Thursday, August 30, 2018

நீண்ட இடைவெளிக்குப்பின்...   
இந்தப்பகுதியில் என் சிந்தனைகளைப் பதிவு செய்து எவ்வளவோ நாட்கள் ஓடிவிட்டன. கடந்த ஆறு நாட்களாகப் பிரயாணங்களில் இருந்தேன். எழுத்தாள நண்பர் உதயசங்கரின் மகள் உ.நவீனா திருமணம் கோவில் பட்டி நகரில் ஆகஸ்ட் இருபத்தைந்து அன்று நடந்தது. நான் முந்தைய நாளன்றே அங்கு போய்த் தங்கினேன். கோணங்கி, கவிப்பித்தன் ஆகியோருடனும், நாடகக்கலைஞர் முருகபூபதியுடனும் அன்று நீண்டநேரம் உரையாட முடிந்தது. திருமண நாளன்று ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர். வண்ணதாசன், தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன்,  ஆதவன் தீட்சண்யா ,  ஷாஜகான் , சு.வெங்கடேசன், நாறும்பூநாதன், கலாப்பிரியா, போப்பு, அப்பணசாமி, சாரதி , வாத்தியார் க்ரிஷி, மாரீஸ் ... இந்தப்பட்டியல் வெகு நீளம். திருமண நிகழ்ச்சிகளை மிக வித்தியாசமான முறையில் உதயசங்கர் திட்டமிட்டிருந்தார். மாப்பிள்ளை கண்ணன் ஒரு புகைப்படக்கலைஞர். அவர் எடுத்திருந்த இருபத்தைந்து புகைப்படங்களையும், நவீனா வரைந்த அதே எண்ணிக்கையிலான  ஒவியங்களையும் தேர்ந்தெடுத்து ஒரு கண்காட்சியாக அமைத்திருந்தனர். நூல்வனம் மணிகண்டனின் புதிய புத்தகங்களின் காட்சியும் விற்பனையும் இருந்தது. கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் அமுதகானம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் பின் தலைவர்களின் உரைகள் என்று நிகழ்வு முழுவதுமே கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தன. புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் நெடுநேரம் சிந்தையைப் பறிகொடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கரிசலின் புதிய பாடல்கள் நெஞ்சை நிறைத்தன. அவரே எழுதி இசையமைத்த ஒரு பாடல் அற்புதம் ஆனால், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருந்ததால் பாடல்களின் ஆழம் ,இசையின் இனிமை இவற்றை முற்றுமுழுதாக அனுபவித்து உள்வாங்க முடியாமற்போனது. வாசல் ரத்தினவிஜயன்  திருமணம் முடிந்தபின், இரவு பன்னிரண்டு மணிக்கு கோவில்பட்டி ரயில்நிலையத்தில் காத்திருந்து என்னை வழியனுப்பியது நெகிழ்வாக இருந்தது. அங்கிருந்து பொள்ளாச்சி பயணம். . அம்மா, அக்கா உள்ளிட்ட உறவினர்கள் அனைவரையும் விஜயன் திருமண நிகழ்வில் சந்திக்க முடிந்தது. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்களில் எல்லாம் சமீபத்திய மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்சி மகிழ்ச்சியளித்தது. விபத்துக்குப்பின், சற்றே சிரமங்களுடன் வெற்றிகரமாகப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் பெங்களுரு திரும்பினேன்.  

Wednesday, January 31, 2018

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இங்கு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்,அதன் பிறகு இன்றுதான் மீண்டும் எழுதுகிறேன்.கடந்த பதினான்காம் நாளன்று மோசமான  ஒரு சாலை விபத்தில் வலது கால் எலும்பு முறிவுகளை அடைய நேர்ந்தது.இரண்டு அறுவைசிகிச்சைகளையடுத்து படுக்கையிலேயே கழிகிறது காலம். முடிந்தவரை படுத்துக்கொண்டே வாசிப்பது,யூடியூபில் எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்பது என நாட்கள் நகர்கின்றன.
          இந்த நாட்களில் நான் வாசித்த ஒரு முக்கியமான புத்தகம், இஸ்மத் சுக்தாயின் " வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை " என்பது. உருது இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய ஓர்  எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் பல கதைகள் பெரும் எதிர்ப்பையும்,வழ்க்கு களையும் சம்பாதித்திருக்கின்றன, அவரின் சொந்த வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு போராட்டமாயிருந்து வந்திருக்கிறது என்று இப்புத்தகம் முலம் அறிய முடிகிறது.சதத் ஹசன் மாண்டோவைப் போலவே ஐவரும் கடைசிவரை உருது இலக்கியக் கலகக்காரியாகவே இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.