Monday, December 30, 2013

அகக் கடலில் அலைமோதும் எண்ணங்கள்

முக நூலில் போன மாதம் முகங் காட்டினேன்.அதன் பிறகு கடந்த சில நாட்களில் அதில் பல புதிய நண்பர்களின் அறிமுகம் தொடர்கிறது.சற்று முன்  ஜீவசுந்தரி அவர்கள் கொடுத்த குறிப்பைப் பார்த்தேன். எந்த ஊரில் நான் வளர்ந்தேன் என்று ஒரு கேள்வியும் இருந்தது.திண்டுக் கல் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த நான் படித்து அங்கு டெக்னிக்கல் ட்ரைனிங் படித்தேன். சென்னை,வேலூரில் வாழ்க்கை.பின் மீண்டும் சென்னை.இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஓடும் வாழ்க்கை நதி.எழுத்தும் படிப்பும் இரு கண்களாய் இருக்கின்றன.1970 ம் ஆண்டு என் முதல் சிறுகதை மத்தாப்பு இதழில் வந்தது.பின் தொடர்ந்து கல்கி,குங்குமம், தீபம் செம்மலர்,சிகரம்,தினமணி கதிர் சுபமங்களா குமுதம் தீராநதி புதிய புத்தகம் பேசுது என்று பல இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் மொசிபெயர்ப்புகளும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.என் முதல் சிறுகதைத் தொகுப்பை மறைந்த "அன்னம்' மீரா அவர்கள் வெளியிட்டார்.பாத்து ஆண்டு இடைவெளிக்குப் பின் "நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி கட்டுரைத்தொகுப்பை ஸ்ரீநிவாசன் வெளியிட்டார். தொடர்ந்து பன்னிரண்டு புத்தகங்கள் வந்து விட்டன. உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வரலாற்று நூலும் மிச்சம் மீதி என்று ஒரு வித்தியாசமான வரலாற்று நூலும் வந்துள்ளன. கடைசியாக வந்திருப்பது ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூல்.எழுத்துக் கலை என்ற ஜீவ நதியின்கரை ஓரம் நின்று நீர் அள்ள முயலும் தாகம் நிறைந்த ஒரு மனிதன் என்பதற்கு மேல் இப்போது வேறு என்ன எழுத?    

Tuesday, December 3, 2013

குயில் பாட்டும் புது மின்னலும்

 இந்தப் பதிவில் எனது இடுகை இடம்பெற்று நீண்ட காலம் ஓடி விட்டது.எண்ணங்கள் என்னவோ அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன.அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் என்று பொன்னியின் செல்வன்  வரும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.படிக்கும் ஒவ்வொரு புதிய புத்தகமும் நமது சிந்தனைகளைக் கூர்மை ஆக்குகின்றன.கல்கத்தா சு.கிருஷ்ணாமூர்த்தி எழுதிய என் வாழ்க்கைப் பயணம் புத்தகமும் அவ்வாறே எண்ணற்ற நினைவு அலைகளை எழுப்பியது.தீபம் பத்திரிகை அதில் வந்த பல முக்கியமான படைப்புகள் பற்றிய பதிவுகளை அவர் செய்திருக்கிறார்.வேறு பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.உதயசங்கர் மொழி பெயர்ப்பில் சதாத் ஹசன் மோண்டோ கதைகள் நூலும் அவற்றில் ஒன்று. சிவப்பு மழைக் கொட்டு அணிந்த பெண் என்ற கதை உட்பட அவரின் மிக முக்கியமான கதைகளை உதயசங்கர் மிக உணர்ச்சித் துடிப்புடன் தமிழில் தந்திருக்கிறார்.இன்னும் முழுமையாகப் படித்து முடிக்க முடியவில்லை.இன்று மகாகவி பாரதியின் குயில் பாட்டு நீள் கவிதையை மீண்டும் எடுத்துப் படித்தேன்.புதுமின் என்ற சொற் பிரயோகம் நெஞ்சில் பதிந்தது.இதே பிரயோகத்தை ச.து.சு.யோகி தன பாடல் ஒன்றில் பிரயோகித்ருக்கிறார்.குழ்ந்தை யின் மென்னுடலை புதுமின் போல் வளயுமுடல் என்கிறார்.மின்னல் என்பதே ஒரு புதுப் பாய்ச்சல்தான். அதில் புது என்பதும் செரும்விந்தையை இந்த இரு கவிகளும் வியந்து பாடுகிற அழகை வியக்காமல் இருக்க முடியவில்லை.