது.இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ச.தமிழ்ச்செல்வனும் அர்ஜுன் சம்பத்தும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.நூலை படித்தீர்களா என்று தமிழ் கேட்ட போது  படிக்கவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அது தடை செய்யப்பட வேண்டிய நாவல் என்று சொல்லுகிற இவர்களை என்னவென்று சொல்லுவது? இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்ப் படைப்புலகம் ஒன்று திரள வேண்டும்,ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் இந்த விஷயம் பற்றி  எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்?   

Thursday, December 18, 2014

தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள்

அமரர் தீபம் நா.பா. அவர்கள் பிறந்த நாள் இன்று.அவர் இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது என் நீண்ட கால வழக்கம்.அவரும் உடனே பதில் எழுதுவார்.அந்த மணி மணியான கைஎழுத்துகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று அவ்வளவு அழகாயிருக்கும்.இன்று தமிழ் இந்து நாளிதழில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரை வந்திருந்தது எனக்கு வியப்பாய் இருந்தது.நா.பா.வின் தீபம் இதழ் பல எழுத்தாளர்களைப் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.பலர் தீபம் மூலம்தான் தமிழ் எழுத்துலகில் ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.ஆனால் நா.பா.மறைந்த சில வருடங்களுக்குள்  அவரின் நினைவு கூட அவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது.இதுதான் உலகம்.அது ஒரு புறம் கிடக்கட்டும்.
                     நா. பா.என்றொரு படைப்பாளியின் நாவல்களில் இருந்துதான் எனக்கு ஒரு இலட்சிய வாழ்க்கை பற்றிய கனவுகள் கிளைத்தன .குறிஞ்சி மலரின் அரவிந்தன்,பொன்விலங்கின் சத்யமூர்த்தி,மலைச்சிகரத்தின் நவீனன் என்று ஒவ்வொரு நாவலின் நாயகனும் நான்தான் என்ற மனப் பதிவில் திரிந்த காலம் அது.தீபம் இதழை ஒவ்வொரு மாதமும் காத்திருந்து வாங்குவது,வரி விடாமல் படிப்பது,படிதததுமது பற்றி கடிதம் எழுதுவது என்று தான் எனது அலுவல் அட்டவணை இருக்கும்.வாசகர் கடிதப் பகுதியில் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் எனது கடிதத்தின் சில வரிகள் பிரசுரம் ஆகியிருக்கும்.அதைப் படித்துப் பரவசம் அடைந்த காலம் அதுஇன்று அவர் இல்லை.தீபமும் இல்லை."அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்"என்ற பாரி மகளிர் சோகம் பற்றிய கபிலர் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.அவர் எழுதிய "நானூறில் நல்ல காட்சிகள்' என்ற நூலில் புற நானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எளிய விளக்கங்களுடன் தந்திருப்பார்.ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் புனைவுத் தன்மையுடன் இருக்கும்.அதில் ஒரு கட்டுரையின் தலைப்பு,"முல்லையும் பூத்தியோ ' என்பது.புலவர் ஒருவரின் நண்பரின் நினைவு அலை மோதும் உள்ளத்துடன்  அவர் என் நண்பன் இல்லாத இந்தச் சமயத்தில் நீ ஏன் பூக்கிறாய் எதற்காகப் பூக்கிறாய் என்று புலம்பும் காட்சியை நா.பா. சோகம் ததும்ப சித்தரித்திருப்பார்.இப்போது நா.பா.இல்லை.ஆனால் அவரின் எழுத்துகள்  சாகா வரம் பெற்றவையாய் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன...............தீபத்தின் சுடர் அது.என்றும் அணையாச்சுடர் அது!