Sunday, December 27, 2009

pirapancanin ulakam.............!

பிரபஞ்சன் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ளன.சற்று நீண்ட தலைப்பு.குமுதம்இதழில் அவர்  பணியாற்றிய அனுபவங்களும்,வேறு பல விசயங்கள் பற்றிய அவரின் சிந்தனைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.புதுவை அனுபவங்களும் அவரின் முன்னோடிகளும் அவரின் பெற்றோர்களும் வாழ்ந்த விதம் பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.அவரின் மொழிநடை மிக வசீகரமான ஒன்று.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.பற்றி இவ்வளவு காலமும் வேறு யாராவது இப்படி எழுதி இருப்பார்களா?சந்தேகம்தான்.இவரின் பார்வை வித்தியாசமானதாக இருக்கிறது.அப்பாவின்,தாத்தாவின் கள்ளுக்கடை வியாபாரம் பற்றி பிரபஞ்சன் எழுதி இருக்கும் விதம் தனித்தன்மையானது.பொதுவில் கள்ளுக்கடை பற்றிய சித்திரம் ஒருவிதமானதாக இருக்கும்.ஆனால்,இவர் தரும் ஓவியம் வேறுவிதம்.ரசிக்கவும்,மகிழவும் முடிகிற விதத்தில் இந்தப் பதிவுகள் உள்ளன.அவரின் தம்பியும்,தங்கையும் அம்மை நோய்க்குப் பலியான நிகழ்வு நெஞ்சை உலுக்கும் விதத்தில் பதிவாகி உள்ளது.கிணற்றடியில் அண்ணனும்,தம்பியும்,தங்கையும் மூவரும் விளையாடுவதாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன்,ஆனால் நான்காவதாக மரணமும் எங்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடியவில்லை;உணர முடிகிற வயது,அனுபவம் எதுவும் கிடையாது அப்போது என்கிறார் பிரபஞ்சன்.பானுவின் புத்தகப்பை ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;ஆனால் அதைமாட்டிக்கொள்ள பானுதான் உயிருடன் இல்லை.என்ன ஒரு சோகம்.இவரின் அனைத்துக் கதைகளிலும் மூர்த்தி என்ற பெயர் மட்டுமே ஆண் கதாபாதிரங்களுக்குப் பெயராக வருவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இந்தக் கட்டுரையை வாசிக்கும் வேளையில் கிடைத்தது.புதுவை பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் வாழ்ந்த இரு பிரஞ்சுப் பெண்கள் பற்றிய கட்டுரையும் மிக வலிமையானது.படிக்கும் வேளையில் மனம் உலைந்து விடுகிறது.பிரபஞ்சனின் இசையார்வம்,வாசிப்பு விரிவும்,ஆழமும்,கூர்மை மிக்க பார்வை எல்லாம் நமக்குப் புலனாகின்றன.மேன்ஷன்களின் வாசனை,அதன் ஓசைகள்,அது நம் மீது திணிக்கிற கலவையான உணர்வுகளின் அழுத்தங்கள்....இப்படி ஒரு கட்டுரை.மென்மையான ஒரு நடையில் வாழ்வின் குரூரங்கள் பலவற்றையும் பதிவு செய்வது பிரபஞ்சனுக்கே உரிய ஒரு தனித்தன்மை.............!

Thursday, December 24, 2009

sila puthiya velikalum,oru naavalum....!

இன்று புதிய இடங்களையும், வெவ்வேறு விதமான வாழ்க்கை  முறைகளையும் பாடு  பொருள் ஆகக் கொண்ட நாவல்கள் பல புதிய எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.இதுவரை நாம் அறியாத மனிதர்களை, வாழ்க்கைகளை,நகரம் அல்லது கிராமப் பகுதிகளை,அங்கு வாழ்கிற அவர்களின் உணர்வுகளை,அவர்களின் கலாச்சாரங்களை இந்த நாவல்கள் பதிவு செய்கின்றன.இவ்வகையில் நான் போன வாரம் படித்த நாவல் கரன் கார்க்கி எழுதிய ஒரு நாவல். சென்னைநகரின் தென் பகுதி பற்றி ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.ஆனால் அதன் எதிர் துருவமாய் இருக்கும் பகுதி பற்றி ஓரிரு படைப்புகளே இருக்கின்றன.கரன் கார்கி இப்போது அந்தக் குறையைத் தீர்க்கத் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.சென்னை நகரின் ஒரு பகுதியில் கடும் சூழல்களில் வாழ்கிற உழைப்பாளி மக்களையும்,அவர்கள் நடுவே நிலவும் போட்டி பொறாமைகளையும்,குடி,விபச்சாரம்,சண்டை,துரோகம், நட்பு,இந்த மக்களின் பூர்வீக கிராமங்களில் நடைபெறும் மூதாதைகள் வாழ்க்கைகளையும் அங்கு நிலவும் சாதீயக் கொடுமைகளையும் இப்படி எண்ணற்ற விசயங்களை மையமாகக் கொண்டு ஒரு கனமான நாவலைத் தந்திருக்கிறார். சாராயம் விற்கிற குயிலம்மா,கோபால்.சங்கரன்,சின்னப்பொண்ணு, அஞ்சலை விஜயா,சுலோச்சனா,முனியன் என்று பல பாத்திரங்கள்.குடியின் கொடுமை பற்றி அந்தப் பழக்கத்தால் உயிரையே இழக்கும் முனியன்,கோபால் மூலம் பதிவு செய்கிறார்.குயிலம்மவுக்கும், கோபாலுக்கும் ஏற்ப்படுகிற நட்பு ஒரு புதிய வகைப் பதிவு.நாம் காண விரும்பாத சில பகுதிகளில் இப்படி மிக மென்மையான ஒரு பரிமாணம் மறைந்து கிடப்பதை நாவலின் பல இடங்களில் காண்கிறோம்.மழை வந்து கொட்டும் வேளைகளில் ஏழை மக்கள் படும் அவஸ்தையும்,குடிசைகளில் மழை செய்யும் கொடுமைகளையும் பற்றி நாவலின் முன்பகுதியில் மிக விரிவான ஒரு பதிவு இருக்கிறது.மரணங்கள்  தவிர்க்க முடியாதவை,முக்கியமானபல பாத்திரங்கள் நாவலில் மிகவும் கொடூரமான மரணங்களைச் சந்திக்கின்றன.சால்ட் க்வார்ட்டேர்ஸ்,வடசென்னைப் பகுதிகள் பலவற்றைப் பற்றி முதன்முறையாக நாம் இதில் படிக்க முடிகிறது.குற்றங்களும்,வெக்கையும்,சாராயமும்,கொலைகளும் மலிந்த பகுதியாகவே ஊடகங்களில் பதிவு செய்யப்படும் வடசென்னைப் பகுதியின் மானுட ஆன்மாவைப் படம் பிட்ட்டிதுக்க் காட்டும் ஒரு நல்ல படைப்பு.ஆசிரியர் இதில் தானே நேரடியாகப் பேசாமல் சொல்ல நினைப்பதை கதையின் மூலமே சொல்லி இருந்தால் மபக நல்ல கலைப் படைப்பாக இது வந்திருக்கும்.......!

Friday, December 11, 2009

bhaarathi pirantha naal...............!

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்.தமிழ் மொழிக்குப் புது ரத் தம் பாய்ச்சிய சில பெரியோருள் பாரதி ஒரு சிகரம்.அவரின் பாடல்களை இன்று வானொலியும் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தி கொண்டிருந்தன.அமரத்துவம் வாய்ந்த கவிதை மலர்களைப் பூக்கச் செய்த குறிஞ்சி மலர்ச் செடி அவர்.வசன கவிதையும்,சிறுகதை வடிவ முயற்சிகளும்,கார்ட்டூன்களும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த புதிய வடிவங்களில் சில.                                எத்தனை விதமாய் யோசித்தாலும் அந்தக் கவி உள்ளம் முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.இன்றைய வாழ்க்கைச் சூழல்களை மனதில் கொண்டு அவரை ஏதாவது ஒரு முத்திரை குத்தி சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எதிலும் அடங்காமல் அந்தக் கவி உள்ளம் நிற்பதிலும்,நடப்பதிலும்,பறப்பதிலும் லயித்துக் கிடந்திருக்கிறது.காற்று சற்று வேகமாய் வீசினால் கூட காற்றே,மெதுவாய் வீசு என்று வேண்டிக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது.                                                                                                                                                  மனிதர்கள் எருமைகளைப் போல் ஈரத்தில் உழன்று கிடக்கிறார்கள் என்று நொந்து கொள்கிற உள்ளம் அந்த உள்ளம்.நமது கரங்களில், கண்களில் சொற்களில் சிந்தனைகளில்,எல்லாவற்றிலும் மின்னல் சொடுக்குக என்று வேண்டிய கவி மின்னல் அது.சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காத மனிதர்களைச் சாடும் சவுக்கு அது.படிக்கும் போதே மனப் பரப்பில் அமுத மழை போல் பொழியும் கவி மழை அது.நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று உணர்த்திய வழிகாட்டி அவர்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும்  சீர்மிகு சிந்தனைகளின் களஞ்சியம் அது.வேறென்ன சொல்ல?

Saturday, December 5, 2009

pirantha mannil oru naal..........!

இந்த வெள்ளிக்கழமை அன்று நான் திண்டுக்கல் போயிருந்தேன்.அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்;படித்தேன்;அங்கிருந்து வெளியேறி இப்போது சுமார் நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போது பார்க்கையில் ஊரே அடையாளம்  தெரியாமல் மாறி இருப்பதை உணர முடிந்தது.நெடுஞ்சாலைகள் பெரிய பாலங்களின் இணைப்பில் பிரமாண்டமாய் ஆகி  விட்டிருந்தன.அங்கு ஒரு நிகழ்வில் கிராம நூலகங்களின் பயன்பாடு பற்றி ஒரு வகுப்பு நடத்த வேண்டியிருந்தது.நன்றாக அமைந்தது.அதல்ல என் மனம் சொல்ல விரும்புவது.எனது மூத்த சகோதரர் ஆக நான் மதிக்கும் எழுத்தாளர்,நல்லாசிரியர் விருது பெற்று இப்போது பணி ஒய்வு பெற்றுள்ள அண்ணா திரு கமலவேலன் அவர்களைக் கண்டு பேச முடிந்ததும்,அவரும் நிகழ்வில் என்னோடு பண்கேற்றதும்தான்.அவரை நான் சந்தித்ததே ஒரு விந்தையான முறையில்தான்.அப்போது நான் பள்ளி மாணவன்."கண்ணன்"என்ற அக்கால சிறுவர் இதழில் கமலவேலன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன்.அதில் டிண்டுகல்லின் கடைவீதியும்,பழனி ரோடும் இன்னும் சில இடங்களும் இடம் பெற்று இருந்தன.அடடே,நம் ஊரில் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா என்ற வியப்புடன் அவரைப் பற்றி அந்த ஊர்ப் பத்திரிகை விற்பனைக் கடைகளில் எல்லாம் விசாரித்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தேன்.அவரை ஒருமழை   நாளில் பதிரிகைக்கடை எதிரில் சந்தித்தேன்.அன்று தொடங்கிய நட்புமஅன்பும் இன்றளவும் நீடித்து இருக்கிறது.நடுவே சில காலம் தொடர்பு அறுந்து இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் தொடர்பு கிடைத்து விடுகிறது.அவர் ஏராளமான நூல்களின் ஆசிரியர்.அந்தக்கால பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,மற்று கல்கி,குமுதம் விகடன் உட்படப் பிரபல,சிற்றிதழ்கள் எல்லாவற்றிலும் எழதி இருப்பவர்.ஆனால்போதிய அளவு இன்னும் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்குப் போல் இருப்பவர்.அவர் தீபம் இதழில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"சிறுகதை மறக்க முடியாத சிறுகதைகளில் ஒன்று.சிறந்த நாடக் ஆசிரியரும் கூட.பல மேடை நாடகங்களை அவர் தன சொந்த முயற்சியில் அரங்கேற்றியவர்.குறிப்பாக பிரஞ்சு நாடக ஆசிரியர் மொழியர் எழுதிய "கஞ்சன்"நாடக அரங்கேற்றத்தின் போது சே.ராமானுஜம் வந்து பார்த்துப் பாராட்டினார்.அந்த நினைவுகளும் அவருடன் சேர்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் ,மலை அடிவார வள்ளலார் கோவிலில்,அபிராமி ஆலயத்தில் இப்படிப் பல இடங்களில்  பேசிக் கொண்டே திரிந்த நாட்களின் நினைவுகளும் அலை மோதிக்கொண்டு இருந்தன.வாழ்க்கை நம் முன் நிறுத்துகிற மனிதர்களின் பெருமைகள் முழுவதையும் நாம் உணர்ந்து முடிப்பதற்குள் நமது வாழ்க்கை முடிந்து விடுமோ? யாரறிவார்!

Wednesday, December 2, 2009

ithu varaiyilaana pathivukal.............!

எனது சிந்தனைகளை இப்படி வலைப்பூவில் பதிவு செய்யத் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன.நான் படித்த விசயங்களை,என் படைப்புகளில் இருந்து சில பதிவுகளை,என் கவனத்திற்கு வந்த நிகழ்வுகள் மீதான என் கருத்துக்களை,பிற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றி,இப்படி அவ்வப்போது தோன்றிய கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்து வருகிறேன்.அவற்றில் ஒரு நான்கு பதிவுகள் தமிளிஷ் மூலம் பிரபலமான இடுகைகள் ஆக தேர்வாகவும் செய்தன.எங்கெங்கோ இருந்து இப்பதிவுகளைப் படிக்கவும்,பாராட்டவும்,புறக்கணிக்கவும்,பார்த்து விட்டு எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் இருந்து விடவுமாக நாட்கள் ஓடுகின்றன.மற்ற ஊடகங்களை விட இங்கு உடனே எதிர்வினைகள் என்ன என்று தெரிந்து விடுகின்றன.                                                                         தூங்கும் நினைவுகள் என்ற நா.பா.வின் குறுநாவல் இப்போது என் மனப் பரப்பில் ஓடுகிறது. அவரின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த சிலவற்றில் இதுவும் ஒன்று.ஒரு மலைகாடு சார்ந்த கிராமம் ஒன்றில் ஆசிரியர் பணி செய்யும் கதை சொல்லி,தன அடிமனதில்  மறைந்து கிடந்த சோகக்கதை ஒன்றை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிறார்.நா.பாவுக்கே உரிய மேன்மை கொஞ்சும் தமிழில் இந்தக் குறுநாவல் எழுதப் பட்டிருக்கும்.நினைவுகளின் சுமையைப் போல் கனமான வேறொன்று கிடையாது.இதை படிக்கும் அனைவர் மனதிலும் அந்த சுமை பாறாங்கல் போல் இறங்கும்.நமது பதிவுகளின் சுமையை நாமே சுமக்க முடியாமல் திணறிப் போவோம்.............!

Sunday, November 29, 2009

sol ondru vendum...........!

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்பார் பாரதி.சொல்லாட்சி என்பதன் உச்சத்தை பாரதியிடம் பல வரிகளில் காண முடியும்."கால நடையினிலே நின்றன் காதல் தெரியுதடீ' என்பது ஒரு உதாரணம்.காதலியின் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போது காலம் மெல்ல நகரும் உணர்வு இருக்கும்.அந்த நகர்வை நடை என்று உருவகப் படுத்துகிறார் பாரதி.சொற்களின் வலிமை இலட்சியவாதிகளின் பேச்சுக்களில் ஸ்தூலமாக வெளிப்படுவதைக் காண முடியும்.புகழ் பெற்ற சில பேச்சுக்களில் இந்த வலிமை நம் கண்ணெதிரே  பொருந்தித் தெரிவதைக் காணலாம்."செயல்,அதுவே சிறந்த சொல்" என்கிறார் ஹோசே மார்த்தி.சொல்வதில் இன்பம் காண்கிற பலர் செயல் என்று வரும் போது பதுங்கிக் கொள்வதைக் காண்கிறோம்.                                       சொற்களை பூக்களைத் தொ டுப்பது போலத் தொடுத்து படிப்பவர் நெஞ்சில் நீண்ட காலம் வரை நிலைத்து இருக்கும் படிச் சொன்னவர் தீபம் நா.பா.அவரது ஆழ்ந்த தமிழ்மொழிப் புலமை அதற்கு நல்ல சாதனமாக அமைந்தது.அவரளவுக்கு மென்மையான முறையில் மொழியைக் கையாண்டவர்கள் தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைவு.குறிப்பாக அவரின் 'மணிபல்லவம்","குறிஞ்சி மலர்""தூங்கும் நினைவுகள்","பொன் விளங்கு""ஆத்மாவின் ராகங்கள்","மலைச் சிகரம்", போன்ற நாவல்களிலும் நவநீத கவி என்ற அவரின் கவிஞர் பாத்திரம் ஒன்று எழுதியதாக நா. பா. எழுதிய சில கவிதை வரிகளிலும் இந்தச் சொல்லின்பதைக் காண முடியும்.ஒரு உதாரணம்: அவரின் பொன்விலங்கு நாவலில் நவநீத கவியின் கவிதை வரிகள்............"எண்ணத் தறியில் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய்,முற்றும் கற்பனையா....."என்று வரும் பகுதி.அவரின் எல்லாப் படைப்புகளிலும் கவித்துவமும்,சொல்லாட்சியும் இனிமை நிறைந்த ஒரு இசைக்காவியம் போல் நம் நெஞ்சில் பதியும் வல்லமை padaiத்தவை. வாசிக்க வாசிக்க மனப் பரப்பில் அமுதமழை போல் ப்ய்யக்கூடியவை...!

Friday, November 27, 2009

intha mannin vaasanai.....................!

இந்த மண்ணின் வாசனை, இதற்கு ஏது ஈடு இணை? என்றொரு பாடல் உண்டு.நாம் வாழ்கிற மண் குறித்த பெருமிதம் இந்தப் பாடலின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.தமிழ் மண்ணில் பிறந்த யாரும் இந்தப் பெருமிதத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க இயலாது.யாதும்   ஊரே யாவரும் கேளிர்என்று ஒலித்த குரல் நம் தமிழ்க் கவிஞர் ஒருவருடையது.நாடாய் இருந்தால் என்ன,காடாய் இருந்தால் என்ன,எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்கள் ஆக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் என்று மண்ணைப் போற்றிப் பாடுகிறார்  ஔவையார். இன்று நாம் வாழும் வாழ்க்கையில் இந்தப் பெருமிதத்திற்கு இடம் இருக்கிறதா?                                                                                                                                                              அரசியலின் பண்புகளும் சாதீயத்தின் கூறுகளும் இன்று இப்படிப் பெருமிதங்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டன.மானுட மேன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு இயங்க வேண்டிய எழுத்தாளர்கள் கூட இன்று சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கிய உலகில் உழன்று கொண்டிருக்கும் எனக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தான் இப்படி சாதி அட்டை மாட்டிக் கொண்டுதிரியும் எழுத்தாளர்களை இனம் காண முடிகிறது.இதனை ஆண்டுகள் நாம் எழதியும்,படித்தும் தெரிந்து கொண்டது உண்மையில் என்ன என்ற கேள்வி குடைகிறது மனதில்.நந்தனின் கதையும்,கீழ வெண்மணியும்,திண்ணியமும்,உத்தப்புரமும் இன்று நம் சமூகத்தின்   மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.எங்கே வேர், எங்கே நீர் என்று தெரியாமல் இந்த அசுர  விருக்ஷம் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மண்ணில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.தந்தை பெரியாரும்,மணியம்மையும்,மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரும் இன்னும் எவ்வளவோ பெரியவர்களும் போராடிய இந்த மண்ணில் இன்று சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நண்பர்களின் வெளிப்பாடுகள் நாம் பெருமிதப் படும் வகையில் இல்லை.என்ன செய்யலாம்? 

Tuesday, November 24, 2009

கார்பன் பூட்ப்ரின்ட்-குளோபல் வார்மிங்-சில சிந்தனைகள்......

கடற்கரை மணலில் நடக்கையில் நம் காலடிச் சுவடுகள் பதியும் அழகில் மனம் லயிக்காதவரகள் உண்டா?கடற்கரை  மணலில் இப்படிப் பதியும் சுவடுகளும்,சின்னகுழந்தைகள் கட்டும் மணல்வீடுகளும் அழகின் வெளிப்பாடுகள்.இன்று எழுதும் கவிஞர் முதல் பண்டைய இலக்கியவாதிகள் வரை இந்தக் கடற்கரைக் காட்சிகள் பற்றி எழுதத் தவறியது இல்லை.ஆனால் இன்று சுற்றுச் சூழல் பற்றி ஆராய்கிறவர்கள் கார்பன் காலடிச் சுவடுகள் பற்றி மிகவும் கவலை கொள்கிறார்கள்."புவி  வெப்பம் அடைதல்" என்கிற விஷயம் இன்று மிகவும் பரபரப்பான ஒரு அம்சமாக மாறி இருக்கிறது.மனித இனம் இன்று தன அமைதியான வாழ்க்கையைத் தானே அவலம் மிக்கதாக மாற்றிக் கண்டு வருகிறது.அந்தமாதிரி அவலங்களில் ஒன்றுதான் இந்த கார்பன் வெளியிடும்  சாதனங்களும்,அதன் விளைவாகப் பூமி வெப்பம் உயர்ந்து கொண்டே போவதும்.ஒவ்வொரு மனிதரும் வெளி உலகில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வாகனங்களும்,வீடுகள்,கடைகள்,தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்திருக்கும் குளிர்சாதன இயந்திரங்களும் வெளியிடும் கார்பன் வாயுவினால்  பூமிப் பரப்பிற்கு மேல் உள்ள ஓசோன் படலம் ஓட்டையாகி அது பெரிதாகிக் கொண்டே போவதும்,இந்த வாயு பூமிக்கு மேல் ஒரு கனத்த போர்வையாகி வெப்பம் குறைய விடாமல் மூடிக் கொண்டு இருப்பதும் பூமி வெப்பம் அடையும் அவலத்திற்குக் காரணங்கள்.இதைக் குறைக்க என்ன செய்யலாம்?முடிந்த வரை கார்பன் வெளியிடும் சாதனங்களின் உபயோகத்தைக் குறைக்கலாம்;கார்பன் வாயுவை உள்ளே ஈர்க்கும் மரங்களை உலகெங்கும் எவ்வளவு அதிகம் வளர்க்க முடியுமோ அவ்வளவு அதிகம் வளர்க்கலாம்.கார்களில்     போகாமல் சைக்கிள் அல்லது நடந்து போகலாம்.இல்லை என்றால் என்ன ஆகி விடும்?பூமியின் வெப்பம் உயர உயர துர்வப் பிரதேசப் பனிப் படலங்கள் உருகும்.கடல் மட்டம் உயரும்.பூமியின் வெப்பம் தாங்க முடியாத அளவு உயர்ந்து கொண்டே போவதால் மனித இனமும் பிற உயிரினங்களும் வாழ்வதே பெரும் பிரச்னை ஆகி விடும்.என்ன செய்யப் போகிறாய்?............!

Sunday, November 22, 2009

iruttu enakkup pidikkum............!

இருட்டு என்றாலே எனக்குப் பயமாயிருக்கும் என்று நம்மில் பலர் பல சமயங்களில் சொல்வதுண்டு.இருள் என்பதை நாம் பயப்படும்படியான் விசயங்களுடனே சேர்த்துப் புரிந்து வைத்திருப்பதின் விளைவு இது.சிறு வயதில்  இருந்து நம் வீட்டுப் பெரியவர்களும் இருட்டிய பின் எங்கேயும் தனியாகப் போகக் கூடாது என்று நம்மை பயமுறுத்திக் கொண்டேதான் இருந்திருப்பார்கள்.நாம் கேள்விப்படும் பேய்க்கதைகளும்,கொலை , கொள்ளை போன்ற செய்திகளும் நமது பயத்தை இன்னும் அதிகப்பட்துகின்றன.ஆனால் இருட்டு என்பது நாம் விரும்பக் கூடிய ஒன்று என்று யாராவது சொன்னால் நீங்கள் அதை ஒப்புக் கொள்வீர்களா?இருளின் இனிமைகள் பற்றி யாரேனும் எழுதினாலோ பேசினாலோ அது சற்று வியப்புக்குரிய ஒன்றுதானே?தமிழின் நவீனஎழுத்தாளர்களில்சிறந்த ஒருவரும், ,"பூ' படத்தின் திரைக்கதைக்காக இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்றவருமான ச.தமிழ்ச்செல்வன் "இருட்டு எனக்குப் பிடிக்கும்"என்ற தலைப்பிலே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்."இருள் என்பது குறைந்த velicham "என்று பாரதியின் ஒரு வரி சொல்லும்.ஜெயா மாதவன் என்கிற கவிஞர்,குழந்தை இலக்கிய படைப்பாளி எழுதி இருக்கும் கட்டுரை ஒன்றில் தான் இரவுகளை விரும்புவதாக எழுதி இருக்கிறார்.அவரின் வார்த்தைகளில் சொல்லும் இந்த உணர்வுகளைப் பாருங்கள்:"இருட்டியதும் பறவைகள் தம் கூடுகளில் அடைந்து விடுகின்றன.மாடு,கன்றுகள் வீடு திரும்பி விடுகின்றன.இரவு வானில் நிலவு மெல்ல எட்டிப் பார்க்கும்.அதனுடன் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் நம் மனதில்  இனம் புரியாத பரவசத்தை நிரப்பி விடுகின்றன. இரவின் ஓசைகள் நம் புலங்களில் ஒரு கூர்மையைக் கொண்டு வந்து விடுகின்றன.பகலில் நாம் தேவையோ தேவை இல்லாதவையோ ஏதானும் வேலைகளைச் செய்து கொண்டேதான் இருப்போம்.நமது உலகில் வெளிச்சத்தின் இயல்பு அது.அது நம்மை இயங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்.நம் வாழ்க்கைத்  தேவைகளுக்காக இந்த  மாதிரி  இயக்கம்  தேவையை  இருந்தாலும்  இரவின்  தனிமையில்  நாம்  வேறொரு  உலகில்  சஞ்சாரம்  செய்கிறோம் ........" இன்னும்  இப்படி  நிறைய  எழுதுகிறார்  அவர். ."இன்ப  இரவு " என்பது  பாரதிதாசன்  எழுதிய    கவிதை  naadakam.ippadiyaaka pala perum padaippaalikal iravai virumbum azakaip paarunkal.enakkum kooda iruttu pidikkum.unkalukku?                  

Saturday, November 21, 2009

annal ambethkarum kalviyum..........!

இந்தியா விடுதலை பெற்ற பின் அதன் அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பியான அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்த ஒருவர்.தன ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன் மொழிகிறார்.அவை:  "பொதுக் கல்வித் துறையிலும், சட்டக் கல்வித்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அறிவியல்,பொறியியல் துறைகளில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.வெளிநாடுகளின் பல்கலைககழகங்களில் உயர் தரக்கல்வி கற்பதென்பது எட்டாக் கனியாக உள்ளது.அறிவியலிலும்,தொழில் நுட்பத்திலும் உயர் தரக்கல்வி கற்பதுதான் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு உதவும்;ஆனால் சர்க்காரின் உதவி இல்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா.....!"என்கிறார் அம்பேத்கர்.இந்தக் குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும்?நம் மகா கவி பாரதி தரும் பதில் இதுதான்.:"உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள்.அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அதனை ஸ்தாபனம் செய்யுங்கள்.."என்பது பாரதி காட்டும் வழி.உனக்கு நீயே விளக்கு என்றவர் புத்தர்.அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விசயங்களைக் குறிப்பிடுகிறார்.:"ஒன்று,கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று,மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்..."இது போல் இந்தியாவின் கல்வி வரலாற்றில் மாபெரும் மனிதர்களின் சிந்தனைகள் சிறகு விரிக்கின்றன...........!

Friday, November 20, 2009

valaippoovum vaasakarkalum....................!

வலைப்பூ என்பது இன்று ஒரு சக்தி மிக்க வெளிப்பாட்டு ஊடகம் ஆகி இருக்கிறது.இதில் இடுகைகள் பதிவு செய்யும் நண்பர்கள் தம் மனதில் தோன்றும் எண்ணங்களை வண்ணங்கள் நிறைந்த வானவில் போலத் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஊடகத்தையும் எழுத்துலகத்தையும் ஒப்பிட்டு பதிவர் ஆதிமூல கிருஷ்ணன் எழுதியிருக்கும் இடுகை சுவையான் சில உண்மைகளை நம் முன் வைக்கிறது.ஒரு இடுகையை பலரும் விரும்பிப் படிக்க வைக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று அவர்சொல்லும்  டிப்ஸ் பயனுள்ள ஒன்று.அவரின் நீண்ட அனுபவம் இதில் தெரிகிறது.ஆனால் அச்சு ஊடகத்தில் எழுதும் எழுத்தாளர்கள் தம் எண்ணங்களுக்கு எதிர்வினைகளை உடனே பெற முடிகிறது என்று அவர் கூறுவது விவாதத்திற்குரிய ஒரு கருத்து.என் முப்பத்தைந்து ஆண்டு கால அனுபவத்தில் அச்சில் வரும் நமது படைப்புகள் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கடைசி வரை தெரியாமலே போகிற நிலைதான் பெரும்பாலும்.இன்றைய சூழலில் திரையுலகம் சார்ந்து  இயங்கும் எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் பாபுலாரிட்டியின் விளைவாக அவர்களின் படைப்புகள் உடனுக்குடன் நூல் வடிவம் பெறவும்,அவை உடனே வாசகர்கள் கைகளில் சென்று சேரவும்,அவர்கள் அந்தப் படைப்புகள் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் வாயிப்பு இருக்கலாம்.ஒரு காலம் இருந்தது.அப்போது அகிலன்,கல்கி,தீபம்.நா.பார்த்தசாரதி,சாண்டில்யன்....இப்படிப் பல எழுத்தாளர்கள் மிகப் பிரபலங்கள் ஆக தமிழ்ச் சூழலில் இருந்தார்கள்.எழுதுபவர்கள் மிகக் குறைவு;வாசகர்கள் அதிகம். இப்போது போல தொலைக்காட்சியோ,இண்டர்நேட்டோ இல்லாத காலம் அது.எனவே மேற்கண்ட எழுத்தாளர்கள் எழுத்து படைப்புகளில் மனம் பறிகொடுத்து நாங்கள் எல்லாம் பைத்தியங்கள் போலத் திரிந்தோம்.தமிழ்வாணன் எழதிய  சங்கர்லால் துப்பறியும் கதைகளை வரும் சங்கர்லாளையும்,இந்திராவையும்,கத்தரிக்காயையும் உண்மையான மனிதர்கள் ஆகவே   நினைத்துக் கொண்டு கடிதம் எழுதுவோம்.தமிழ்வாணன் தானேதுப்பறியும் நிபுணராக வரும் கதைகள் படித்த பின் அவர் போலவே கற்பனையில் திரிந்து வந்திருந்த காலங்கள் நினைவிலாடுகின்றன.நா.பா.வின் குறிஞ்சி  மலரும்,பிறந்த மண்ணும், poன்விலங்கும் இன்னும் பல நாவல்களும் படித்த பின் அவரின் கதாநாயகர்கள் அரவிந்தன்,சத்யமூர்த்தி,நவீனன்,போலவும் பெண்களில் பூரணியையும்,மோகினியையும்,சுரமஞ்சரியையும் போலவும் வாசகர்கள் கற்பனை செய்து கொள்வது மிக சாதாரணம்.இன்று எழுதும் யாருக்கும் அப்படி ஒரு வாசகப் பரப்பு இல்லை.வலைப் பதிவுகள் இன்று வீட்டில் இருந்து கொண்டே யாருடைய தயவும் இன்றி அவரவர் எண்ணங்களை உடனுக்குடன் உலகம் எங்கும் சென்று சேரும் வகையில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யக் கூடிய ஒருஅற்புதமாக இருக்கின்றன.ஆயிரமாயிரம் வலைப் பூக்கள் மலரட்டும்............!

Thursday, November 19, 2009

kalviyin karaikalil......................!

நேற்று என் இடுகையில் கவிஞர் யுகபாரதியும் நானும் உரையாடிய ஒரு அனுபவம் ஒன்றைப் பதிவு செய்திருந்தேன். படிக்காத மனிதர்களுக்கு கல்வி போய்ச் சேர வேண்டும் என்று பாடுபடும் பலர் ஒன்றும் பெரும் அதிகாரம் படைத்தவர்கள் ஆகவோ,பெரும் செல்வந்தர்கள் ஆகவோ இருப்பவர்கள் அல்ல என்ற உண்மையை அவர் சொன்ன ஒரு நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.இந்தக் கருத்து என் சொந்த அனுபவத்தில் பல அற்புதமான மனிதர்களைப் பார்த்தும் பழகியும் நேரடியாக உணர்ந்த ஒன்று.இந்தியா விடுதலை பெற்ற பின் நாம் அமைத்த முதல் கல்விக்குழு கோதாரி குழு ஆகும்.அதன் முதல் செயலாளர் ஆக இருந்தவர் திரு.ஜே.பி.நாயக்.உநேச்கோ அமைப்பினால் உலகின் சிறந்த கல்வியாளர்களின் பட்டியலில் குறிப்பிடப் பெற்றவர் இவர்.இவர் எழுதிய "கல்விக்குழுவும்,அதன் பிறகும்"என்ற நூலில் இந்தியக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று கோத்தாரி குழு எதிர்பார்த்ததோ அந்த மாற்றங்கள் நடந்ததா என்று திறந்த மனதுடன் நேர்மையாக ஆராய்கிறார்.தான் தயாரித்ததுதான் என்றாலும் அந்தக் குழு அறிக்கையைக் கூட விமர்சன பூர்வமாக அணுகி,அதன் பலவீனங்களை,விடுபடல்களை,-ஏன்,அதன் போதாமையைக் கூட வெளிப்படையாக எழுதி இருக்கிறார்.அதன் முன்னுரையை எழுதி இருப்பவர் மொல்கம்  எஸ்.அதிசெசய்யா.அவர் தன முன்னுரையில்,"எந்த ஒரு நாட்டிலும் அதனுடைய கல்வி வாழ்க்கை என்பது படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் போன்றது;அது கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்ரைச் செழுமையான உள்ளேடு ஆகக் கொண்டு உயிர்ப்புள்ள நீர்ப் பெருக்காயிப் பாயும்"என்கிறார்.நமது இந்தியக் கல்வித்துறையின் வரலாற்றைத்  திரும்பிப் பார்த்தல் அவசியம்.அவ்வாறு பார்க்கும் பொது அது மேற்க்கண்டவாறு தொடர் நீரோட்டம் ஆக இருப்பதை உணர முடியும்.ஆனால் படிப்படியாக அது மாறிக் கொண்டே வந்திருக்கிறதா,கடந்த கால வரலாற்றில் இருந்து செகரித்தவற்றைச் செழுமையான உள்ளீடாக அது தன்னுள் உள்வாங்கி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.இன்றும் நம் நாட்டுப் பெண்களில் கிட்டத் தட்ட நாற்பது சதவீதம் பேர் படிக்காதவர்கள் என்பதை நினைக்கும் வேளையில் மனம் மிகவும் கனமாகி விடுகிறது.இந்தச் சூழலில்தான் பிறரைப் படிக்க வைக்க பஸ் நிலையத்தில் படுத்துத் தூங்கிக் கூட சேவை செய்யும் அசாதாரணமான சேவையாளர்களை நன்றியுடன் வணங்க வேண்டிஇருக்கிறது................!

Monday, November 16, 2009

சாதாரண மனிதர்களின் அசாதாரண சேவைகள்...

நேற்று கவிஞர் யுகபாரதியுடன் ஒரு மணி நேரம் உரையாடல் நிகழ்த்த முடிந்தது.அவர் சொன்ன ஒரு செய்தி மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. அவர் நெடுக் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு பற்றியது அது."வெளிச்சம்" என்ற ஒரு சேவை அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில் ஐம்பது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்று நாம் கூறுகிற பிரிவினர். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சேவை அமைப்பின் உதவியை மட்டுமே கொண்டு பட்டம், பட்டயம் போன்று கல்வித் தகுதி பெற்று விட்ட மாணவர்கள். இவர்கள் கல்வி பெற வேண்டும் என்று பாடுபட்டவர் இந்தச் சேவை அமைப்பின் நிறுவனர் ஆக உள்ள ஒரு பெண். அவர் மாணவர்களின் கல்விக்காக அலைந்து திரிகிற வேளையில் தங்க இடம் கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் கூடத் தன்  மாணவர்களுடன் தங்கி இருக்க நேர்ந்திருக்கிறது. இந்த வகையில் படித்த அம்மாணவர்கள் இப்போது தங்களைப் போல உள்ள பிற மாணவர்களின் கல்விக்குப் பாடுபடுகிறார்கள். என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்து இன்னும் இருபது பேருக்கு பீஸ் கட்டுகிற ஒரு மாணவனை பற்றிச் சொன்ன சமயம் கண்கள் குளமாகின. வேதனை என்ன என்றால் இந்த மாணவர்களின் நிலைமை நன்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் படிக்கும் நிறுவனங்கள் இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பைசா கூடக் குறைத்துக் கொள்வது இல்லை. தனது கல்விக்கு, பூஜை செய்து    கிடைக்கும் அர்ச்சனை தட்டுக் காசுகளைக் கொண்டு உதவிய ஒரு பூசாரி பற்றி மனம் நெகிழ்ந்து சொன்னார், யுகபாரதி.தன "நடைவண்டி நாட்கள்" நூலில் இது பற்றி எழுதி இருப்பதாகவும் சொன்னார். கேட்கும் போதே மனம் சுமையாகி கனக்கிறது. "இந்த நாட்டில் மட்டும் தான் படிப்பதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கிறது" என்றார் அவர். இன்று மிக வெற்றிகரமான பாடல் ஆசிரியர் ஆகி விட்டாலும் தன முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில் தயக்கம் எதுவும் இல்லை அவரிடம். இந்த அனுபவம் எனது எழுத்தறிவுப் பணியில் நான் பெற்ற பல அனுபவங்கள் குறித்து நினைவு கூர்ந்து நெகிழும் வாய்ப்பைத் தந்தது. கிராமப் புற மக்கள் புதிதாக எழுதப் படித்துத் தெரிந்து கொண்டு முதல் முதலாக சில எழுத்துக்களை எழுதிக் காட்டும் வேளையில் அவர்களின் கண்களில் மின்னும் மகிழ்ச்சிப் பிரவாகம் நம்மை மலைக்க வைக்கும். எழுத்தறிவின் அவசியம் பற்றி அவர்கள் நடுவே முதல் முதலாகக் கலை நிகழ்ச்சி நடத்திய கலைக்குழுவிற்கு இரவு உணவை கிராம மக்களே சில சமயம் வழங்குவது உண்டு. அவ்வாறு உணவு போடும் அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. மிக எளிய மனிதர்கள் அவர்கள். அந்தக் குடும்பம் முழுவதுமே பரிமாறும்.உணவை முடித்துக் கொண்டு  வெளியே வரும் வேளையில் அக்குடும்பத்தினர் கண்களில் தெரியும் பெருமிதம் இருக்கிறதே, அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. கடந்த பத்தொன்பது ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் காரணம் இந்த மாதிரிச் சாதாரணமானவர்கள் செய்ய முன்வரும், செய்து கொண்டே இருக்கும் அசாதரணமான சேவைகளைத் தினமும் நேரடியாகப் பார்க்கும் ஒரு வேலையாக அது இருந்ததே. வேறென்ன சொல்வது?...!

Sunday, November 15, 2009

sithaayanamum raamaayanamum....................

ராமாயணம் நமது இதிகாசங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் இன்னும் உயிர்த்துடிப்புடன் மக்கள் மனங்களில் இடம் பெற்ற கதை இது.இக்கதை நாயகன் ராமன் தான் பிரதானமாக முன் வைக்கப் படும் பாத்திரம்.ஆனால் உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவில் அனேகமாக எல்லா மொழிகளிலும் பல வகையான ராமாயணக் கதைகள் வழக்கில் உள்ளன.இவற்றில் சீதா முக்கியப் பாத்திரம் ஆக இடம் பெறுவது நம் கவனத்திற்கு வந்திருக்குமா?சந்தேகம்தான்.இது பற்றி இன்று கன்னட மொழிக் கவிஞரும்,எழுத்தாளருமான சிவப்ப்ரகாஷ் எழுதி உள்ள "சீதாயணம்"என்ற கட்டுரை பல சிந்தனைகளை முன் வைக்கிறது.ராமாயணத்தின் புகழுக்குக் காரணம் அது ஒரு ஆன்மீக இலக்கியம் என்பதுவா?  அல்ல.நமது நாட்டின் எல்லா மதப் பிரிவுகளும் அவரவர் சொந்த ராம காதைகளை கொண்டுள்ளன.புத்த மதம் சார்ந்த தாய்லாந்து நாடும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவும் அந்தந்த நாடுகளுக்கே உரிய ராமாயனங்களைக் கொண்டுள்ளன.ஆனால் மக்கள் நடுவே ராமன் கதை பெற்றுள்ள புகழ் அது மனித உணர்வுகளின்வேறு வேறு வண்ணங்களைக் காவியம் ஆகி இருக்கிறது என்பதே.நமது பழ்ங்குடி மக்களின் நடுவே உலவும் நாட்டுப்புறக் கதைகளிலும்,பாடல்களிலும் புழங்கி வரும் ராமாயணத்தில் ராமனின் முக்கியத்துவம் குறைவே.சீதைக்குத்தான் புகழ் எல்லாம்.கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புறப் பாடல் இப்படி அமைகிறது.:"ஜனகனின் இளவரசி காட்டில் ஒரு தொட்டிலில் லவனையும் குசனையும் தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.இனிய தாலாட்டுப் பாடல்கள் பாடுகிறாள்.."என்பதே அது.அந்த மாநிலத்தில் தும்கூர் பகுதியில் ஒரு படிக்காத பெண் சொன்ன கதையில் அக்னிப் பிரவேசம் செய்யும்படி சீதையிடம் ராமன் சொல்வதாகக் கதை இல்லை.மாறாக,சீதை தன கற்பை நிரூபிக்க பல காலமாக மலடாக இருந்து வரும் மரம் ஒன்றை பூக்கச் செய்து,காயிக்கச் செய்தால் போதும் என்பதே ராமனின் நிபந்தனை.அதன்படி சீதை அந்த மரத்தைத் தொடுகிறாள்.உடனே அந்த மரம் பூத்துக் குலுங்குகிறது.காய்கள் தொங்குகின்றன.என்ன அற்புதமான உணர்வு? இது போலவே மாபெரும் கவி பவபூதி தன உத்தர ராமாயணத்தில் ராமனும் சீதையும் இறுதியில் ஒன்று சேர்வதாக முடிக்கிறார்.ஆனால் வேறு பல ராமாயணங்களில் சீதையின் முடிவு பூமித் தாயிடம் சரண் புகுந்து மறைவதாக அமைகிறது.ஆந்திராவின் பெண் போராளி சிநேகலதா ரெட்டி எழுதிய கதையில் சீதை தன கற்பு பற்றி சந்தேகப் படும் ராமனிடம் கடும் விவாதம் நடத்திய பிறகும் அவன் மனம் மாறாதது கண்டு கொதித்து எழுந்து அவனை நிராகரிப்பதாகக் கூறுகிறார்.தமிழ எழுத்தாளர் புதுமைப் பித்தன் தன சிறுகதையில் சீதையைத் தீயல் இறங்கச் சொல்லி ராமன் சொன்னதாகக் கேட்டதுமே "ராமனே சொன்னாரா?"என்று திரும்பத் திரும்பக் கேட்ட பின் இறுதியில் "அவனே சொன்னானா?"என்று கேட்டு, சீதை "ஆம்,ராமனே சொன்னதுதான் இது"என்று சொன்ன உடனே அகலிகை மறுபடி   கல் ஆகி விட்டதாக ஒரு கடும் விமர்சனத்தைக் கதை மூலம் வைக்கிறார்.இது போன்ற பல உதாரணங்கள் சீதைக்கே ராமனை விடப் பெரும் புகழ் இருப்பதாக நிரூப்க்கின்றன  என்கிறார் சிவப்பிரகாஷ்.மறுவாசிப்பு என்பது இதுதான்...........!

Saturday, November 14, 2009

sathyajith ray -unnikrishnan-isaiyum thiraiyum..............

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவது பற்றிப் பயணங்கள் முடிவது இல்லை என்று நினைத்துப் பார்க்கிறோம்.சற்று முன் படித்த ஓரிரு விஷயங்கள் நினைவில் அலை மோதுகின்றன.தனது இசைப் பயணம் பற்றி நினைவு கூர்ந்து அவர் சொல்வது நம் கவனத்திற்கு உரியது.தன அன்னையும் தந்தையும் அளித்த உத்வேகம்,வழிகாட்டுதல்,ஒரு போட்டியில் கிடைத்த பரிசு இவைதான் தனது இசைத் துறை வெற்றிக்குக் காரணம் என்கிறார்.டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் ஆக இருந்த உன்னிகிருஷ்ணன் இன்று மக்கள் மனங்கவரும் பாடகர்."என்னவளே அடி என்னவளே..."பாடல்தான் அவரின் முதல் திரைஇசைப் பாடல். அந்த ஒரே பாடலில் அவர் புகழின் உச்சிக்குப் போக முடிந்தது.சிறந்த பின்னணிப் பாடகர் என்ற தேசிய விருதையும் இந்த முதல் பாடலில் அவர் பெற முடிந்தது.இது திரை இசையில் வெற்றி பெற்ற ஒருவரின் அனுபவம்.திரைப் பட இயக்குனர் என்ற வகையில் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் வங்க மொழித் திரை இயக்குனர் சத்யஜித்ரே மற்றொரு உதாரணம்.உபெந்திரகிஷோர் என்ற கலைஞர் எழுத்து,இலக்கியம்,ஓவியம் போன்ற கலைகளில் சிறந்தவர்.ஆனால் தன திறமைக்கு ஏற்ற புகழை அடைய அவரால் முடியவில்லை.அவரது மகன் சுகுமார் ரேயும்சிறப்பான கலைஞர்தான். அவரும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.இவரது மகன் சத்யஜித் தாத்தா வின் கனவை நனவாக்கினார்.இவரது மூன்று வயதில் அப்பா இறந்து விட,அம்மா சுப்ரபா தான் தனி ஆளாக மகனை ஒரு திரை கலைஞராகி வெற்றி காணச் செய்தார்.தன அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை ஒரு உலகறிந்த திரைப்பட இயக்குனர் ஆக்கியது என்று பின்னாளில் ரேயே இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா-ஆகிய படங்கள் உலக அளவில் பாராட்டுக்களையும்,விமர்சனங்களையும் பெற்றவை.சாருலதா படத்தில் நமது கலாச்சார மதிப்பீட்டில் பெரும்விமர்சனத்தை முன் வைத்திருந்தார் ரே.ஓவியம்,நுண்கலைகள் பயின்ற திரைக்கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.தமிழ்த் திரைக் கலைஞர் சிவகுமார் போலவே ரேயும்.எந்த மொழியானால் என்ன?சிறந்த கலைஞர்களின்  வாழ்க்கைப் பயணமும் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதை உணர முடிகிறது...........!

Friday, November 13, 2009

பயணங்கள் முடிவதில்லை...

திங்கள் அன்று எதிர்பாராமல் கோவைக்குப் பயணிக்க நேர்ந்தது.அம்மா கீழே விழுந்து விட்டார்கள்.மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் அம்மாவுக்கு இந்த வயதில் இப்படி ஒரு சோதனை. எப்போதுமே எங்கள் ஊருக்குப் போவது என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.பூசாரி பட்டியில் இரங்கி நடந்தே போவது இன்னும் அதிகப் பிடித்தம்.சென்ற முறை என் இடுகையில் ஊர் சுற்றிப் புராணம் பற்றி எழுதி இருந்தேன்.அந்தப் புத்தகம் படிக்கும் முன்னரே ஊர் சுற்றுவதில் பெரும் ஆர்வம் உடையவன் என்றாலும் அதன் பிறகு இன்னும் பல மடங்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.ஒரு முறை எட்டாம் வகுப்பு படிக்கையில் கோடை விடுமுறை வந்தது. அந்த லீவில் கேரளாவில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. கொச்சின் அருகே எர்ணாகுளத்தை அடுத்த குட்டித் தோடு என்ற ஒரு சின்ன ஊரில் பெரியப்பா இருந்தார்.அந்த ஊரின் வெளியே சின்ன ஆறு போல கடல் நீர் ஓடும் காயல் என்ற நீர் ஓடை ஓடிக் கொண்டிருக்கும். படகுகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.அந்த ஊரில் சுமார் ஒன்றரை மாதம் வரை இருந்தேன். இன்னும் பசுமையாக இருக்கிற நினைவுகளை அந்த ஊரில் இருந்து அப்போது அந்தச் சிறு வயதில் சுமந்து கொண்டு திரும்பி இருந்தேன். இருக்கையில் பார்த்த மூன்று மலையாளப் படங்களில் இரண்டு நன்றாக நினைவு இருக்கிறது.  ஒன்று எம்.டி.வாசுதேவன் நாயரின் "இருட்டிண்டே ஆத்மாவு".மற்றது "கனக சலங்கை"இந்தப் படம் யாருடையது என்பது நினைவு இல்லை.ஆனால் இருளில் ஆத்மா என்ற படம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.மன நிலை சரி இல்லாத ஒரு இளைஞனின் கதை இது.கனக சலங்கையின் கதை இசையார்வம் மிக்க நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கதை என்று மங்கலாக கொஞ்சம் நினைவு வருகிறது. அங்கு பார்த்த படங்கள், படகுகளில் சரக்குகளையும் மனிதர்களையும் ஏற்றிக்  கொண்டுசெல்லும் கேரளா படகோட்டிகள், அந்த ஊருக்கு அருகில் கண்ட ஒரு கோவில் திருவிழா, அலங்கார யானைகளின் முகபடாம்,வான வேடிக்கைகள், தென்னை மரங்கள் இனிமை கொஞ்சும் மலையாள மொழி,குழாய்ப்புட்டு, இப்படியாக நினைவு அடுக்குகளில் பதிந்தவற்றில் பல நினைவுகளை ஊர் திரும்பிய  பிறகு "மலை நாட்டுத் தென்றலில்..." என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரையாக எழுதினேன். எந்தப் பத்திரிகையில் என்று கேட்டு விடாதீர்கள்.நான் லீவு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குப் போனதும் அங்கு தினமும் பயிற்சி நோட்டில் ஒரு பக்கம் நல்ல கையெழுத்தில் எழுதிக் கொண்டு வரும்படி ஆசிரியர் சொல்லுவார். அந்த நோட்டில்தான் என் பயணக் கட்டுரைத் தொடர் இடம் பெற்றது. இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே?ஆசிரியர் ஒன்றும்  சொல்லாமலா இருந்தார் என்ற சந்தேகம் வருவது நியாயம்தானே?ஆனால் தினமும் நான் என் பயண அனுபவங்களை எழுதுவேன். நோட்டு ஆசிரியர் பார்வைக்குப் போகும். சிவப்பு மையில் ஒரு ரைட்போட்டு அவரின் இனிடியலையும் போடுவார் அவர். ஒருக்கால் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்காமலே திருத்தினாரோ? அது சரி, வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்கள் தினமும் எழுதும் அவ்வளவு கட்டுரை நோட்டுகளையும் படித்துப் பார்த்துக் கை எழுத்துப் போடுவது நடக்கிற காரியமா? 

Sunday, November 8, 2009

oor sutrip puraanam...............

ஊர் சுற்றிப் புராணம் என்ற புத்தகத்தை ராகுல சங்கிருத்தியாயன் எழுதி இருக்கிறார்.இவரின் பல புத்தகங்கள் மிகப் புகழ் பெற்றவை.இந்தப் புத்தகத்தில் ஊர் சுற்றுவது பற்றி அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதி இருக்கிறார்.ஊர் சுற்றி என்றால் பொதுப் புத்தியில் மிகத் தாழ்வான எண்ணமே இருக்கிறது.ஆனால் இந்தப் புத்தகம் படிப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.அவ்வளவு வலிமையான வாதங்களை ஊர் சுற்றுவதற்கு ஆதரவாக எடுத்து வைக்கிறார் ராகுல்ஜி. "ஊர் சுற்றிப் புராணம் எழுத வேண்டிய தேவையை நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.என்னை போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து  கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.வாசகர்களின் மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கம் அல்ல.அதற்குப் பதிலாக அந்த என்னத்தை வலுப்படுத்த வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்" என்கிறார் இவர்."உலகத்தில் உள்ள தலை சிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும்.ஊர் சுற்றுவதை விட மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளால் தான்இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர் சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான்.விவசாயம்,தோப்பு துறவு,வீடு வாசல் எதுவும் இல்லாத அவன் வானத்துப் பறவைகளைப் போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்......"இப்படித் தொடங்கும் புத்தகம் முழுக்க ஊர் சுற்றும் உயர்ந்த விரதம் வேறு எதுவும் இல்லை என்று நிறுவுகிறது.பகவான் புத்தர்,மகாவீரர்,குரு நானக் போன்று உலகின் பல மகா மனிதர்கள் அனைவரும் ஊர் சுற்றிகள் ஆகத்தான் இருந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி.அவ்வாறு ஊர் சுற்றியதன் மூலமே மனிதஇனம்  இன்று அடைந்துள்ள அணைத்து முன்னேற்றங்களையும் அடைந்து உள்ளது என்று பல உதாரணங்களுடன் விவரிக்கிறார்.மிக அற்புதமான நடையில் இந்த நூலை மொழி பெயர்த்து இருப்பவர் ஏ.ஜி.எத்திராஜுலு.என்கிற முன்னோடி மொழி பெயர்ப்பாளர்.ராகுல்ஜியின் நூல்களில் மட்டுமே பன்னிரண்டுக்கு மேற்பட்ட நூல்களை தமிழுக்குத் தந்தவர் இவர்.பயன் கருதாமல் உலகம் சுற்றி வரும் ஊர் சுற்றிகளின் அனுபவங்கள் மனிதர்களின் முன்னேற்றம்,வளர்ச்சி,இலக்கிய-கலாசார உலகில் பெரும் படைப்புகள் தோன்றி வளர உதவி இருப்பது நாம் அறிந்த உண்மை,அல்லவா?     தமிழில் இது போன்ற பயண இலக்கியங்கள் ஏராளமாக வந்து இருக்கின்றன.சிலப்பதிகாரக் காப்பியமே ஒரு வகையில் பயணம் சென்று ஒரு தம்பதியர் அடைந்த துன்பங்களின் கதை தானே?நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் பல பயண நூல்கள் ராகுல்ஜியின் கருத்துக்கள் உண்மைதான் என்று நிறுவுகின்றன.தி.ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி','உதய சூரியன்'போன்றவை;'சிட்டி' சிவபாத சுந்தரம் அவர்களின் 'சேக்கிழார் அடிச் சுவட்டில்',புத்தர் அடிச் சுவட்டில்''மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில்,' இப்படிப் பல புத்தகங்களைச் சொல்லலாம்.ஊர் சுற்றுகிற அனுபவங்களின் அடிப்படையில் இன்றும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் மிக நல்ல கட்டுரை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருவது நாம் அறிந்ததே.கோணங்கி என்கிற நவீன ஊர் சுற்றியின் அனுபவங்களை அவர் விவரிக்கும் சமயத்தில் நேரில் கேட்பவர்கள் அந்த அனுபவங்களை எந்த வார்த்தையில் விளக்க முடியும்? ராக்ல்சி என்கிற ஊர் சுற்றி முன்னோடியின் புராணம்,கட்டுக் கதைகளின் தொகுப்பு  அல்ல.ஒரு பயன் கருதா கர்ம யோகியின் சிரத்தை மிக்க கருத்துலகம்...............!

Friday, November 6, 2009

இன்றும் வல்சனின் சிந்தனைகள்...



நவம்பர் இரண்டாம் தேதி அன்று சிற்பி வல்சன் கொலேரியின் சிந்தனைகள் சிலவற்றை இட்டிருந்தேன். பலரின் கவனத்தில் அது பதிந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.அவரது சிந்தனைகள் மிகவும் யோசிக்க வைக்கின்றன ஒரு கலைஞன் சமூகப் பிரஞ்கை உடையவன் ஆக இருந்தால் அவனது கலையில் அது எந்த அளவுக்குச் சமூக நிகழ்வுகள் பிரதிபலிக்கும் என்பது நமக்குப் புரிகிறது அவரின் சிந்தனைகளில் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம் .: "ஓவியம், சிற்பம் இவை மெத்தப் படித்த, கலையுணர்வு மிக்க மேல் தட்டு மனிதர்களுக்கானவை என்று பொதுவான நினைப்பு இருக்கிறது; அது சரியல்ல.. நம்மெல்லோருக்குள்ளும் இருக்கும் கலைஞனை பலரும் இறுதி வரை உணராமலே ஆகி  விடுவதுதான் பெரிய சோகம்" என்பது இவர் கருத்து ஆர்வமும், ஈடுபாடும் உள்ள எந்த ஒரு மனிதனும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் அற்புதமான கலைஞனாக முடியும். பார்வையற்ற மனிதர்களால் கூடச் சிற்பங்களை ரசிக்க முடியும் என்று இவர் சொல்லும் போது நமக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. அவரே சொல்கிறார்: "சிற்பம்-பார்க்கப் படுகிற ஒன்று மட்டும் அல்ல; விசுவல் ஆர்ட் மட்டும் அல்ல அது. எனது கண்காட்சி ஒன்றில் வாய்த்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிற்பங்களை கண் பார்வை அற்ற இருபது-முப்பது மாணவர்கள் வந்திருந்து "பார்த்தார்கள்". அவர்களாக ஒவ்வொன்றையும்  தொட்டுப்  'பார்த்து' அனுபவித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவகாரங்களை பார்வையுள்ளவர்கள் கூடச் செய்ய முடிந்தது இல்லை. முழு உலகையுமே 'பார்க்க' அவர்களால் முடிகிறது. நமக்குத்தான் பார்வை தீட்சண்யமாக இல்லை. முட்டுச் சந்துகளில் நின்று விடுகிறது நம் பார்வை. ஆனால் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் உணர்த்த முடிகிற மாதிரி ஒரு தகவல் தொடர்பு இருக்கிறது- பறவைக் கூட்டத்தில் ஒரு பறவை தவறி விட்டாலோ அடிபட்டு விழுந்து விட்டாலோ கூட்டம் முழுவதும் உடனே அதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்து விடுகிற மாதிரி...." ....உண்மைதான்! 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நகரங்களிலும், பாரீஸ் உட்பட சர்வதேச நகரங்களிலும் ஏராளமான கண்காட்சிகளை நடத்திப் புகழ் பெற்றவரான வல்சன் கொலேரி, அனுபவப் பூர்வமாக ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன்  சொல்லுகிற இம்மாதிரி உண்மைகளை எப்படி மறுக்க முடியும்?

Monday, November 2, 2009

nava naveenak kuralkal............

இன்று தமிழ எழுத்தாளர்கள் நடுவே நிகழ்ந்து வரும் சில விவாதங்கள் படிக்கப் படிக்க வேதனை அளிப்பதாக உள்ளன.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சாதி குறிப்பிட்டுத் திட்டிக் கொண்டு இருப்பதுதான் அது.நவீன,நவ நவீன,அதி நவீனக் குரல்களாகத் தமது குரல்களைத் தாங்களே குறிப்பிடுவது இன்னொரு கொடுமை.நமது சமூகத்தின் அழிக்க முடியாத அநீதியாக நீடித்து இருந்து வரும் சாதி சார்ந்த பார்வைகளை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் இன்று தூக்கிப் பிடிப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.மிகப் புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளர்கள் கூட இதற்குஅப்பர்ப்பட்டவர்கள்  அல்ல என்பது வேதனை.படைப்புக்களில் எங்கேனும் அவரவர் சாதி அம்சங்கள் அவர்களை அறியாமலேயே பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.அவரவர் குடும்ப,கலாசார,பழக்க வழ்க்கங்கள் இம்மாத்ரிப் பிரதிபலிக்கும் போது அவர்கள் சாதி உணர்வுடன்தான் இந்த இடத்தில இன்ன மாத்ரி எழுதி இருக்கிறார்கள் என்று முத்திரை குத்துவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் இன்று  மிக அதிகம் ஆகி விட்டன.இதன் மூலம் சமூகப் பரப்பில் இருந்தே துடைத்து எறியப் பட வேண்டிய ஒரு அவலத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்து மீண்டும் ஒரு பெரும் அழிவுச் சக்தியாக வளர்க்கிறார்கள்.ஏற்கனவே பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகள் இந்த சாதி வெறிக்கு நீர் ஊற்றி உரம் இட்டுப் பேரு மரமாக வளர்த்து விட்டாயிற்று.மானுட மேன்மைக்குப் பாடுபட வேண்டிய இலக்கியத்திலும் இந்த அவலமா?

Sunday, November 1, 2009

ammy kothavum sirpi thevaithaan........

நேற்று என் வலைப் பதிவில் சிற்பி வல்சன் கொலேரியின் அனுபவப் பதிவுகளை அவரின் நேர்காணல் ஒன்றில் இருந்து இட்டிருந்தேன்.என் கட்டுரை தொகுப்பில் அது இடம் பெற்று இருக்கிறது.இன்றும் அவரது கருத்துக்களில் இருந்து சிலவற்றைக் காணலாம்.:"உடைந்த அம்மிக் கல்லில்,தன தாயார் நீண்ட காலம் வீட்டில் புழங்கிய பழைய வெண்கலப் பாத்திரத்தில் உயிர்த் துடிப்பு மிக்க சிற்பங்களை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் :  ".....பழைய அம்மிக்கல்-அர்த்தம் நிறைந்த ஒன்று.அது உடைந்து துண்டுகளாக ரோட்டில் கிடக்கும் போது பல நூற்றாண்டுகளாக இந்திய உழவர்களின்  வரலாற்றைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடப்பது போல் தோன்றுகிறது எனக்கு,அந்த மாற்றிக் கிடக்கிற கல்லின் அழகினை உளி கொண்டு சிதைக்க எனக்கு மனமில்லை.எந்தக் கல்லிலும்,எந்த மரத்த துண்டிலும் எஅதோ ஒரு சொவ்ந்தர்யம் இருக்கத்தான் செய்கிறது.அதை என் கெடுக்க வேண்டும்?   எந்தச் சிற்பம்,எதனால் செய்யப் பட்டு இருக்கிறது என்று பார்பவருக்குத் தெரிய வேண்டும்.எந்தப் பக்கம் திருப்பினாலும் ஒரு சொவ்ந்தர்யம் இருக்க வேண்டும்....மெடீரியல் வங்கக் காசு இல்லாத போது-உடைந்த செங்கற்களை எடுத்து மணிக் கணக்கில் உரசி கிரைந்து பண்ணி நூற்றுக் கணக்கான kkyubuகளை உருவாகுவதற்குப் பயன்படுத்தினேன்.நல்ல கலைக்கு பற்றாக் குறைதான் உந்துதலாகக் கூட இருக்கிறது,மிக்கேல்-அஞ்சலோவின் 'டேவிட்' உருவானது கூட இதுபோல்தான்..."     வல்சனின் சிற்பங்கள் ஏதோ வெறும் ஆத்மா திருப்திக்காக வடிவமைக்கப் படுகிறவை அல்ல........திறவுகோலே என்று ஒரு சிற்பம்.புது டில்லி lalitha கலா அகாடமியின் முகாமிற்குச் சென்ற வல்சனின் கண்களில் கட்டி முடிக்கப் பட்டுப் பல ஆண்டுகளாகியும் பயன்படுத்தப் படாமல் மூடிக் கிடந்த "ஜவகர்லால் நேரு கலாகேந்திரா "கட்டிடம் பட்டிருக்கிறது."அதைத் திறந்து பயன்படுத்துங்கள் "என்று மொவுனமாக வலியுறுத்துகிற ஒரு சிற்பம்தான் திறவுகோலே ஆக வடிவு எடுத்துநின்றது...."சாலைகளை அகலப் படுதுவதர்க்காகப் பல ஆண்டுகளாக நிழாலும் கனிகளும் தந்து வந்திருக்கிற நெடிய மரங்களை வேருடன் தோண்டிப் போடுகிறோம்.அந்த மரங்களின் கதறலை நாம் ஒரு கணமேனும் கேட்டிருப்போமா?ஒரு பத்து நிமிடம் நம்மால் சேர்ந்தார்ப் போல் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டே நின்றிருக்க முடிகிறதா?....ஆனால் சாலை ஓரங்களில் அய்ம்பது,அறுபது ஆண்டுகளாகத் தனது கிளைகளை நீட்டியபடியே நிzaலையும், கனிகளையும் நமக்குத் தந்து கொண்டே அயராமல் இருந்து வந்த மரங்களின் கதரல்களைச் சட்டையே பண்ணாமல் அவற்றை வட்டிப் போட்டு விட்டு சாலை அமைப்பதில் சந்தோசப் படுகிறோம்.கொச்சின் அருகே ஒரு முகாமில் பங்கேற்ற போது -அருகில் இருந்த சாலையை அகலப் படுத்துவthaற்காக ஒரு பிரமாண்டமான மரத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள்.இருபது,முப்பது பேரை அழைத்துக்கொண்டு சென்று தோண்டி போடப்பட்டிருந்த மரத்தின் வேர்களைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தேன்.முகாமில் இயல்பாய் வளர்ந்து இருந்த சிருகொடிகள்,வேரடி மண்ணோடு சாய்ந்திருக்கும் மரச் சரிவில் முளை விடுவது போன்ற சிற்பமாக வடிவமைத்தேன்.-அதைப் பார்க்கிற எந்த மனித மனதிற்கும்,எதிர்காலத்தில் எந்த இடத்திலும் இம்மாத்ரி மரங்களை வெட்டும்போது கொஞ்சமேனும் உறுத்தல்,தயக்கம் ஏற்படாமல் இருக்காது,...."என்கிறார் வல்சன் கொலேரி.அம்மி  koத்த சிற்பி எதற்கு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதி இருந்தார்.சினிமாப் பாடல் எழுதுவதற்கு தன போன்ற கவிஞர்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் அப்போது அக்கருத்தினை எழுதியிருந்தார்.ஆனால் சிற்பியான வல்சன் கொலேரியின் அனுபவத்தில் அம்மி கொத்தவும் சிற்பி தேவைதான் என்று நிரூபணம் ஆகி இருக்கிறதே?  

Saturday, October 31, 2009

நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி...

சிற்பம்,சிற்பக்கலை என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே,பொதுவாக நமக்கு பாரம்பரியச்சிறப்பு மிக்க கோவில்களில்,தூண்களிலும்,கோபுரங்களிலும்,பிராகாரச் சுவர்களிலும் நிறைந்திருக்கிற கர்ச்சிலைகளே நினைவுக்கு வருகின்றன.அவற்றைப் பற்றி சிர்ப்பக்களை வல்லுனர்கலால்தான் பேச முடியும்;அவற்றை ரசிக்க முடியும்-என்ற உணர்வுதான் நமக்கு இருக்கிறது.

உண்மையில் அது அப்படித்தானா?நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்த நுண்கலைகள் பற்றி அறிவதர்க்கோ,உணர்ந்து அனுபவிப்பதற்கோ ஒன்றுமே கிடையாதா?

"அப்படி இல்லை!நம் எல்லோரிடத்திலும் ஒரு சங்கீதக் காரன் இருக்கிறான். சிற்பியும், ஓவியனும் கூட.அதனால்தான் நம்மால் இசையை ரசிக்க முடிகிறது.நாம் போடுகிற சட்டை,பண்ட்டுகளுக்கு கலர்கோம்பிநேடின்,மாட்சிங் பார்க்கச் செய்வது நம்முள் இருக்கும் ஓவியந்தான்...."என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சிற்பி வல்சன் கொலேரி.

பல புகழ் பெற்ற சிற்பிகளையும்,ஓவியர்களையும் உருவாக்கிய சென்னை கலை-கைத் தொழில் கல்லூரியில் பயின்றவர்தான் இவரும்.சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு,சத்தச் சீரழிவு போன்று இன்றைய நவீன யுகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன்,இந்திய சிற்பக்கலை மரபின் நீண்ட செழுமையான பாரம்பரிய அம்சங்களை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருப்பது வல்சனின் பாணி ஆகும்.       

"மலபாரில் பாத்தியம் என்ற ஊரில் பிறந்து வளந்தேன். சென்னைக்கு வந்தேன்.போவிருந்தவல்லி ஹை ரோடில் கலை-கைத் தொழில் கல்லுரி வாழ்க்கை.சென்னை நகரில் இடைவிடாத சத்தச் சீரழிவு தாங்க முடியாத சோகமாக இருந்தது.உள்ளூர ஓயாமல் அலறிய ச்ய்றேன்.இந்த ஓயாத சத்த அதிர்வில் இருந்து தப்பிக்க உள்முகமாகப் பயணமானேன்.என்னுடைய முதல் சிற்பத்தை இந்த உளைச்சலை வெளிப்படுத்த உதவிய ஒரு சங்கீதமாகவே பார்க்கிறேன்..."

சிற்பி ஆகத் தன்னை உருவாகிய கல்லுரி அனுபவங்கள் குறித்து மலரும் நினைவுகளில் ஆழ்ந்தவராய் கண்களை மூடியபடி பேசிக் கொண்டே போகிறார் வல்சன்.   "மனித உடம்புக்கும்,அதனுடைய இருத்தலில் அவனறியாமலே பிரதான பங்கு வகிக்கும் புவியீர்ப்பு விசைக்குமிடையே உள்ள உறவைப் பற்றி ஆழ்ந்து கவனித்து வந்திருக்கிறேன்....இந்த இரண்டுக்கும் இடையேயான சீரான உறவு மனித உடலுக்கு அழகைத் தருகிறது.இந்த அழகினை நமக்குக் கிடைக்கும் எந்தப் பொருளிலும்,எந்த வடிவிலும் மறு உருவாக்கம் செய்ய முடியும்...!"என்று சொல்லுகிற வல்சன்,வெண்கலம்,கிரானைட் கற்களிலும் தன் சிற்பங்களுக்கான மூலப் பொருளைத் தேர்வு செய்கிறார்.     

Wednesday, October 28, 2009

மண்ணில் நல்ல வண்ணம்

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்கிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல்."எந்த மார்க்கமும் தோன்றி இலது;என் செய்கேன்,ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே?" என்று பாரதி பாடுகிறார்.காரணம்?

"மாந்தர் பால் பொருள் நோக்கிப்பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை"என்பது பாரதியின் பதில்.விடுதலை வேள்வியில் தன வாழ்வை ஆகுதியாகிய கவிஞன் பாரதிக்கே இப்படி ஒரு விரக்தி ஏற்ப்பட்டது என்றால் சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

"நான் பிறந்தது இந்த நாட்டில்;இந்த மண்ணை நான் நேசிக்கிறேன்.இங்கிருந்து என்னை வெளியேறுமாறு சொல்கிறீர்களே,நான் எங்கே போவேன்?" இந்தக் கேள்வியை லண்டன் பி.பி.சி. நிகழ்ச்சியில் ஒரு நண்பர் இக கேள்வியை எழுப்பி இருக்கிறார்."மண்ணின் மைந்தர்களுக்கே அந்தந்த மண்ணில் வேலை, வாழ்க்கை,இருப்பிடம்-"--என்று ஒரு முழ்க்கம் இப்போது உலகு எங்கும் பரவி வருகிறது.அயலவர் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைதமது   மண்ணில் இருந்து வெளியேறுமாறு கூறுவதே இந்த முழக்கங்களின்அடி நாதமாக இருக்கிறது.

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"என்று வாழ்வின் இலக்கணம் கண்ட மண் நம் தமிழ்  மண்.எனவே இந்த மண்ணின் மைந்தர் என்ற முழ்க்கம் நமக்கு உடன்பாடானதாக இருக்காது.நமக்கு மட்டும் இன்றி உலகில் சக மனிதர்களை நேசிக்கும் எந்த ஒருவருக்கும் ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்தாக இருக்காது.ஆனால் இன்று உலகின் பல பகுதிகளிலும் இப்படியான மனித விரோதக் கருத்துக்கள் விசிறி விடப் படுவதை நாம் பார்க்கிறோம். இது அறிந்தும் அறியாமலும் பரப்பப் படுகிற போது சக மனிதர்களை விரோதியாகப் பார்க்கும் போக்கு பரவுவதை நாம் காண்கின்றோம்.

உலகின் எந்த மூலையிலும் யாரும் சென்று உழைக்கவும்,பிழைக்கவும்,பகிர்ந்து உண்ணவும்,ஒன்றி நேசித்து வாழ்வும்,அன்பு செய்யவும்,அன்பினால் நனைக்கப் படவும் கூடிய ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும்.ஆனால் நடைமுறையில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப் படுவதும்,அதை உலகமே வேடிக்கை பார்த்துக் "கவலை" தெரிவிப்பதையும், கண்டனம் தெரிவிப்பதையும் செய்வது அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

நாம் படித்த எல்லா நீதிகளும்,போர் நெறிகளும்,சர்வதேச நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்படுவதை கையறு நிலையில் நின்று பரிதவிப்புடன் காண்கிறோம்,ஒரு காலத்தில் உலகப் பொதுமைக்கு சான்றுகள் என்று நாம் நினைத்த நாடுகள் கூட மனித குல விரோதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு மானுடப் படுகொலைகள் நிகழ்த்தியதை காணும் அவலம் நமக்கு நேர்ந்தது,அவரவர் நிலைக்கு நியாயம் கற்ப்பிக்க அவரவர் தரப்பு வாதங்கள் இன்று மயிர் பிளக்கும் "நுண்மான் நுழை புல"நுணுக்கங்களுடன் புவிப் பரப்பெங்கும் பரப்பப் பட்டு வருகிற நேரம் இது.

எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இதயம் பதற இந்த மானுடப் படுகொலைகள் பற்றி யோசிக்கும் ஒருவனின் குற்ற உணர்வுக்கு எது வடிகால்?அரசியல் விர்ப்பன்னர்கள் இந்த நிலைமை பற்றி ஆயிரம் விளக்கங்கள் தரலாம்.அனால் துயரமும் குருதியும் தோய்ந்த இந்தக்கதரல்களை யார் கேட்கப் போகிறார்கள்?இந்த அவல இசையின் சுருதி பிசகிய குறிப்புக்களை எந்தக்கலைஞனால் சரி செய்ய முடியும்?என்றைக்குச் சாத்தியமாகும் அது?

Tuesday, October 27, 2009

மதுர கவியும் முருகபூபதியும்..

தமிழ நாட்டின் கலை இலக்கியப் பிரமுகர்களில் பலரும் இந்திய தேசிய விடுதலைப் போரில்பங்கேற்றவர்கள்.நாடக மேடையிலும் திரைப்படங்களிலும் எழுத்துலகிலும் இசைத் துறையிலும் இப்படி பல துறை விர்ப்பன்னர்கள் தமது விடுதலை ஆர்வத்தை தங்களால் இயன்றவரை தமது துறை சார்ந்தும் மக்களுடன் இணைந்தும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மதுர கவி பாஸ்கர தாஸ்.தமிழ நாடக மேடைப் பாடல்கள்,தமிழ்சினிமாவின் முதல் பாடல் வரிசை,கிராமபோன் ரிக்கார்டுகள் ,என்று ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மதுரகவி,அவரதுடயரிக்  குறிப்புகளை மதுரகவியின் பேரனும் நவீனநாடகக்               கலைஞனும் ஆனா முருக பூபதி தொகுத்துத் தந்திருக்கிறார்.

அன்றைய நாடக உலகம்,அதன் கலைஞர்கள்,அவர்களின் அன்றாட வாழ்க்கை,செலவுகள்,சுக துக்கங்கள்,அவர்களின் கலை வேட்கை,மிடுதலை போரின் நடுவே தமது துறை சார்ந்தும்,வெளியிலும்,அவர்கள் இயங்கிய விதம் பற்றி இந்தக் குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும்,இயல்பாகவும்,உணர்ச்சி வசப் படாமலும் பேசுகின்றன.

அன்றைய தேசபக்தர்கள் மீது அந்நிய அரசு ஏவிய அடக்குமுறைகள் குறித்து மதுரகவியின் பாடல்கள் எதிர்வினை ஆற்றி இருக்கின்றன.டயரிக் குறிப்புகளில் இருந்து நாம் அன்றைய தமிழ நாடக மேடைக் கலாசாரம் பற்றி அறிய முடிகிறது,

Monday, October 26, 2009

இன்று ஒரு உணர்வு..

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும் என்று நான் பதிவு செய்த இடுகை பலரின் கவனத்தில் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி.ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் இசை என்பது அணைத்து உய்ரினங்களிலும் இருக்கிறது என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.இசையால் வசமாகா இதயம் எது என்ற பாடல் வரி நாம் அறிந்த ஒன்றுதானே?   

பாட்டு என்கிற அற்புதம் பற்றி எத்தனை விதமாய்ச் சொன்னாலும் தீராது.மகாகவி பாரத்யின் வார்த்தைகளில் சொன்னால் "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லை"தானே?வானம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான இசைத் தோற்றங்களைத் தருகிறது.இரவின் அமைதியில் நாம் கேட்க நேரும் ஒவ்வொரு ஓசையும் ஒரு இசைக்கோலம் காட்டுவதை உணராமல் எப்படி இருக்க முடியும்?

மலைகள்,நதிகள், வனங்கள்,நீரோடைகள்,பறவைகள்,மிதிபடும் சருகுகள்,தொலைவில் ஒளிரும் வெடியின் ஒளியும் ஓசையும்,யாரோ ஒரு தாயின் மடியில் பசிக்கு அழும் குழ்ந்தையின் அழுகையில்,பசி தீர்ந்ததும் அது உதிர்க்கும் சொற்களில்,இப்படி எங்கும் நிறை நாத பிரும்மம் நமது நெஞ்சை நிறைக்கிறது.கண் தெரியாத இசைஞன் நாவலில் பார்வை அற்ற இளைஞனின் உலகம் தாயின் கூர்த்த மதியால் இசைப்பெரலைகள் நிறைந்த ஒரு அற்புத உலகமாக மாறும் விந்தையை விளாடிமிர் கொரலென்கோ மிக நுண்ணிய இசைக் குறிப்புகள் நிரம்பி வழியும் எழுத்து வடிவில் தந்திருப்பார்.

எத்தனை முறை படித்தாலும் அந்த நாவலின்இசை   வெள்ளம் நம் மனப் பரப்பில் பாயும் போது மூச்சுத் திணறுவது தவிர வேறு என்ன செய்ய முடிகிறது? மனம் எதோ ஒரு உணர்வில் கனத்துப் பிரமை பிடிதார்ப் போல் ஆகி விடுகிறது.இந்த உணர்வுகளை எந்த மொழியில்,எந்த வார்த்தைகளில் சொல்ல முடியும்/பேசா மடந்தையே நாம் என்று ஆகி விடுகிறோம் இல்லையா? 

Sunday, October 25, 2009

வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடங்கள்...

வாசிப்பு பற்றி பொன்மணி வைரமுத்துவின் ஒரு கவிதை தினமணி தமிழ்மணியில் வந்துள்ளது.தொடர்ந்த வாசிப்பு என்பது மனிதர்களின் உணர்வுகளில் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள் பற்றி இக்கவிதை மிக அழகாகச் சொல்கிறது.




"நான் ஒன்றும் நாதஸ்வரம் வாசிக்கவோ புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப் படவில்லை. நூல் வாசிக்கும் ஆசை மட்டும் நாள் தோறும் வளர்கிறது.
கதை,கவிதை,கட்டுரை,எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி!சிறகு கட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி!    
சற்று முன் தின்ற பசும் புல்லை ஆசுவாசமாய் அசை போடும் பசுவைப்போல் படித்ததை நினைக்க நினைக்க ஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு வினோதம்-
படைத்தவன் சொன்னதைச் சொல்லும்; சொல்லாததையும் சொல்லும்.  வாசிப்பு புறத்தில் மறப்பு.அகத்தில் விழிப்பு!  
வாசிப்பு தனிமைத் தவம் ,
தாய்மடி   வானமழை,  ஆழ்கடல் ஊன்றுகோல்  ஞாந தீபம் தேவ கானம் தலை தொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை! 
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்;என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒரு கையில் தேநீர் இன்னொரு கையில் புத்தகம். இதை விடவா ஒரு வாழ்க்கை?! "

இந்தக் கவிதை வாசிப்பையும் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்கிறது.  மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணாபுரம் கிராமம் .அங்கு ஒரு நூலகம். அகால மரணம் அடைந்த தன மகன் நந்தகுமாரின் நினைவாக திரு நவநீத கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நூலகம் இது.ருபாய் பத்து லக்ஷம் மதிப்புள்ள பத்தாயிரம் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாக நவநீத கிருஷ்ணன் சொல்கிறார். மகன் உயிருடன் இல்லாத சோகத்தில் நிலை குலைந்து போகாமல் இப்படி ஒரு காரியம் செய்ய முன்வந்த இருவரும் வாசிப்பின் மேன்மையை உணராதிருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது.




"நூலகமே என் குழ்ந்தை" என்கிறார் நவநீத கிருஷ்ணன். பொதுவாக் நம்மை விரக்தியில் ஆழ்த்தும் ஒரு மீளாத சோகத்தை வென்று நிற்பதற்கு புத்தகங்களின் மீதான ஒரு பிடிப்பு உதவி இருக்கிறதே!  'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' என்ற எனது   சிறு நூலில் தமிழ நாட்டு நூலக இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.நூலக இயக்கத் தந்தை என்று போற்றப்படும் ச.ரா ரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை புத்தகமும் ஒரு பெரும் மேதையின் வாழ்வுமினைகிற விந்தையைச் சொல்கிறது.உலக நூலகங்களின் வரலாறு நம் வாசிப்பின் சாத்தியங்கள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று சொல்லும்.

வாசிப்பின் எல்லைகள் பற்றி ஒரு போது நினைக்காமல் தொடர்ந்து படிக்கும் ஒருவர் எப்படி இயங்குவார் என்பதற்கு ரங்கநாதன்   ஒரு உதாரணம்.அவரது நூல்கள் மட்டுமின்றி அவர் வாழ்க்கையே நூலகம், நூலகம் என்றே துடித்த ஒரு இதயத்தின் கதையாக  இருக்கிறது.கிராம நூலகம் என்ற ஒரு கருதுகோள் அவரின் சிந்தனையில் எவ்வளவு அழுத்தமாக இடம் பெற்று இருக்கிறது?முறையாகப் பராமரிக்கப் படும் ஒரு கிராம நூலகம் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுஅர்த்துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக இருக்கும் என்பது ரங்கநாதனின் நம்பிக்கை.

இது வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடமாக இருக்கிறது... இன்று இந்த விதமான இயங்குதல் சாத்தியம் தானா ,தெரியவில்லை... பதில் தேடும் பயணத்தை வாசிப்பு உலகிற்குள் சென்று தொடருவோம்!  

Saturday, October 24, 2009

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும்..

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி என் சிந்தனைகளில் சில யதார்த்த நிலைமைகள் பற்றிய கவலைகளைப் பதிவு செய்திருந்தேன்.உலகம் முழுதும் பசித்தவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருப்பது பற்றி ஒரு செய்தி நம் கவனத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டதை இந்தப் பகுதியில் பதிவு செய்த போது அது சில ஈர மனங்களில் பாதிப்பை உண்டாக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.அது போலவே இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகர் மன்னா தே பற்றியும் பதிவு செய்து இருந்தேன்.அந்தக் குறிப்பும் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்று தெரிகிறது.மனிதர்களின் வாழ்வில் இசையும் பசியும் அடையும்    முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.


                                      

இசையாய் தமிழாய் இறைவனைக் காண்கிற மரபு நமது. மாசில் வீணையும் என்று தேவாரம் பாடும்.என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்கிறார் கண்ணதாசன், ஏழாம் கடலும் வானும் நிலவும் என்உடன் விளையாடும், இசை என்னிடம் உருவாகும் என்று அதே பாடலின் வரிகள் தொடரும். துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்பார் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். என் உணர்வுகளை எல்லாம் கொட்டி நான் பாடியிருந்தும் அதை நீ எப்படிக் கேட்காமல் போனாய் என்று வியந்து போகிறார் தூக்கு மேடைக் குறிப்பில் ஒரு போராளி.இந்த மாதிரி ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காண முடியும்.




மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இசை ஆர்வலர்களாக இருப்பது காண முடியும.மோக முள் தந்த தி.ஜானகிராமன், புல்லின் இதழ்கள் எழுதிய கே.பி.நீலமணி, இந்த மாத்ரி தமிழ்ப் படைப்புகள்; கண் தெரியாத இசைஞன் என்ற சோவியத் நாவல் போல பல சான்றுகள் கூறலாம். மன்னா என்கிற வங்க மொழிப்  பாடகரின் தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் இசைபற்றுதான் அவரை உந்தித் தள்ளுகிற விசையாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நேர்காணல் சொல்கிறது. இன்றைய இளம் தலைமுறை இசை கலைஞரான யுவன் சங்கர் ராஜாவின்வார்த்தைகளில் சொன்னால் இசையால் நான் அனைவரையும் சென்று அடைய முடியும்;அனைவர் நடுவேயும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும் என்பது தான் செய்தி. இது தன அப்பா இளைய ராஜாவிடம் கற்றுக் கொண்டது என்கிறார் யுவன்.சொல்லி வைத்தார்ப் போல் இசைக்கலைஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது, அதில் வியப்புக்கு ஒன்றுமில்லைதானே?

Friday, October 23, 2009

தமிழில் சில புதிய களங்கள்...

தமிழின் களங்கள் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்தவை. இன்றைய நவீன வாழ்வின் சில அம்சங்களை இந்த மொழியில் சொல்வதற்கு முயலும் போது இது நமக்கு உகந்த முறையில் வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி நம் முன் வந்து நிற்கவே செய்யும். இந்த மொழியில் நவீன வாழ்வின் சாத்தியங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும் என நிருபிதவர்களில் சுஜாதாவும் ஒருவர். வேறு பலரும் இந்த வகையில் முயன்று பார்த்து உள்ளனர். ஆனால் சுஜாதாவின் வெற்றி மிக வசீகரமான ஒன்று. அவரை நகல் எடுத்த பலரும் தோற்றுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.



இந்த நவீன அம்சங்களில் அறிவியலின் பல கூறுகள் அடங்கி உள்ளன. முன்பு ஒரு எழுத்தாளர் கூட்டம் இந்த முறையில் முயன்று வந்தது. அவர்களில் பே.நா. அப்புசாம்யும், தி.ஜானகிராமன்,ஸ்ரீனிவாசன், எ.என்.சிவராமன் போன்றவர்கள் வருவர். இன்றைய தலைமுறையில் இரா.முருகன், ராமானுஜம், இரா.நடராசன், வெங்கடேஸ்வரன், ஆதனூர் சோழன் இப்படிப் பலர் இருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் பொது மக்கள் திரளை சென்று சேர்ந்ததா என்பது தனிக் கதை.



ஸ்டீபன் காவ்கிங் இன்று தமிழ வாசகர்கள் அறிந்த ஒரு பெயர்.இதற்கு அவரின் 'காலம்-ஒரு சுருக்கமான வரலாறு' என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூல் ஒரு காரணம். ராஜாஜி கூட அறிவியல் அம்சங்களைத் தமிழில் தர முயன்றவர்தான். ஆனால் அவரின் நடை இன்று பொருந்தி வரக் கூடிய ஒன்றல்ல. தி.ஜானகிராமனின் நடை இன்றும் வாசிக்க சுகமான நடையாக இருப்பதை காணலாம். இந்த விஷயம் பற்றி மேலும் ஆராய்ந்தால் பல சுவையும், பயனும் மிக்க தகவல்கள் கிடைக்கக் கூடும்.

Thursday, October 22, 2009

இசையுடன் இசைந்த வாழ்க்கை...

இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மன்னா தே குறித்து இன்று வந்த பிரன்ட் லைன் இதழில் பர்தா சட்டேர்சு எழுதிய கட்டுரையும் அவருடனான நேர்காணலும் வெளி வந்துள்ளன.ஹிந்தி திரையுலகின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்களில் இவர் ஒரு தனி ரகமானவர் ஆகத் தோன்றுகிறது. இப்போது இவர் வயது தொண்ணூறு.இந்த வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதை அடைந்திருக்கிற இவருக்கு அது ஒன்றும் துள்ளிக் குதித்து மகிழ்கிற ஒரு விசயமாகத் தோன்றவில்லை. அந்த மனநிலையை நான் எப்போதோ தண்டி விட்டேன் என்கிறார்.

தான் பாடிய ஏதோ ஒரு மெலோடியை மும்பை ,பெங்களூர் போன்ற ஒரு பெருநகரின் வீதிகளில் யாரேனும் ஒரு மனிதன் ஹும்மிங் செய்வதைக் கேட்பதுதான் பால்கே விருதை விடப் பெரிய விருது என்கிறார் மன்னா.ராக அடிப்படையில் அமைந்த கிளாசிக்கல் பாடல்களுக்குத்தான் இவர் பொருந்தி வருவார் என்று ஒருஎண்ணம் அன்று நிலவி வந்தது இவரின் வளர்ச்சியில் ஒரு முட்டுக் கட்டையாக இருந்தது போலும். அவரது மனைவி ஒரு கேரளப் பெண்.அவரின் வார்த்தைகளில் சொன்னால் "மன்னா தன இதயத்தில் இருந்து பாடுகிறார்" என்பதே சரி. மற்றவர்கள் நினைத்து போல தான் ஒன்றும் முற்ற முழுக்க கர்நாடிக் கிளாசிக்கல் பாடகர் அல்ல என்கிறார் இவர்.உஸ்தாத் படே குழாம் அலிகான், ப்ம்சென் ஜோஷி அல்லது அமிர்கான் போலத் தான் முழுமையான கிளாசிகல் பாடகர் அல்ல என்பது இவரின் கணிப்பு."நான் அதில் அப்படி ஆர்வமும் கொண்டிருக்கவில்லை" என்கிறார்.




சங்கர் ஜைகிசன் ,சலீல் சௌதரி ,க.ராமச்சந்திர போன்றவர்களின் இசையமைப்பில் தான் பாடிய பெருவெற்றி பெற்ற பாடல்கள் பற்றி மன்னாவும் கட்டுரையாளர் பர்தாவும் நிறையத் தகவல்களை தந்துள்ளனர். தொண்ணூறு வயதிலும் தான் சவால்களை ,சோதனை முயற்சிகளை தான் விரும்புவதாகவும்,தான்உயிருடன் இருக்கும் வரை பாடுவதைத் தொடரப் போவதாகவும் சொல்கிறார்.என்ன ஒரு மன உறுதி/நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது அல்லவா?

Wednesday, October 21, 2009

மாநகர நினைவுகள்...

சென்னை மாநகர நினைவுகள் பற்றி தமிழ்நாட்டின் பல முக்கியமான பிரமுகர்கள் தமது மலரும் நினைவுகள் பலவற்றை ஹிந்து இதழில் எழுதிக் கொண்டு வருகிறார்கள்.இன்று ச.வைதீஸ்வரன் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அகில இந்திய வானொலியின் செய்திச் சேவையை மெரீனா கடற்கரையில் லௌட்ச்பீகர்கள் மூலம் கேட்ட அனுபவம் பற்றி, தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகம் பற்றி, ச.வி. சகஸ்ரநாமம் பற்றி கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரம் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார்.சென்னை அன்று ஏரிகளும் குளங்களும் நிறைந்த நகரமாக இருந்த கதையை சொல்கிறார்.




நகரச் சுவர்கள்,விரல்மீட்டிய  மழை, உதய நிழல் போன்ற தொகுப்புக்கள் இவரின் கவிதை படைப்புக்கள் ஆகும்.வேறு பலரும் இவர் போலவே தங்கள் மனச் சுரங்கத்தில் இருந்து அன்றைய சென்னை பற்றி பதிவுகளை எழுதி வருகிறார்கள். அவர்கள் அனைவருமே பெரிய பிரமுகர்கள் மட்டுமே. சாதரணமான மனிதர்களின் மனதில் இந்த நகரம் என்ன விதமாகப் பதிவாகி இருக்கிறது? எப்போதாகிலும் அந்த மாதரியான பதிவுகளை நாம் படிக்கக் கிடைக்குமா?

இந்த நகரம் நான் முதன் முதலில் ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்த இடம்.இங்குதான் அம்பதூரில் ஒருகம்பெனியில்வேலை செய்தேன்.ஆறு மாத காலம் கழித்து வேலூர் சென்று அங்கு பணியில் சேர்ந்தேன். மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து சென்னைக்கு குடும்பத்துடன் வந்து சேர வேண்டியதாகியது. இப்போது பத்தொன்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இந்த நகரம் என் கதைகளில் பதிவாகி இருக்கிறது.குறிப்பாக 'பிணங்களும் விலை போகும்' கதையில்.என் இலக்கிய வாழ்வின் முக்கியப் பகுதிகள் நிகழ்ந்த இடம் இதுதான். நினைவுகள் அழிவதில்லை அல்லவா?

Tuesday, October 20, 2009

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

தமிழ மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பலரையும் பற்றி யோசிக்கையில் இன்று நம் முன் வருகிற சித்திரம் என்ன? புதிய புத்தகம் பேசுது இதழ் சமீபத்தில் வெளியிட்ட தமிழ்ப் பதிப்புலகம் -இரு நூற்றாண்டு  கால வரலாற்றுப் பதிவுகள் இந்த வகையில் ஒரு முக்கிய ஆவணம்.

உ.வே.சாமிநாதையர் சி.வை.தாமோதரம் பிள்ளை, மர்ரே.எஸ்.ராஜம், ஆறுமுக நாவலர், கதிரைவேர்ப் பிள்ளை மற்றும் பல முன்னோடிப் பதிப்பாளர்கள் பற்றிய ஆழமான பல கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கம்,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம்,உலகத் தமிழ ஆராயிச்சி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்ப் பதிப்புலகிற்கு ஆற்றிய பெரும் பணிகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் இந்த மலரில் உள்ளன.

இவை எல்லாம் நமது முன்னோடிகளின் அபூர்வப் பங்களிப்பு பற்றி அறிய நமக்கு உதவக் கூடிய ஆவணங்கள். இவர்களில் ஒரு சிலர் நன்கறியப் பட்டவர்கள் என்றாலும் மிகப் பலர் பற்றி இன்றைய தலைமுறைக்கு எந்த விதமான விவரமும் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தக் கவலை மலரைப் படிக்கும் யாருக்கும் எழும்.வெறும் கவலை  அல்லது ஆதங்கம் இந்த நிலைமையில் மாற்றம் எதயும் கொண்டு வராது. இன்றுள்ள சூழலில் நாம் என்ன செய்ய முடியும் என்பதே நம் முன்னுள்ள கேள்வி.

Saturday, October 17, 2009

பசித்தவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்...

இன்று தீபாவளி நாள். பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆனந்தமாகக் கொண்டாடும் நாள் இது. இது ஒருபுறம்.மறுபக்கம் ஒன்றும் இதற்கு இருக்கிறது.இன்று ஹிந்து நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி நம் கவனத்தை கவராமல் இருந்தால் நமது மனிதத் தன்மை கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

உலக உணவு தினத்தை ஒட்டி ஒரு ஆய்வு அறிக்கை வந்துள்ளது. இன்னும் பில்லியன் கணக்கிலான மக்கள் ஒரு நாளைக்கு மிக எளிய,குறைந்தபட்சம்,ஒரு நேர உணவு கூடக் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை அந்த அறிக்கை சொல்கிறது. ஒவ்வொரு சில கன நேரத்திற்குள் ஒரு குழ்ந்தை உணவுப் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கிறது. இது நம் மனதில் ஏற்ப்படுத்தும் உணர்வு என்ன/சில சின்னஞ்சிறு நாடுகள் கூட இந்த வறுமைக்கு எதிரான போரில் ஈடுபட்டு சில வெற்றிகளையும் அடைய முடிந்திருக்கும் போது நம் நாடு இந்தப்போரில் இருபத்து இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. இந்தச் சுடுகிற உண்மை நம்மில் எத்தனை பேரின் கவனத்தைக் கவரப் போகிறது?

ஒரு புறம் நாம் சந்திராயன் மூலம் நிலவில் நீர் இருக்கிற உண்மையை உலகுக்கே முதன் முதலில் சொன்ன பெருமையை அடைந்து விட்டோம். நமது நாடு வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்று விட்டார். இன்னும் இது போல் பல பெருமைகள் நமக்கு உண்டுதான். சந்தேகமில்லாமல் இது ஒரு நாட்டின் மக்களின் அறிவு ஆற்றல்,புதியன படைக்கும்  திறன்கள் அனைத்திற்கும் சான்றுகள்தான். ஆனால் இது ஒரு ஓவியத்தின் பிரகாசமிக்க பகுதி மட்டுமே. விளக்கின் அடி இருட்டுப் போல மறு பக்கம் இருள் நிறைந்ததாயிருக்கிறது.

இன்று வந்துள்ள மற்றொரு கட்டுரை வேலை உறுதி வழங்கும் சட்டம் பற்றியது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த திட்டம் செயல்படும் விதம் பற்றி சமூகத் தணிக்கை செய்த அரசு சாரா நிறுவனங்களின் மதிப்பீடு என்ன என்று சொல்கிறது.இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்துள்ள ஒரு கட்டுரை சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை  பற்றியது. அங்கு வேலை செய்யும் தொழிலளர்கள் பெரும் கூலி வாரம் ஒன்றுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் என்றாலும் தீபாவளி முடிந்ததும் இரண்டு வாரம் வரை தொழிற்சாலைகள் மூடி கிடக்கும். அவர்கள் ஏற்கெனவே வாங்கிய கடன்களைத் தீர்க்கவே வாங்கும் சம்பளம் சரியாக இருக்கும். இந்த அம்சம் தவிர வேறு பல அம்சங்களும் இதில் இருப்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. இருபதுகள் வரை பருத்தி விளைவிக்கும் இடமாக இருந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதி இப்போது பட்டாசுத் தொழில் மட்டுமே நடை பெரும் பகுதியாக ஆகி விட்ட துயரம் பற்றி நம் மனதில் என்ன அலைகளை எழுப்புகிறது. இன்று பண்டிகை நாள் என்பது தரும் மகிழ்ச்சியை விட இது போன்ற சமூக அவலங்கள் ஏற்ப்படுத்தும் துயரம் ஆழமானது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

மகாகவி பாரதியின் இந்த வரிகள் இன்னமும் பொருந்துவதாகவே இருக்கின்றனவே?

Friday, October 16, 2009

அந்நியனும் சில எதிர்வினைகளும்..

நண்பர் மாதவராஜின் ப்ளாக் ஸ்பாட்டில் சற்று முன் பார்த்த போஸ்ட் பற்றி கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது. தமிழரான வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றது பற்றி பெருமிதம் அடைந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான தமிழ மக்கள் அனுப்பி வருகிற மின்னஞ்சல் கடிதங்களால் எரிச்சல் அடைந்து அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒரு விவாதப் புயலையே கிளப்பி விட்டன.ஏராளமான நண்பர்கள் வெட்டியும் ஒட்டியும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். என் கருத்திற் வெங்கியின் எரிச்சல் வேறு விதமாகப் புரிந்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு  இருக்கிறது என்பதே! ஒருவர் தன பிறந்த மண் குறித்துப் பெருமிதம் அடைவது என்பது பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்ட ஒன்று என்று தோன்றுகிறது. வெங்கியின் இந்த வெளிப்பாடிற்குப் பின்னால் அவர் தரப்பு நியாயங்கள் என்ன என்று தெரியவில்லை.

இந்த மண்ணில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் எத்தனை பேருக்கு அது பற்றிப் பெருமிதம் இருக்கிறது? ஆழமாக யோசிக்கையில் இன்று பலருக்கு இது பற்றி யோசித்து எதிர்வினையற்ற அவ்வளவு வசதியான வாழ்க்கை அமைந்திருக்கிறதா என்ன? வெங்கியின் கருத்து சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்க இதை விடவும் பொறுப்பற்ற முறையில் எழுதிக் கொண்டிருக்கும், ஏற்க்கெனவே எழுதிய பலர் விசயத்தில் இம் மாதிரி எதிர்வினைகள் வந்தனவா? உயரும் விலைவாசி பற்றி எழதும் நம் சக எழுத்தாளர்கள் பற்றி சாறு நிவேதிதா ஒரு முறை மிக மோசமாக நக்கல் செய்த போது எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் அது பற்றிக் கோபப் பட்டார்கள்? நமது மண்ணில் வாழ்ந்து கொண்டு நமது மொழியில் எழுதிக்கொண்டு நமது மக்களின் வாழ்வியலைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஜெயமோகன்கள் பற்றி எத்தனை பேர் கொதித்து எழுந்து எதிர்வினையாற்றினார்கள்? மிகவும் சுலபமாக இது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் எதுவுமுமே நடக்காதது போலத் தானே பலரும் இருந்திருக்கிறார்கள்? எங்கோ வாழ்ந்து கொண்டு தன ஆராய்ச்சியின் வெற்றியால் தலை கனத்துப் போனவரின் கருத்து என்று வெங்கியின் அலுப்பைப் புறம் தள்ளி விட்டு நாம் நமது மண்ணில் நம்மிடையே வாழ்ந்து கொண்டே நம் மக்களின் வாழ்வியல் கூறுகள் பற்றியோ, அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியோ கவலைப் படாமல் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கும் "மாபெரும் எழுத்தாள சிகரங்களின்" தோலை உரிக்க வேண்டிய கடமையின்பால் கவனத்தைத் திருப்புவது நல்லது  

Thursday, October 15, 2009

புலம் வழங்கும் புத்தகங்கள்

புலம்
லால்கர் ஒரு மூன்றாவது பார்வை என்ற புத்தகமும் அரசு,இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள் என்ற புத்தகமும் மார்க்ஸ்-எழுதிய புதிய நூல்கள். சமீப நாட்களில் ஊடகங்களில் மிகவும் அடிபட்ட விஷயங்கள் குறித்து மிக ஆழமான முறையில் மார்க்ஸ் எழுதி இருக்கிறார்.வன்முறை என்பது இன்றுள்ள சூழ்லில் அரசு பயங்கர வாதத்திற்கு மட்டும் பயன்படுகிற ஒரு ஆயுதமே தவிர சமூக மாற்றம் வேண்டிப் போராடும் இயக்கங்கள் தமது இலட்சிய நிறைவேற்றத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதமாக இல்லை என்ற வாதத்தை மார்க்ஸ் முன் வைக்கிறார்.நடைமுறை அனுபவங்களில் இருந்து இன்னும் நக்சல் இயக்கங்களும் மாவோயிஸ்ட் இயக்கங்களும் பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே நம் ஆதங்கமயிருக்கிறது.

அரசு எப்போது வன்முறையைக் கையில் எடுக்கிறது? மக்களிடம் தனது பிடி தளர்கிறது என்று உணர்கிறதோ அப்போதுதான்,அதுவரை அரசு மக்களின் ஒப்புதலுடன் தன் அதிகாரத்துறை ஆளுகையை மக்கள் மீது செலுத்திக் கொண்டு இருக்கிறது.எனவே அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான ஒரு இயக்கம் வெற்றி அடைய வேண்டுமானால் அந்த முடிவுகளுக்கு மக்களின் ஒப்புதல் கிடைக்கக் கூடாது.அந்த வகையில் சமூக மற்றத்ர்க்கான இயக்கங்கள் எதிர் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இரக்க வேண்டும்.ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதே சோகம்.மார்க்ஸ் இந்த உண்மையை மிகக் கூர்மையாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கிறார்.

சிறிய இரு நூல்களும் மிகச் செறிவான முறையில் எழுதப்பட்டு இருக்கின்றன.இந்த உண்மைகள் ஏன் போராளிகளுக்குப் புரியவில்லை என்ற கேள்வி நமக்கு எழும்.அதற்கும் மார்க்ஸ் பதில் சொல்லி இருக்கிறார்.இன்றைய போராளிகள் தீவிரமாக் எதயும் படித்து மக்களின் நிகழ கால வாழ்வு பாதிக்காமல் எதிர் கால லட்சியங்களின் வெற்றிக்குப் போராடுவது கிடையாது என்பதே மார்க்ஸ்ன் அவதானிப்பு. இன்றுள்ள நிலையில் மிகக் கவலையுடன் யோசிக்க வேண்டிய பல செய்திகளை மார்க்ஸ் எழுதி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரே ஒரு பிரச்சினை என்ன என்றால் இந்த இரு நூல்களிலும் இழையோடும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு என்பதுதான். இது பற்றி விரிவாகப் பார்கத்தான் வேண்டும்.   

Sunday, October 11, 2009

ஒரு இடைவெளிக்குப்பின்.

அக்டோபர் 5 ஆம் நாளுக்குப்  பிறகு, இந்தப்பகுதியில் எதையும் எழுத முடியவில்லை. என்ன காரணம் என்றே தெரியாமல் ஒரு சோர்வு. நம் சிந்தனைகளில் ஓடுகிற அனைத்தையும் எழுதுவதால் என்ன விளைவு ஏற்படப்போகிறது? இலக்கியம் ஒரு கருவியாக நம் சிந்தனைகளைப் பிறர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது.பிறர் சிந்தனைகளை நம் கவனத்தில் பதியக் கொண்டு வந்து சேர்க்கிறது.யாரோ எதிலோ எழுதும் விசயங்களில் நல்ல அம்சங்கள் இருப்பின் அது பற்றி நம் மனதில் ஓடும் எண்ணங்களை எழுதியவருடன் பகிர உதவுகிறது.அந்த வகையில் இந்த மாத புதிய ஆசிரியன் இதழில் தோழர் எஸ்.வி.வி. எழுதிய "பஞ்சமும் நோயும் மெய்யடியார்க்கோ" என்ற கட்டுரை படித்ததும் அது பற்றி அவருக்கு மெயில் மூலம் என் கருத்தைக் கொண்டு சென்றேன். அவரும் படித்து விட்டு தனது மகிழ்ச்சியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.இலக்கியம் என்பது இப்படி ஒரு அசைவை நிகழ்த்துகிறது.படித்து நீண்ட காலம் ஆகியும் நம் மனதில் அதிர்வுகளை ஏற்ப்படுத்தும் படைப்புகள் பல உண்டு.அவற்றின் தாக்கம் நீண்ட நாட்கள் ஆகிய பின்னும் ஒரு சிறிதும் மங்குவதில்லை.நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல் ஒரு உதாரணம். கன்னட மொழியில் நிரஞ்சனா எழுதிய சிரச்மரனே என்ற நாவலின் தமிழ மொழி பெயர்ப்பு இது.தமிழில் மொழி பெயர்த்தவர்   ப.ர.பரமேஸ்வரன் அவர்கள்.இந்த நாவலின் களம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்.விவசாய சங்கம் அமைத்த இளம் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தங்களின் நிலம் பிடுங்கப்பட்ட பின் அடைந்த வேதனையை சொல்கிறது.அவர்களும் அந்த கிராமத்தின் பிற விவசாய மக்களும் நடத்துகிற இயக்கம்,அதை நசுக்க பிரிடிஷ் ஆட்சி எடுக்கும் நடவடிக்கை,அதில் ஏற்ப்படும் ஒரு துரதிர்ஷ்ட வசமான சம்பவம்,அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலிஸ் எடுக்கும் கொடூரமான அடக்குமுறை,இறுதியில் அந்த நான்கு வீர இளைங்கர்களும் தூக்கு மேடை செல்லும் முடிவும்தான் நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல்.இதை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று சொல்ல என்னாலேயே முடியாது.அத்தனை முறை படித்தும் புதிதாகப் படிப்பது போலத்ததான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது.நாவலை எழுதிய நிரஞ்சனா,அதை ஒரு கம்யூனிஸ்ட் பிரசார நாவல் என்று சிலராவது சொல்லவாய்ப்பு இருக்கிறது என்றும்,அனால் அதை எழுதிய போதும் சரி,அந்த உண்மை நிகழ்வை அருகில் இருந்து பார்த்த போதும் சரி,தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்றே சொல்கிறார்.தான் கண்ட ஒரு உண்மை நிகழ்வை தன மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்,அவ்வளவுதான்.அந்த நிகழ்வில் கண்ட அந்த மக்களின் துயரம் அவர் மனதைப் பாதிக்கிறது.சார்பு எதுவும் இல்லாமலே அவரின் நாவல் உண்மைகளை அந்தரங்க சுத்தியுடன் சொல்கிறது.இந்த நாவலில் இறுதிக்கட்டம் படிக்கிற யாரையும் உலுக்கி விடும்.தேஜஸ்வினி என்கிற நதி இந்த நாவலில் வெறும் ஒரு நதியாக மட்டும் இன்றி ஒரு பாத்திரமாகவே மாறி விடுகிறது.நாவலாசிரியரின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்திருக்கிறார் என்றால் அந்த நதியும் நதிக்கரை மக்களும் எவ்வளவு தூரம் அவரைப் பாதித்திருக்க வேண்டும்?தேஜஸ்வினி இன்று நன்கு அறியப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர்.நிரந்ஜனாவின் நாவலை அவர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார்."நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன"என்பது ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்பு.நாவலின் இறுதியில் தூக்கில் இடப்பட்ட சிருகண்டனின் மனைவி தன குழ்ந்தையிடம் வானில் தெரிகிற நட்சத்திரங்களைக் காட்டி "அதோ தெரிக்றார் பார் உன் அப்பா.அருகில் தெரிகிறவர்கள் அவரின் நண்பர்கள்" என்று சொல்லுவாள்.நம் கண்கள் குளமாகி விடும்.நெஞ்சமெல்லாம் வலிக்கும்.வரலாறு நெடுக உழைக்கும் மக்கள் தமது நியாயமான உரிமைகளைக் கூட தமது உயிரைக் கொடுத்த பிறகுதான் அடைகிறார்கள்;அல்லது உயிரைக் கொடுத்த பிறகும் கூட உரிமைகளை அடைய முடியாமலே இருக்கிறார்கள் என்பதை நாவல் மெளனமாக உணர்த்துகிறது.இலக்கியம் செய்கிற மாயம் இது.எழுத்து என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என்று நாம் உணர்கிறோம்.என்னை இடைவிடாமல் யோசிக்க வைக்கும் ஒரு சில் புத்தகங்களில் இதுவும் ஒன்று.இப்படி எழுத முடிந்தால் அந்த வகை எழுதுக்களை எழுதுவது பற்றி நாமும் யோசிக்கலாம்.இன்று காலையில் ஒரு கூட்டத்தில் வகுப்பு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்த போது இந்த நாவலின் பாத்திரங்கள் பற்றியும்,என் வாழ்வில் நான் சந்தித்த சில முக்கியமான தலைவர்கள் பற்றியும் அவர்களின் தன்னலம் அற்ற போது வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உத்வேகம் தருகிற புத்தகங்களில் இந்த நாவலும் தூக்கு மேடைக் குறிப்பு என்ற நினைவுக் குறிப்பு நூலும் முக்கியமானவை.இந்த நூல்கள் பற்றி நினைத்த உடனே வேறு சிந்தனைகளே எழாத வகையில் மனம் நிரம்பி விடுகிறது.............நினைவுகள் அழிவதில்லை நாவலின் முன்னுரையில் ஆசிரியர் வாசகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புவார்:"இந்த வீர நினைவுகள் உங்களுக்குத் தரும் உணர்வுகள் என்ன? நீர் நிரம்பிய கண்கள் மட்டும்தானa? ஓங்கி உயர்த்திய கரங்களும் கூடத்தான்"என்று வரும் வரிகள் நம் மனதில் பிரளயம் போல் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கின்றன.நாவலின் இன்னொரு இடத்தில இப்படி வரும்:"நாம் சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரு போதும் சொல்ல முடிவதில்லை;நாம் கண்ணீர் வடிக்க வேஅண்டும் என்று நினைத்த போதெல்லாம் அழுதிருந்தால் தேஜஸ்வினி நதியில் வெள்ளம் பிரளய கால் வெள்ளமாயிப் பெருகியோடி இருக்கும்.அனால் நாம் செய்ய நினைப்பதை எல்லாம் செய்து விடுவதும் இல்லை" இப்படி வரும் வரிகள் நிறைய்ய....!                     

Monday, October 5, 2009

படிப்பும் பாதைகளும்

வாசிக்கிற அனுபவம் ஒரு மனிதனிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி பலரும் சொல்லி இருக்கிறார்கள். நல்ல ஒரு கவிதை, படித்து நீண்ட காலம் ஆகிய பின்னும் நம் மனதைக் குடைந்து கொண்டே இருப்பதை பல நேரங்களில் உணர முடிந்திருக்கிறது. ஒரு நாவல் ஏற்ப்படுத்தும் பாதிப்பு வாழ்நாள் முழுக்க இருப்பதை என் அனுபவமே எனக்குச் சொல்ல்கிறது.

தீவிரம் நிறைந்த ஒரு கட்டுரை நம்மை செயல்படத் தூண்டுகிறது. மஹாஸ்வேதா  தேவியின் ஒரு நேர்காணலில் அவர் தன் அனுபவங்களைச் சொல்லிய விதம் இன்று வரை எனக்கு ஒரு புதிய பாதை காட்டும் தீபமாக இருக்கிறது. படிக்கிற அனுபவங்கள் பற்றி படிப்பதே ஒரு சுவையான அனுபவம்தான். படித்த விசயங்களை மற்றவர்களிடம் பகிர்வது மற்றொரு அறிய அனுபவமாக இருக்கிறது.   

வெள்ளமும் வேதனையும்

இன்றைய ஹிந்து படிக்கையில் ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் மழை வெள்ளம் வந்து அதனால் அங்கு மக்கள் படும் துரம் பற்றி செய்திகள், படங்கள் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த நிலை ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும் ஒரு சரியான தீர்வு இதுவரை காணப்படவில்லை.

வானில்  பறந்து வெள்ளப் பாதிப்புக்களை பார்வையிடும் பிரமுகர்கள் பற்றியும் ஒவ்வொரு முறையும் அதே பத்திரிக்கைகளில் செய்திகளும், படங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தனது சின்னஞ்சிறு குடிசை மழை நீரில் மூழ்கி விட்ட சோகம் நெஞ்சைத் தாக்கி உலுக்க கண்ணீர் வடிக்கும் ஏழைப்பெண் ஒருத்தியின் படம் நம் மனதில் இடி போல இறங்குவதை உணர்கிறோம். என்னதான் தீர்வு? 

Sunday, October 4, 2009

கவிதையும் வாழ்வனுபவமும்..

இன்றைய ஹிந்து-ல் கவனகர் கனிமொழியின் நேர்காணல் வந்திருக்கிறது. தனது கவி உலகம் பற்றி அவர் சொல்லியிருக்கும் அனுபவப் பதிவுகள் முக்கியமானவை. கவிதை என்பது தன் சுயம் உடனான தொடர்ச்சியான உரையாடல் என்கிறார் கனிமொழி. அது என்னைக் கண்டறியும் ஒரு நிகழ்வு என்பது அவரின் பதிவு.

"எனக்குள் மௌனம், அதைக் காண்பது; அதன் மய்யத்தில் நான்  இருப்பது ஒரு அனுபவம். எவ்வளவு அலைச்சல்களுக்கு நடுவிலும் எழுத முடியும். சில் நேரங்களில் உங்களால் அந்தஉலகத்தைக் கண்டு அறிய முடியாமல் போகக் கூடும்".

"சில நேரங்களில் வேறு ஒரு வடிவத்தின் மூலம் அதைக் கண்டறியலாம். அது இசையாக, ஒரு திரைப்படமாக, படிக்கக் கிடைக்கிற ஒரு புத்தகம் இப்படி ஏதேனும் ஒன்றாக அது இருக்கலாம்."

இப்படி கனிமொழியின் கவிதை வாழ்வனுபவம் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு பல கவிஞர்களும் இந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார்கள். உள்ள உணர்வுகள் வெளிப்படும் தருணம் எப்போது எப்படி அமையும் என்று யார் சொல்ல முடியும்?      

கல்வி உலகம்

இன்றைய ஹிந்து இலக்கிய விமர்சன இணைப்பில் மூன்று கட்டுரைகள் வாசிக்கையில் மிகவும் யோசிக்க வைத்தன. சமீபத்தில் உயர்த்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியர் எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று. வெறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்க நேர்ந்த போது அதை நம்ப முடியாத ஒரே அதிசயமாக எதிர் கொண்ட ஒரு இளம் கல்லூரி ஆசிரியர், இருபது வருடங்களில் நாற்பது ஆயிரமும் அதற்கு மேலும் சம்பளம் பெரும் வாய்ப்புக் கிடைத்த போது அதை எதிர் கொள்ளும் விதம் இககட்டுரையில் பதிவாகி இருக்கிறது.

மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று விரும்பி அதற்கு பாடுபடும் போது, மாணவர்களே அதை விரும்பாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார். கல்லூரி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் கூட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்கிறார். கடமை உணர்வும், சேவை செய்யும் மனமும் உடைய ஆசிரியர்கள் இப்படி மனச் சோர்வு அடையும் நிலை இருப்பது யார் கவனத்தில் பட வேண்டுமோ அவர்கள் கவனத்தை ஈர்க்குமா?

Friday, October 2, 2009

ஆ.சு வின் கவி உலகம்..

ஆ.சுப்ரமணியன் ஆசு என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். துவரை இவரின் ஆறு தொகுப்புகள் வந்து இருக்கின்றன.
ஆறாவது பூதம்,  அன்றொரு மௌனம், ஈரவாடை, குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன் ஆகியவை ஏற்கனவே வந்தவை. இப்போது 'நேசித்தவனின் வாழ்வுரை' வந்திருக்கிறது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. த.அறிவழகன் இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

"வாழ்வின் சிக்கல்கள் எதிர்பாராத நெருக்கடிகளாகிற போது ஓரளவிற்கு எழுதி வந்த பலரும், தங்கள் அடையாளங்களை மீட்டு எடுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கின்றனர். வெகுசிலரே நெருக்கடிகளையும் படைப்புகள் ஆக்கி மகிழும் சாமர்த்தியம் கைவரப் பெற்றவர்கள் ஆகமாறுகின்றனர். அவ்வகையில் தமிழ்க் கவிதைச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் ஆகவும் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் சாமர்த்தியமாக இயங்குபவர் ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கவிஞர் ஆசு".

கவிஞரின் எண்ணங்கள் ஓடும் திசை பற்றி அவரே சொல்கிறார்: "மொழியின் சாதுர்யத்திற்குள் குரலையும் கருதுக்களையும் ஒளிக்காமல், அதன் தேவைக்கு ஏற்ப கவிதையினை முன் நகர்த்த வேண்டிய பயன்பாட்டுக் கருவியாகவும் படைப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தையும் கவனத்தில் கொள்கிறேன்."   

ஆசுவின் இந்தக்குரல் முக்கியமான ஒன்று. "சின்னஞ்சிறிய குருவி நான், என் கூட்டை அழகாகக் கட்டிக் கொள்வேன்; யாவரின் துயரும் எனக்கானதாய் அகற்றுவேன். புன்னகைகளால் பூமி முழுவதும் நிறைப்பேன், மழை பகிர்ந்து காடுகளை விதைப்பேன்" என்கிறார் ஆசு.

"நிரம்பி வழியும் ஒவ்வொரு வின்மீணிலும் கடவுளின் கண்களில் ஒழி யுமில்கின்றன, ஒரே அன்பின் நீர்மை அந்த விண்மீனில் வழிவதை உணர்கிறேன்". இவ்வாறு ஆசுவின் கவி உலகம் விரிந்து கொண்டே போகிறது. நம் நெஞ்சில் இடம் பெறுகிறது.

Thursday, October 1, 2009

இன்னும் சில சிந்தனைகள்

கடைசியாக  என் சிந்தனைகளில் மீனாக்ஷி முகர்ஜியின் மறைவு மற்றும் நரேன் என்ற சமூக சேவகர் பற்றிய கட்டுரைகள் குறித்து எழுதி இருந்தேன். கடந்த சில நாட்களாக ப்ளாக்-இல பதிவு எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டது.  நேற்றும் இன்றும் படித்த சில விஷயங்கள் பற்றி இன்று பார்க்கலாம். கூகி வா தியன்கூவின் 'இடையில் ஓடும் நதி' நாவல் படித்தேன். தமிழில் இரா. நடராசன் மொழி பெயர்த்து இருக்கிறார். மிக அருமையான நாவல் இது. ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்கள் இப்போது நிறைய தமிழில் வருகின்றன. இந்த நாவலின் களம் மிக வித்தியாசமானது. ஆப்பிரிக்க மக்களின் மரபு ரீதியான சடங்குகள் - வழிபாட்டு  முறைகள் பற்றியும், அவர்கள் நடுவே கல்வியின் விதைகள் விழுந்த பிறகு புதிய மனிதர்கள் உருவாகி வரும் விதம் பற்றியும் இது பேசுகிறது. அந்த மக்களின் ஆன்ம பலம் வெள்ளைக்கார மனிதர்களை எதிர் கொண்ட விதம் பற்றி நெஞ்சம் நெகிழும் வகையில் பதிவு செய்துள்ளது.  

கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் நாவல்படிதேன்.அவரின் முந்தைய நாவல்கள் போலவே இதுவும் வர்க்கப் பார்வை கொண்ட நாவல்தான். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.  Indian literature இதழில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. மிக முக்கியமான கோணங்களில் அலசி ஆராய்கிற கட்டுரைகள் இவை. மதம், மொழி இனம் கடந்து அன்று இந்திய மக்கள் போராடிய விதமும் அவர்கள் பட்ட துயரங்களும்  நம் நெஞ்சங்களில் இருந்து மறைந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது.

Sunday, September 27, 2009

மனிதர்கள் மகத்தானவர்கள்

இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இரண்டு பேரின் மறைவு குறித்து - ஒருவர் இலக்கிய ஆய்வாளர்.  மற்றவர் சமூக சேவகர்.
முதலாமவர் மீனாக்ஷி முகர்ஜி. இவர் ஆங்கில  இலக்கிய உலகில் நம் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் சாதனைகள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார்.இவரின் படைப்புகள் இலக்கிய உலகில் தனது எழுத்துக்கள் மூலம் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலப்படைப்புகள் பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.
இன்னொருவர் நரேன் என்ற சமூக ஆர்வலர். தனது பணிகள் மூலம் சித்தூர் மாவட்டம் வேங்கடராம புறம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழ்க்கைப் பிரச்னைகளில் தலையீடு செய்து வந்தார். நிலம் தான் அவர்களின் வாழ நாள் கனவு. அது நனவாக தனது வாழ நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறார். மிகப்பெரிய நிலவுரிமையாலரின் மகனாக இருந்த போதும், இந்த இலட்சியங்கள் இவரின் வாழ்நாள் செயல்பாடுகளில் முழு இடம் பெற்று வந்திருப்பது ஒரு அபூர்வமான விசயம்தான். மனிதர்கள் மகத்தானவர்கள் ஆக இருப்பது இம்மாதிரி ஆன சமயங்களில்தான்.           

Friday, September 25, 2009

நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி





என் கட்டுரைத் தொகுப்பு. பல மாநில படைப்பாளர்கள் தங்கள் சிந்தனைகளை ஆசிரியரைச் சந்தியுங்கள் என்ற சாகித்ய அகடமி நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் நடுவே பகிர்ந்து கொள்வார்கள்.அந்தக் கட்டுரைகள் Indian literature -இல்  வெளியாவது உண்டு. நான் அந்தக் கட்டுரைகளைத்  தமிழில் மொழி பெயர்ப்பது  வழக்கம். அதில் இருந்து சில பகுதிகளைத் தர விரும்புகிறேன்.
ஆங்கிலத்தில் எழுதுகிற சஷி தேஷ்பாண்டே, மராட்டிய மாநில தலித் எழுத்தாளர் நாராயண் கார்வே ,தெலுங்கு நாவல் ஆசிரியர் வாசிரெட்டி சீதாதேவி, மலையாள நாவல் ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், வங்காள நாவல் ஆசிரியர் மஹா ஸ்வேதாதேவி ஆகிய படைப்பாளர்களின் நேர்காணல்களைத் தமிழ மொழியில் நான் கட்டுரைகள் ஆக தந்திருக்கிறேன்.

முதலில் சஷி இன் 'பெண்-வாய்ப்பும் அங்கீகாரமும்' என்ற கட்டுரையில் இருந்து:   "எனது பால்ய காலத்தில் இருந்தே மூன்று விஷயங்கள் என்னை எழுதுகிறவள் ஆக வடிவமைத்தன.அவை - என் தந்தை ஒரு படைப்பாளி. நான் கல்வி முழுவதையும் ஆங்கில மொழியில் படித்து முடிக்க நேர்ந்தது.  நான் ஒரு பெண் ஆக பிறந்து இருந்தேன்..என் தந்தை ஒரு எழுத்தாளர் என்பது என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்கிற போது, மரபணு சார்ந்த அம்சங்களைப்பற்றி குறிப்பிடவில்லை. மரபணுக்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய பங்காற்றி இருக்க முடியும்? என்னை எழுத்தாளர் ஆக்க அவை எந்த அளவிற்கு உதவி இருக்க முடியும்?-எனக்குத் தெரியாது".

"நடன இசைக் கலைஞ்கர்களுக்கு அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து எடுப்பது போல என் தந்தை என்னை மிகுந்த நுண் கவனத்தோடு ஒரு எழுத்தாளர் ஆக வடிவமைத்தார் என்று நான் கூறுவதாகவும் அர்த்தம் இல்லை".

"இந்தத் தாக்கம் மறைமுகமானது; மிக நுண்மையானது. உதாரணத்திற்கு வீட்டில் இருந்த எண்ணற்ற வெவ்வேறு விதமான புத்தகங்களும் அவற்றை வாசிக்க முடிந்ததும்.
 விரைவில்லையே, படிப்பது  என்பது சுவாசிப்பதையும், சாப்பிடுவதையும் போலவே  ஒரு  அடிப்படைத் தேவை ஆயிற்று. இன்று வரை நான் புத்தகங்களுக்கு அடிமையாகவே இருக்கிறேன் என்பதையும் நினைவு கூர்கிறேன்".




சஷி தேஷ்பாண்டேயின் சிந்தனைகள் இப்படித் தொடங்கி மேலும் விரிவாக வளர்ந்து செல்கின்றன. தனது அப்பா தங்களுக்கு - அவரின் அன்பு பிள்ளைகளுக்கு -கருத்துச்சுதந்திரம், அறிவுச் சுதந்திரம் தந்தது பற்றிச் சொல்கிறார். எழுத்து இவருக்கு வெறுமனே ஒரு தொழில் அல்ல.அது ஒரு விதமான வாழ்க்கைப்பாதை. சசிக்கு எழுதுவதென்பது ஒரு தீவிரமான பணி, அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. தனது எழுத்துபோக்கின் வளர்ச்சிபோக்கைத் திசை திருப்பிய ஒன்று - ஒரு சிறுகதை.

நமது எழுத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி மிக்க திருப்பங்கள் நமக்காகக் காத்திருக்கும் என்கிறார் சசி. எழுத்து மூளையைத் தாக்குகிற நிகழ்வனுபவம் அது என்கிறார். அறிவின் உள்ளார்ந்த வலிமையினை அறிய முடிந்தது என்கிறார். இந்த உலகம் ஆணின் உலகம். ஆகவே ஒரு பெண் ஆணைப்போல் பார்க்கப் படுவது இல்லை. அவளது எழுத்தும் ஆணினுடைதைப்போல் அல்ல.


தான் ஒருபெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப் படாவிட்டாலும் அங்கீகாரம் மறுக்கப் படுகிறது என்றே தான் கருதுவதாக சசி கூறுகிறார். இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார் - "மானுட வாழ்வின் பிரச்னைகளை கையாள்கிற ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எனக்கான இடமும் கௌரவமும் மறுக்கப் படுகின்றன. மானுடத்தின் மீதான எனது அக்கறை நிராகரிக்கப் படுகிறது". சசியின் குரலில் நம் பெண் எழுத்தாளர்கள் அனைவரின் குரலையும் கேட்க முடியும்.