Thursday, November 10, 2011

வாசிப்பின் விஸ்வரூபம்

வாசிப்பு முகாம் ஒன்று இந்த மாதம் ஆறு,ஏழு தேதிகளில் ஈரோடில் நடந்தது.இது நான்காவது முகாம்.பிரேசில் நாட்டு கல்வி நிபுணர் எழுதிய எதார்த்தத்தை வாசித்தாலும்,எழுதுதலும் என்ற சிறு நூல் பற்றிய விவாதம்,ஜ்ஹோன் ஹோல்டின் ஆசிரியரின் டயரி என்ற நூல் பற்றிய விவாதம் இவைதான் நிகழ்வுப் பொருள்.பல நண்பர்கள் புதியவர்கள்.எனவே அதற்கு உரித்தான பிரச்னைகளுடன்தான்  முகாம் நடந்தது.எனது புத்தகம் "உனக்குப் படிக்கத் தெரியாது" பற்றி அங்கு பலரும் சொன்னது வியப்பைத் தந்தது.பிரைரே எழுதிய நூலை நான் தமிழில் மொழி பெயர்த்திருந்தேன்.அந்த மொழிபெயர்ப்பில் இருந்த புரியாமைகள் பற்றி பலரும் சொன்னார்கள்.அந்த விமர்சனங்களின் அடிப்படையில் மீண்டும் அந்தப் பிரதியை மீளவும் எழுத வேண்டும்.இரண்டாம் நாள் அங்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார்.ரயில் டிக்கெட் மாலை மூன்றரை மணிக்கு என்பதால் அவரின் உரையைக் கேட்காமல் கிளம்ப நேர்ந்தது.ஆனால் ரயில் அன்று இரண்டு மணிநேரத் தாமதமாக வரும் என்பதுமட்டும் முன்பே தெரிந்திருந்தால்....?நண்பர்களுடன் நிறைய உரையாட முடிந்தது ஆறுதல் அளித்தது.இன்று நண்பர் ஜ.மாதவராஜ் அவர்களுக்கு என் புத்தகங்கள் இரண்டை அனுப்பினேன்.அவருடன் பேசவும் முடிந்தது.நேற்று குற்றாலம் பேரா.பிரேமா அவர்களுக்கு 'உனக்குப் படிக்கத் தெரியாது'புத்தகம் கொடுத்தேன்.புத்தகம் பேசுது இதழில் உதய சங்கர் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை எழுதி இருந்தார்.                                                                                                                                       மாதவராஜ் என் படைப்புகளில் நீண்ட கால இடைவெளி இருப்பது பற்றிக் கேட்டார்.அந்த யோசனையுடனே வந்து மின்னஞ்சல் பார்த்த பொது எஸ்.வி.வேநுகோபாலன் அவர்கள் சேலம் ஆதவ் டிரஸ்ட் பற்றி எழுதிய குறிப்பு படித்தேன்.தசைச் சிதைவு நோயால் பா திக்கப் பட்ட நிலையிலும் இரு சகோதரிகள் வானவன்மாதேவியும் இயலிசை வல்லபியும் வாசிப்பின் விஸ்வரூப தரிசனம் கண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கும் அந்த தரிசனத்தைக் காட்டி மகிழும் அற்புதம் மனதை நெகிழச் செய்தது.மனம் வைத்தால் மனிதர்கள் என்னவெல்லாம் சாதிக்கிறார்கள்!

Friday, September 30, 2011

அண்மைக்கால நாவல்கள்

 தமிழ் நாவலுக்கு நூறு வயதுக்கு மேல் ஆகி விட்ட பின்பும்,இன்னமும் தமிழில் நாவல் என்று ஒன்று அதன் உண்மையான அர்த்தத்தில் வரவில்லை என்று சாதிப்போர் உள்ளனர்.இந்த மாதிரியான அபிப்ராயங்கள் ஒரு புறம் இருந்த போதும் இதுவரை இல்லாத வகையில் புதிய வடிவங்கள்,புதிய வண்ணங்கள் கொண்டு பல நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.வாசிப்பு அனுபவத்தில் மட்டும் இன்றி அதன் பாடுபொருள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் இவை வலிமை மிகுந்தவையே.சமீப கால நாவல்களின் விகசிப்பு மலைப்பை உண்டாக்குவது.பக்காளவு என்று பார்த்தாலும் மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளன.ஆயிரம் பக்க நாவல் என்பது சர்வ சாதாரணம். விரிந்த ஒரு கான்வாஸில் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை இந்த நாவல்கள் உயிரோவியமாகத் தீட்டுகின்றன.மொழி,சொல்,பொருள் எல்லாம் புதிது.எழுதக்கூடாதவை என்று பலகாலம் விலக்கப்பட்ட பாடுபொருள்கள் இவற்றில் மிக இயல்பாக இடம் பெறுகின்றன.இன்னொரு விசேசம் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை இடம்பெறாத விளிம்புநிலை மாந்தர்கள் இவற்றில் இடம்பெறுவது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை,அவற்றின் போராட்டங்கள்,உணர்சிக் கொந்தளிப்புகள்,அவர்கள் அடைந்த அவமானங்கள்,வெற்றிகள்,தோல்விகள்,பட்ட பாடுகள் எல்லாம் இடம்பெறுகின்ற விதம் புதியது.போரும்,அமைதியும் வெறும் செய்திகள் என்ற நிலை மாறி அவை இந்த விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வை எப்படிஎல்லாம் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்குகின்றன என்ற விசயத்தைப் பேசுகின்றன."அமைதி திரும்பிவிட்ட" போர்ப்  பிரதேசங்களில்இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை லட்சணங்கள் என்னவாக இருந்தன,இருக்கின்றன என்று உரக்கப் பேசுகின்றன.வாசிக்கவே மிகுந்த மனோதிடம் தேவைப்படும் விதத்தில் இவற்றின் விவரணங்கள் இருக்கின்றன.இவற்றில் சில நாவல்களை வாசித்த அனுபவம் இங்கு பதிவு செய்வதற்குரியது... 

Sunday, September 25, 2011

நீண்ட இடைவெளிக்குப் பிறகு......

இடுகைகள் இடுவதில் நீண்ட இடைவெளி.காரணம் எதுவாக இருப்பினும்,இது ரொம்ப அதிக இடைவெளிதான்.என்ன செய்ய?இந்த இடைக்காலத்தில் படித்த,கேட்ட,எழுதிய விஷயங்கள் எண்ணற்றவை.கடந்த வாரத்தில் நான் எழதிய புத்தகம் ஒன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞ்ர்கள் சங்கத்தின் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.ஆப்ரிக்கப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யுனே பற்றிய புத்தகம் அது.பருத்திக்காட்டில்,பருத்தி பொருக்கி வாழ்க்கை நடத்தும் கறுப்பின அடிமைப் பெற்றோரின் மகள் அவர்.உனக்குப் படிக்க வராது  என்று ஒரு வெள்ளைக்காரப் பெண் சொல்லும் வார்த்தைகள் அவரைப் பாதிக்கின்றன.அன்று முதல் "நான் படித்தே தீருவேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டு அதே சிந்தனையில் மூழ்கி அமெரிக்காவின் மாபெரும் கருப்பு இன கல்வி நிலையம் ஒன்றை நிறுவி வெற்றி காண்கிறார் அவர். இந்தக் கதையை நான் ஆங்கில மூலத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு ஆதவன் தீட்சண்யா வெள்ளிக்கிழமை அன்று நீண்ட நேரம் பேசினார்.உதய சங்கரும்,எஸ்.வி.வேணுகோபாலும் பேசினார்கள்.எனக்கும் இந்தப் புத்தகம் என் எழுத்து வாழ்கையில் ஒரு குறிப்பிடத் தக்க நூல் என்றே தோன்றுகிறது.              பிறகு,படித்தவை.ஒப்ரா வின்பிரே பேசுகிறார் என்றொரு புத்தகம்.ஒப்ராவும்      கறுப்பினப் பெண்தான்.படிப்புதான் சுதந்திரத்தின் நுழைவாயில் என்கிறார்.புத்தக வாசிப்பு என்பது தனது மாபெரும் ஆர்வமிக்க செயல் என்கிறார்.மிக மிக மோசமான சூழலில் பிறந்து வளர்ந்து இன்று உலகம் போற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி என்ற வெற்றியை அடைந்திருக்கிறார்.             சுஜாதாவின் ஆழ்வார் பாடல்கள் ஓர் அறிமுகம் என்ற நூலை மறு வாசிப்புக்கு எடுத்திருந்தேன் பெரியாழ்வாரின் பாடல்கள்,ஆண்டாள் பாடல்கள் இரண்டையும் பற்றி அவர் எழுதியிருக்கும் விதம் அபாரம். நேற்று என்.சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும்,இயக்கமும் என்ற புத்தகம் படித்து முடித்தேன் அந்த நூல் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இன்று எழுதினேன்.பொதுவுடைமைக் கட்சி தலைவர்கள் பற்றி இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரும் சிறுபிள்ளைத் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களின்,குறிப்பாக சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தல் தெரியும்.எப்படிப்பட்ட தியாக வாழ்க்கை அவர்களுடையது என்று.அவருக்கு தொண்ணூறு வயது.அதில் எழுபது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை.பிரிட்டிஷ் இந்தியாவில் நான்கு ஆண்டுகளும்,சுதந்திர இந்தியாவில் நான்கு ஆண்டுகளும் சிறையில்;தலைமறைவு வாழ்க்கை ஒரு மூன்று  ஆண்டுகள்.விடுதலைப் போராட்டத்திற்குப் போவதற்காக தன கல்வியைத் தியாகம் செய்கிறார்.அவரின் சிறைவாசம்,சட்டமன்ற அனுபவம்,கட்சிப்பணிகள்,பொதுவாழ்க்கை,இலக்கிய ஆர்வம்,குடும்பம் என்று எல்லாம் படிக்கப் படிக்க பிரமிப்புத் தருகிறது."விடுதலைப் போரினால் வீழ்ந்த மலரே தோழா"என்ற பாடல் அன்று சுதந்திரப் போராடத் தியாகிகள் பற்றிய நினைவு அஞ்சலி.எழுதியவர் மணவாளன் என்ற தியாகி.இசையமைத்தவர் மறைந்த இசைக் கலைஞர் எம்.பி சீனிவாசன்.கேட்கும் போதே உருக வைக்கும் பாடலிது.கட்சி மாநாட்டில் இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தி நின்ற சங்கரய்யாவின் மனம் நெகிழ்ச்சியானது.கலை இலக்கிய வடிவம் உள்ளடக்கம் பற்றிப் பேசியிருக்கும் பேச்சு அற்புதம்.இந்த நாட்களில் கொலைகாரர்களும்,கொள்ளைக்காரர்களும்,கிரிமினல்களும் அரசியல்வாதிகள் என்றும்,முதல்வர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்றும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும் அவர்கள் பின்னால் மந்தைகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,சங்கரய்யா போன்றோரின் பணிகளை இன்று இந்தக் கூட்டம் அறியுமா?அறிந்து பின்பற்றுமா?  

Saturday, May 21, 2011

பாப் மார்லேயும் தமிழ் வாசகப் பரப்பும்...!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பாரதி புத்தகாலயம் போயிருந்தேன்.பாப் மர்லின் வரலாறு ரவிக்குமாரால் எழுதப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது.அதை அன்று இரவில் முழுமையாகப் படிக்கும் வேளையில் பெரும் வியப்பு ஆட கொண்டது.சமைக்க என்பது கரிபியன் கடற்பபரப்பில் உள்ள ஒரு சிறிய நாடு.அங்கு ஒரு சிறு கிராமத்தில் பிறந்து முப்பத்தி ஆறு வயதுக்குள் இசைத்துறையில் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தவர் பாப் மார்லி.ஆப்பிரிக்க பழங்குடிப் பெண்ணுக்கும் வெள்ளை இனக் கேப்டன் ஒருவருக்கும் பிறந்த அவர் தந்தையால் கைவிடப் படுகிறார்.சேரிப் பகுதி ஒன்றில் வசித்து பல விதமான வேலைகள் செய்து தீராத் தாகத்துடன் இசை மேதை ஆகிறார்.அமெரிக்காவுக்கும் லண்டன் நகருக்கும் சென்று விடா முயற்சி மேற்கொண்டு இசைத் தொகுப்புகள் வெளியிடுகிறார்.புகழின்  உச்சத்தில் இருக்கும் வேளையில் புற்று நோயால் மரணம் அடைகிறார். மூன்றாம் உலகமே பெரியது என்பதும்,உலகில் உள்ள எல்லோரும் சுதந்திரம் அடையாமல் எந்தமனிதரும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர் தரும் செய்தி.சிலருக்கு நம்பிக்கையும்,கனவும்...சிலருக்கு மட்டும் வாய்ப்பும்,வழியும் என்பது போன்ற மிகக் கருத்தாழமிக்க பாடல்கள்,காதல் பாடல்கள்,கறுப்பர் இன விடுதலை சார்ந்த அரசியல் பாடல்கள் என்று பல ரகமான பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடுகிறார்.செல்லும் இடம் எல்லாம் பெருங்கூட்டம்.அவருக்குக் கிடைக்கும் புகழை தங்கள் அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த நாட்டின் அரசியல்வாதிகள் ,அமெரிக்க சி.ஐ.ஏ.இவர்களின் சூழ்ச்சியால் பாப் சுடப் படுகிறார்.அதில் தப்பி விட்டாலும் வெகு விரைவில் புற்று நோய் அவரின் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறது.இந்த வரலாறு மிகவும் புனைவுத் தன்மையுடன் இந்த நூலில் எழுதப் பட்டு இருக்கிறது.உயிர்மை இதழில் சாஜி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் இந்த நூலின் முன்னுரை ஆக இடம் பெற்றுள்ளது.தமிழில் இசைப்பாடல்கள் குறிப்பாக திரைஇசைப் பாடல்கள் பற்றி சாஜியின் கட்டுரைகள் இரு தொகுப்புகள் ஆக வந்துள்ளன.நேற்று எம்.எம்.டி.ஏ.த.மு.எ.க.ச.கிளை சார்பில் பாப் மார்லி ஒரு இசைபோராளி நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.அஜயன் பாலா,சாஜி பேசினார்கள்.நான் தலைமை.வாசகர்கள்,தமிழில் இந்த மாதரியான ஆளுமைகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு.இந்த நிலையில் இது போன்ற புத்தகங்கள் பெரும் பங்களிப்பு ஆகும்.சாஜியிடம் கூட்டம் முடிந்த பிறகு இதைக்கூறினேன்.  

Tuesday, May 10, 2011

vaasakan oruvan pesukiren

வாசகன் ஒருவன் பேசுகிறேன்,,,,,,,,,,இப்படி ஒரு குரல் என்னில் ஒலிக்கும் பொது அந்தக் குரல் எழுப்பும் நினைவு அலைகள் ஏராளம்.நல்ல படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொரு தருணமும் பொன்னானது.இன்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "வாசகபருவம்"படித்த சமயம் இந்தக் குரல் பெரும் முழக்கம் போல ஒலித்தது.பல முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய தன வாசக அனுபவத்தைக் கலை நுணுக்கமும் படைப்பாளியின் ஆளுமையும் கலந்த ஒரு நடையில் எஸ்ரா எழுதி இருக்கிறார்,வைக்கம் முகம்மது பஷீர் கி.ராஜநாராயணன்,ப.சிங்காரம்,எ.கே.ராமானுஜன்,சி.சு.செல்லப்பா,அசோகமித்திரன்,பிரபஞ்சன்,கோணங்கி,வண்ண நிலவன்,இப்படி பெரும் ஆளுமைகள் பற்றி தனக்கே உரிய பாணியில் எஸ்ரா எழுதியிருக்கிறார்.படைப்பு மனநிலை என்பது மிக ஆழமானது.சக மனிதர்கள் படும் அவஸ்தைகள் ஒரு நுண்ணிய மனதில் உண்டாக்கும் தாக்கம் மிக வலியது.இந்தப் பதிவுகள் அந்தத் தாக்கம் முழுவதையும் நம் மனதில் எளிதில் கடத்திபோல் கொண்டு வந்து நிரப்புகின்றன..வலி மிகுந்த தருணங்கள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான உத்வேகத்தைத் தருகின்றன.மீரா பற்றி அவர் எழுதி இருக்கும் பதிவு என் சொந்த அனுபவத்தில் பதிந்துள்ள மீரா நினைவுகள் போன்றே விரிந்து செல்கின்றன.என் முதல் தொகுப்பை "பார்வைகள் மாறும்"என்ற தலைப்பில் மீராதான் வெளியிட்டார்.அதன் அட்டைப்படத் தேர்வு கோணங்கியினுடையது.திருவண்ணாமலையில் கலை இரவின் பொது நிகழ்வில் வெளியிடப்பட்டது.மீரா தான் சுமந்து வந்த கட்டைப் பிரித்து முதல் பிரதியைத் தந்த அந்த நிமிடம் எந்த எழுத்தால் பதிவு செய்யப் படக் கூடும்?என்றும் மறையாத அந்த நிகழ்வும் அது போன்ற பல சமயங்களில் சிவகங்கையிலும் சேலம்,சென்னை உள்பட பல இடங்களிலும் மீராவுடன் பேசித் திரிந்த பொழுதுகளும் இன்று முழுக்க அலை புரண்டன.எஸ்ராவின் எழுத்து குறித்து இன்று மீளவும் பிரமிக்க நேர்ந்த தருணம் மலரின் விகசிப்புப் போன்று என் மனமெங்கும் வியாபித்திருக்கிறது.................!

Thursday, February 10, 2011

சரஸ்வதி விஜயபாஸ்கரன் மறைந்தார்.....

வ. விஜயபாஸ்கரன் நேற்றிரவு காலமாகி விட்டார்.வெறும் விஜயபாஸ்கரன் என்றால் தமிழ் இலக்கிய உலகில் யோசிப்பார்கள்.சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்றால் சட்டென்று புரியும்.தமிழில் வெளி வந்த அற்புதமான ஒரு இடைநிலை இதழ் அது.ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி,ஜி.நாகராஜன் இப்படியான அன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர் அவர்.மிக நல்ல சிறுகதைகளும்,கட்டுரைகளும்,கவிதைகளும் இடம் பெற்ற பத்திரிகை.ஆயிரக்கணக்கில்     அன்று விற்பனையான ஒரே இலக்கிய இதழ்  என்று கூடச் சொல்லலாம்.அன்று அவர் ஒன்றாக இருந்த பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.கட்சி அன்று இருந்த நிலையில் கலை இலக்கியப் படைப்புகளை எப்படி அணுகுவது என்பதில் அவ்வளவு தெளிவும் பக்குவமும் தலைவர்களில் பலருக்கு இருந்திருக்க வாயிப்புக் குறைவு.எனவே சரஸ்வதியில் வெளியான படைப்புகள் குறித்த புரிதல் இல்லாமல் அவர் கட்சி நிலைப்பாட்டுக்கு விரோதமான படைப்புகளை வெளியிடுவதாக ஒரு கருத்து பரவ ஆரம்பிதிருந்ததுஅதன் விளைவாக "தாமரை"இதழ் அன்றைய கட்சி தலைவர் ஜீவா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.சரஸ்வதி நின்று போனதற்கு கட்சிதான் காரணம் என்ற வருத்தம விஜயபாச்கரனுக்கு இருந்தது.இந்த வருத்தத்தை பொதுவுடைமைத் தத்துவத்தின் விரோதிகள் இன்றளவும் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆனால் விஜயபாஸ்கரன் தொடர்ந்து கட்சியில்தான் இருந்தார்.சோர்வுடன் இருந்தார் என்று சொல்லலாம்."சரஸ்வதி காலம்"தொடரில் தீபத்தில் இந்த அனுபங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.சமீபத்தில் கலைஞன் பதிப்பகம் மூலம் "சரஸ்வதி களஞ்சியம்"என்ற தொகுப்பு நூலாக இரு பகுதிகளாக சரஸ்வதி இதழின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன.சரஸ்வதி காலம் தொடரை எழுதியவர் வல்லிக்கண்ணன் அவர்கள்.அது நூலாகவும் வந்துள்ளது.ஆனால் இன்று விஜய பாஸ்கரனுக்கு இரங்கல் குறிப்பு எழுதியிருக்கும் ஜெயமோகன் அந்த நூலை விஜய பாஸ்கரனே எழுதினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.வல்லிக்கண்ணன்,தி.கே சிவசங்கரன் என்ற பெயர்களின் மேல் ஜெயமோகன் மற்றும் அவரின் நண்பர்கள் வட்டத்திற்கு இருக்கும் அசூயையும்,வெறுப்பும் எள்ளலும் இலக்கிய உலகம் நன்கு அறிந்தவை.அந்த விவகாரம் பற்றித் தனியே எழுத வேண்டுமே தவிர இன்றைய சந்தர்ப்பம் அதற்குஏற்றதல்ல.எது எப்படி இருந்தாலும் ஒரு பொதுவுடைமை வாதிதான் இன்று இவர்கள் கொண்டாடும் சுந்தர ராமசாமியின்,ஜி.நாகராஜனின் படைப்புகளை நல்ல முறையில் முறையில் அன்றைக்கே இனம் கண்டு வெளியிட்டவர் என்பதையாவது மறக்காமல் இருந்தால் சரிதான்.........விஜயபாச்கரனுக்கு நம் அஞ்சலி! 

Tuesday, February 8, 2011

படைப்பு நெறிகள்....பின்பற்ற வேண்டாமா?

படைப்புத் தொழில் மட்டும் இன்றி எந்த ஒரு பணிக்கும் சில நெறிகள் உண்டு.ஆனால் படைப்பாளிகளிடம் இந்த நெறிகளை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.காரணம் உலகின் நெறிகெட்ட செயல்களை எல்லாம் சாடுகிரவர்கள் படைப்பாளிகள் என்பதுதான்.இன்று வாசிக்க நேர்ந்த ஒரு கட்டுரை,ஒரே ஒரு எழுத்துக் கூட மற்றம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு இதழ்களில் வந்துள்ளது.எழுதியவர் ஒன்றும் சாதாரணமான ஊர் பெயர் தெரியாத எழுத்தாளரும் அல்ல.இன்று சமகாலத் தில் எழுத்தாளர்கள் நன்கு அறிந்த ஒருவர்.ந.முருகேச பாண்டியன் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதிய கட்டுரை அது.உயிர் எழுத்து பத்திரிகையிலும் புதிய புத்தகம் பேசுது வெளியிட்டுள்ள தமிழ் தொகுப்பு நூல் வரலாறு சிறப்பு மலரிலும் ஜனவரி இதழ்களில் அந்தக் கட்டுரை ஒரே சமயத்தில் வெளி வந்துள்ளது.இது எப்படி நேர்ந்திருக்கும்?ஒரு இதழுக்கு அனுப்பிய கட்டுரை வெளி வருகிறதா இல்லையா என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லை என்றால் முதலில் அனுப்பிய இதழுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து விட்டு வேறு இதழுக்கு அதே கட்டுரையை அனுப்பலாம்.அது எழுதியவரின் உரிமை.ஆனால் இப்படி இரண்டிலும் ஒரே கட்டுரை ஒரே நேரத்தில் வெளிவரும் வகையில் முருகேச பாண்டியன் செயல் அமைந்து இருப்பது வருத்தம் தரும்விதத்தில் இருக்கிறது.                                                            இது எந்த வகையில் படைப்பு நெறி சார்ந்த செயல் என்று எழுதியவர்தான் சொல்ல வேண்டும்.....!

Sunday, February 6, 2011

அன்பின் பகிர்தல்கள்........

பாண்டிச்சேரி போகும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.முனைவர் பரசுராமன் எழுதிய நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்து பேச வேண்டும் என்று தோழர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.நிகழ்வு நன்றாக அமைந்தது.அது ஒரு புறம்.பாண்டி எப்போதுமே என்னைக் கவர்ந்த ஒர் ஊர்.கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதுமே இயற்கையின் எழில் கொஞ்சும்.போக்குவரத்து நெரிசல்.விடுதிகள்,ஹோட்டல்கள்,வாகனங்கள்..இந்த இடையூறுகள் ஒரு புறம்.ஆனால் இதையெல்லாம் தாண்டி புதுவை சென்று விட்டால் அது ஒரு மகிழ்வூட்டும் அனுபவம்தான்.பாரதி,பாரதிதாசன்,அரவிந்தர்,வ.ரா.,வ.வே சு.அய்யர் இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களும்,விடுதலைப் போராட்ட வீரர்களும் கவிஞ்ர்களும்,வாழ்ந்த மண் அது.அங்கு நேற்று இரவு தங்கிய சமயம் நண்பரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்ந்தது.ஒரு சிக்கல்,அதில் இருந்து மீண்டு வர அவர் நடத்திய போராட்டம்,குடும்பத்தினரின் மன உளைச்சல்,தோழர்களின் ஆதரவு,இப்போது மீண்டு வந்த பின் சற்று அமைதியான நிலை,அடுத்தது என்ன என்ற கேள்வி..இப்படி நேரம் போவது தெரியாமல் பேசினோம்.ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒரு நல்ல நாவல் இருக்கிறது என்று சொல்வார்கள்.தஞ்சை மாவட்ட வாழ்வின் ஒரு பகுதி தி.ஜானகிராமன் நாவல்களில் பதிவு ஆகி இருக்கிறது.ஆனால் நண்பர் விவரித்த வாழ்க்கை முற்றிலும் வேறு விதமான உலகம்.அதை எழுதுங்கள் என்று சொன்ன சமயம் அவரும் அது பற்றி யோசித்தார்.செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.அன்பு நிறைந்த வாழ்க்கை இந்த சோதனைகளை எதிர் கொண்டு வெல்லும் என்று மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது........!

Monday, January 31, 2011

மாற்று வெளியும் மானுடமும்........

பழகிய தடம் பயணம் செய்ய ஏற்றது.அதில் ஆபத்து மிகக் குறைவு.பிரச்னைகளும் கம்மி.ஆனால் மாற்று வெளியில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் ஏதேனும் ஒரு தடை வந்து கொண்டே இருக்கும்.யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.புரிந்து கொள்ள முயல் பவர்களும் முழுமையாகப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.இந்தப் பிரச்னைகள் எல்லாம் இருந்த போதும் மாற்று வழியில் பயணம் செய்ய எப்போது சிலர் முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த உலகில் புதியது புனைகிரவர்கள்.அந்தப் புதிய புனைவுகள்தான் இந்த உலகின் எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம்.இன்று இலக்கிய வெளியில் மாற்று வெளி என்ற ஆய்வு இதழின் மூலம் வெளி வரும் படைப்புகளும் அப்படி புதிய சிந்தனைகளை நம் முன் வைக்கின்றன.இதுவரை வந்துள்ள ஆறு இதழ்களும் அவ்வாறே ஒவ்வொரு இதழிலும் ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கின்றன.கால்டுவெல் குறித்த கட்டுரைகள்;பொருளாதாரம்,கல்வி, ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,நாவல்படைப்புகள் குறித்த பதிவுகள்,மாற்றுப் பாலியல் .....இப்படி ஆறு பொருண்மைகள்.தமிழில் வந்துள்ள இவை வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவை. 

Thursday, January 27, 2011

ஆண்டன் சேகாவும் நூற்றி ஐம்பது ஆண்டுகளும்...

ரஷியாவின் மூலம் உலகம் பெற்ற நன்மைகள் என்ன என்ன என்று பார்த்தல் அவசியம்.குறிப்பாக இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அந்த நாட்டின் பங்களிப்பு என்பது மிகப் பெரும் அளவுக்கு மதிப்பிட வேண்டிய ஒன்று.ஆண்டன் செகாவ் என்ற ரஷ்ய இலக்கியப் படைப்பாளியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தினம் ஜனவரி ௨௯ அன்று வருகிறது.அந்த தினம் கொண்டாடப் பட வேண்டிய ஒரு நாள்.அது தொடர்பாக சென்னை கூட்டாஞ்சோறு அரங்கு,த.மு.எ.ச.வும் சேர்ந்து நடத்திய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அன்று பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று.ஒன்றரை மணி நேரம் அவர் பேசியதை குறிப்பு எடுத்து எழுத்து வடிவம் கொடுத்துப்பார்த்த வேளையில் அது பதினோரு பக்கக் கட்டுரையாக வந்தது.ராமகிருஷ்ணன் நண்பர்கள் அந்தப் பதிவை வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.கொடுத்தேன்.ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாம் வார்ட் நாவலையும் பொதுவாக சோவியத் இலக்கியங்களையும் பற்றி நானும் அன்று பேசினேன் என்றாலும் நிகழ்வின் சிகரமாக எஸ்.ரா.வின் பேச்சு அமைந்தது.செகாவின் பச்சோந்தி,அவரின் துயர மயமான வாழ்க்கை,ஆனால் அவருக்கு வாய்த்த அபாரமான நகைச்சுவை உணர்ச்சி,அவரை வதைத காச நோய்,அவர் எழுதிய இருநூட்றுஆறு சிறுகதைகள்,அவர் பார்த்த மருத்துவத் தொழில் மூலம் அவர் செய்த சேவை,டோல்ஸ்டோயும்,அவரும் ஆற்றிய சமூகப் பணிகள்,இறுதி வரை "மூணு ரூபிள்"டாக்டர் ஆகவே அவர் ஏழை மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் எஸ்.ரா.விவரித்த விதத்தில் அவையோர் கட்டுண்டு கிடந்தார்கள்.வாசிப்பு ஒரு சுகம் என்றால் வாசித்த உன்னதப் படைப்புகளைப் பற்றி அவற்றின் நயங்கள் ததும்ப எடுத்துச் சொல்லவும் அதைக் கேட்டு இன்புறவும் வைப்பது இன்னொரு சுகம்."மனிதர்களின் துயரங்கள் மொழிகடந்தவை.அவற்றைப் பற்றி எழுதியவர்கள் உன்னதப் படைப்பாளிகள்.ஆண்டன்செகவ் அப்படி ஒரு படைப்பாளி"என்று எஸ்.ரா.முடித்தவிதம் அற்புதம்...........!

Tuesday, January 18, 2011

வாசித்தாலும் தீராத வாழ்க்கை...!

 'கதையோ கவிதையோ எதுவுமே சமூகத்தின் விலைபொருள் என்ற வகையில்,வெறும் கூடு அல்ல.அதற்குள் ஒரு உயிர் ஒளிந்து கிடக்கிறது.அதை,அதன் உயிர்த் துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது..." என்று சொல்கிறார் நாஞ்சில் நாடன்.எழுதுகிறவர்கள் சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும்,படைப்பு தானே வசமாகும் என்பதுவும் அவரின் அனுபவ உரைதான்.கடந்த முப்பத்தைந்து ஆண்டுக் கால எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவத்தில் இந்தக் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நானும் உணர்கிறேன்.ஆரம்பப் பள்ளிக்கூட நாட்களிலேயே வாசிப்பு என்பது எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டு விட்டது.ஆசிரியர்கள்,அண்டை வீட்டார்,பிற்பாடு கமலவேலன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் எனப் பலரும் இந்த வாசிப்புச் சுகத்தை எனக்கு உணர்த்தியவர்கள்.ஆரம்ப நாட்களில் தினமணி நாளிதழை என் அப்பாவே தினமும் டீக்கடையில் வாங்கிப் போடுவதன் மூலம் அந்த நாளிதழில் வரும் செய்திகளை மட்டும் இன்றி ஏ.என்.சிவராமன் எழுதும் கட்டுரைகள்,தினமணி சுடர்  வார இணைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் கதைகள்,கவிதைகள்,தொடர் கட்டுரைகள் என்று ஏராளமான விசயங்களை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.வாசிப்பில் இருந்து நான் எழுதுவது என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு கமலவேலன்,அவினாசி முருகேசன் போன்ற எழுத்தாளர்கள் உதவினார்கள்.உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே தீபம் மஞ்சரி கலைமகள் செந்தமிழ் என்று பலரகமான இலக்கிய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பை பள்ளி நூலகமே ஏற்படுத்தித் தந்தது.கண்ணன் இதழும் அன்று என் போன்ற இளம் மாணவர்களைப் படிக்கவும்,எழுதவும் தூண்டிய பத்திரிகை.அன்று மத்தாப்பு இதழையும்,கிண்டல்,வீரசுதந்திரம் போன்ற இதழ்களையும் நடத்தியவரான 'விசிட்டர்'ஆனந்த் எனது முதல் சிறுகதையை எழுபதாம் ஆண்டு மே மாதம் மத்தாப்பில் வெளியிட்டார்.பின் அரும்பு,கண்ணன்,மின்னல்கொடி,தினமணி கதிர்,தீபம்,வான்மதி,கோமகள்,மாலை முரசு,தினமலர்,கணையாழி,கல்கி,என்று பல்வேறு இதழ்களிலும் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.பின் செம்மலரும் சிகரமும் என் எழுத்துப் பயணத்தின் படிக்கட்டுகள்.வாழ்க்கையின் சுவடுகளையும்,புத்தகங்களின் பக்கங்களையும் ஒன்றுக்கொன்று இணையாகவே வாசித்துக் கொண்டே நான் வளர்ந்தேன்....வளர்வேன்.!

Saturday, January 15, 2011

படைப்பும் பயணமும்

மனித வாழ்க்கையில் ஒரு புதிய உயிர் ஜனிப்பது என்பது எத்தனை அற்புதமான விஷயம் என்பது அருகில் இருந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.கருவில் இருந்து வெளியில் வரும் வரை அந்த உயிரைச் சுமக்கும் தாயின் வேதனை என்ன,அது எப்படி ஒரு சுமையாய் அந்தப் பெண்ணின் உடலில் பத்து மாதங்கள் வரை தங்கி இருந்து பிரசவம் ஆகும்வரை படுத்தி எடுக்கிறது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள்.மானுடப் படைப்பின் இந்த அதிசயம்,வாழ்க்கை பயணத்தில் ஒரு காவியத் தன்மை வாய்ந்த ஒன்றுதான்.பயணம் தொடரும்...........!

Saturday, January 1, 2011

நாஞ்சில் நாடனின் படைப்புலகம்

இந்தப் பதிவுகளில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.திரு.பாஸ்கர் என்ற நண்பர் அந்த நேர்காணல் முழுவதையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.அந்த நேர்காணல் செம்மலர் இதழுக்காக எடுக்கப்பட்டது என்பதால் பொங்கல் மலர் வெளிவரும் முன்பாக அதை இங்கு பதிவு செய்யலாமா என்று தெரியவில்லை.எனினும் பொதுவாக நாஞ்சில் நாடன் படைப்புலகம் சார்ந்து சிலவற்றைப் பதிவு செய்யத் தோன்றுகிறது.    கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதி வரும் காத்திரமான படைப்பாளி அவர்.நாஞ்சில் நாட்டு வாழ்க்கை தான் அவரின் படைப்புலகின் பெரும்பாலான படைப்புகளின் பாடு பொருள்.எனினும் அவர் மும்பையில் வாழ்ந்த அனுபவங்கள் சார்ந்து "மிதவை"நாவல்,சில சிறுகதைகள் வந்துள்ளன.அவரின் முதல் சிறுகதை,"பிரசாதம்" தீபம் இதழில் வந்தது.நாஞ்சில் நாடன் ஒரு முறை வட இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொது,அவர் தான் சாப்பிடுவர்க்காக வாங்கிய பார்சலைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வழியில் நின்ற ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் ,"காமி காணார்" என்று உடல் நடுங்கப் பதட்டத்துடன் சொன்னாராம்.அவருக்குப் பசி என்று முகத்தில் இருந்தே தெரிந்து கொண்ட நாடன்,தன பார்சலில் இருந்த ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பல நாட்கள் அந்தப் பெரியவரின் பதட்டமும்,பசியும்,ஆனால் "எனக்குப் பசிக்கிறது,கொஞ்சம் ரொட்டி கொடு"என்று யாசிக்கவோ,கெஞ்சவோ இல்லை என்ற ஆச்சரியமும் நாஞ்சில் நாடனின் மனதில் ஊறிக் கொண்டே இருந்திருக்கிறது."நாம் உண்போம்"என்பதுதான் அந்தப் பெரியவரின் "காமி காணார்" என்ற வார்த்தைகளின் பொருள் என்று அறிந்த இவர்,அந்தப் பெரியவருடைய நிலை என்ன,அவருக்கு குடும்பம் என்று ஒன்று இருக்குமா,இருந்தால் அவரின் மகன் அல்லது மகள் யாரும் அவரைக் கவனிக்கவில்லையா,அவர் அவ்வளவு பதத்ததுடன் அந்த ரயிலில் தனியே ஏன் வர வேண்டும் என்று பல விதமாக யோசித்துக் கொண்டே இருந்ததின் விளைவு "விரதம்"சிறுகதை.இப்படி அவரின் ஒவ்வொரு படைப்புமே நாம் அன்றாடம் காண்கிற வாழ்க்கையின் படப்பிடிப்புகல்தாம்.                                                                          கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தும் தான் தடம் பதித்து விட்டவரா,இல்லை,தடம் தொலைத்து விட்டவரா என்று புரிபடுவது இல்லை என்கிறார் இவர்.நமக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.தடம் ஒன்றை அழுத்தமாகப்பதித்தவர்   நாஞ்சில் நாடன் என்பதில்."என் தீவட்டி எப்போதும் என் மனதில்;கரங்களில் அல்ல.அது எரிக்கும்,வெளிச்சம் பாய்ச்சும்,என்னை அற்றுக் கருகிப் புகைந்தும் போகும்"                     என்பது இவரின் சுய மதிப்பீடு.                                                                "எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனை அல்ல;ஆத்மா சோதனையோ சத்திய சோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல;பெரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி;என் சுயத்தைத் தேடும் முயற்சி" என்று கூறும் நாஞ்சில் நாடனுக்கு இலக்கியத்தில் நவீன உத்திகளின் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை.என் படைப்புக்கு அது அவசியம் என்றால் அது தானாகவே என்னிடம் வந்து சேரும் என்கிறார்.வாழ்க்கையைப் படித்தால் போதும் என்பது இவரின் பாதை.ஐந்து நாவல்கள்,எட்டு சிறுகதை தொகுப்புகள்,இரு கவிதைத் தொகுப்புகள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,என்று இவரின் படைப்புக்களத்தில் விளைச்சல் கணிசமான அளவுக்கு நிறைந்து இருக்கிறது.ஆனாலும் இன்னும் இவருக்கு இவரது நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி சொல்லுவதற்கு ஏராளம் உண்டு.இவர் ஆனந்த விகடனில் எழுதிய "தீதும் நன்றும்" கட்டுரைகள் இவரின் சமூகப் பொறுப்புணர்ச்சியின் தீவிர வெளிப்பாடுகள்.குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளிகள்;கல்லூரிகள்,வேலை செய்யும் அலுவலகங்கள்,பயணிக்கும் பேருந்துகள் இவற்றில் எதிர் கொள்ளும் பிரச்னைகள்,கழிவறை இல்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியெல்லாம் மிகத் தீவிர அக்கறையுடன் எழுதியது மாநிலம் முழுக்க பெரும் எதிர்வினைகளை எழுப்பியது.இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும்,நாஞ்சில் நாடனின் பார்வை எவ்வளவு கூர்மையானது என்பது.இசையில் இவரின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் உணவு வகைகள் சார்ந்து இவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இவரின் எல்லாப் படைப்புகளிலும் மிகத் துலக்கமாகத் தெரிவதை படிப்பவர்கள் உணர முடியும்.                                      இவருக்கு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது எவ்வளவு பொருத்தம் என்று வாசகர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் நாஞ்சில் நாடனுக்கு இந்த அங்கீகாரம் மிகவும் காலம் கடந்து கிடைத்ததே என்ற வலி மிக ஆழமாக இருக்கிறது.அந்த வழியை வெளிப்படுத்துவதில் இவருக்குத் தயக்கம் சிறிதும் இல்லை என்பது இவரின் மற்றுமொரு தனித்தன்மை.வாசிக்க வாசிக்க சுவை தரும் ராக ஆலாபனை ப்ன்றவை இவரின் படைப்புகள்...................!