Sunday, December 28, 2014

மாதொரு பாகன் நாவலும் பண்பாட்டுக் காவலர்களும்

பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல்,"மாதொரு பாகன்" என்பது.அந்த நாவல் வந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன.இப்போது அந்த நாவல் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு காலச் சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.அதில் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஊரில் உள்ள இறைவன் மாதேஸ்வரனை இழிவு படுத்தியும்,குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பண்பாடு குறித்து தவறான சித்தரிப்புகளைச் செய்தும் பெருமாள் முருகன் எழுதி இருப்பதாக ஹிந்துத்வா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.நூலின் ஆசிரியர்,  பதிப்பாளர் கண்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பிரச்னை முன்னுக்கு வந்திருப்பது மிக ஆச்சரியம் அளிக்கிறது.திட்டமிட்டு இப்படி கலைஞ்ர்களையும் ஓவியர்களையும்,படைப்பாளிகளையும் ஹிந்துத்வ அமைப்புகள் குறி வைத்துத் தாக்குவது சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது.இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ச.தமிழ்ச்செல்வனும் அர்ஜுன் சம்பத்தும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.நூலை படித்தீர்களா என்று தமிழ் கேட்ட போது  படிக்கவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அது தடை செய்யப்பட வேண்டிய நாவல் என்று சொல்லுகிற இவர்களை என்னவென்று சொல்லுவது? இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்ப் படைப்புலகம் ஒன்று திரள வேண்டும்,ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் இந்த விஷயம் பற்றி  எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்?   

Thursday, December 18, 2014

தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள்

அமரர் தீபம் நா.பா. அவர்கள் பிறந்த நாள் இன்று.அவர் இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது என் நீண்ட கால வழக்கம்.அவரும் உடனே பதில் எழுதுவார்.அந்த மணி மணியான கைஎழுத்துகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று அவ்வளவு அழகாயிருக்கும்.இன்று தமிழ் இந்து நாளிதழில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரை வந்திருந்தது எனக்கு வியப்பாய் இருந்தது.நா.பா.வின் தீபம் இதழ் பல எழுத்தாளர்களைப் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.பலர் தீபம் மூலம்தான் தமிழ் எழுத்துலகில் ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.ஆனால் நா.பா.மறைந்த சில வருடங்களுக்குள்  அவரின் நினைவு கூட அவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது.இதுதான் உலகம்.அது ஒரு புறம் கிடக்கட்டும்.
                     நா. பா.என்றொரு படைப்பாளியின் நாவல்களில் இருந்துதான் எனக்கு ஒரு இலட்சிய வாழ்க்கை பற்றிய கனவுகள் கிளைத்தன .குறிஞ்சி மலரின் அரவிந்தன்,பொன்விலங்கின் சத்யமூர்த்தி,மலைச்சிகரத்தின் நவீனன் என்று ஒவ்வொரு நாவலின் நாயகனும் நான்தான் என்ற மனப் பதிவில் திரிந்த காலம் அது.தீபம் இதழை ஒவ்வொரு மாதமும் காத்திருந்து வாங்குவது,வரி விடாமல் படிப்பது,படிதததுமது பற்றி கடிதம் எழுதுவது என்று தான் எனது அலுவல் அட்டவணை இருக்கும்.வாசகர் கடிதப் பகுதியில் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் எனது கடிதத்தின் சில வரிகள் பிரசுரம் ஆகியிருக்கும்.அதைப் படித்துப் பரவசம் அடைந்த காலம் அதுஇன்று அவர் இல்லை.தீபமும் இல்லை."அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்"என்ற பாரி மகளிர் சோகம் பற்றிய கபிலர் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.அவர் எழுதிய "நானூறில் நல்ல காட்சிகள்' என்ற நூலில் புற நானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எளிய விளக்கங்களுடன் தந்திருப்பார்.ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் புனைவுத் தன்மையுடன் இருக்கும்.அதில் ஒரு கட்டுரையின் தலைப்பு,"முல்லையும் பூத்தியோ ' என்பது.புலவர் ஒருவரின் நண்பரின் நினைவு அலை மோதும் உள்ளத்துடன்  அவர் என் நண்பன் இல்லாத இந்தச் சமயத்தில் நீ ஏன் பூக்கிறாய் எதற்காகப் பூக்கிறாய் என்று புலம்பும் காட்சியை நா.பா. சோகம் ததும்ப சித்தரித்திருப்பார்.இப்போது நா.பா.இல்லை.ஆனால் அவரின் எழுத்துகள்  சாகா வரம் பெற்றவையாய் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன...............தீபத்தின் சுடர் அது.என்றும் அணையாச்சுடர் அது! 

Sunday, November 30, 2014

velichathin adiyil iruttu.

வெளிச்சத்தின் அடியில் இருட்டு  இன்று காஞ்சிபுரம் இலக்கியக் களம் நிகழ்வில் வெளி ரங்கராஜன் எழுதிய "வெளிச்சம் படாத நிகழ் கலைப் படைப்பாளிகள்"என்ற நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.நானும், பேராசிரியர் இரா .  சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு நூல் பற்றி பேசினோம்.ரங்கராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அமுத கீதன் இருவரும் நடத்தும் இலக்கியக் களத்தின் முப்பத்தி ஏழாவது நிகழ்வு இது.தோழர் சுந்தா வந்திருந்தார்.மழை கொட்டிய கொஞ்ச நேரம்.சில்லென்று குளிர்ந்த சூழல்.நல்ல மனநிலை வாய்த்தது.காந்தி மேரி,பாவலர் ஓம் முத்துமாரி,கும்பகோணம் பாலாமணி,மதுரை எம்.ஆர்.கமல் வேணி போன்ற பல நிகழ் கலைக் காரர்களின் வாழ்க்கை அனுபவங்களும் அவர்களின் கலை வெளிப்பாட்டு உன்னதங்களும் காலத்தின் போக்கில் வடிந்து சுவடுகள் அற்றுப் போகிற சோகம் பற்றி ரங்கராஜனின் மனப் பதிவுகள் இவை."தீரா நதி"இதழில் தொடராக வந்தவை.கலை வெளிச்சம் ததும்ப வாழ்ந்த ஆளுமைகள் தமது சொந்த வாழ்வின் சோகங்களைப் பொருட்படுத்தாமல் கலை தரும் உன்னதத்தில் தங்களை மறந்து வாழ்ந்து மடிந்து போகிற கதைகள் இவை. மகாபாரதப் பிரசங்கியான ஏ.கே.செல்வதுரை நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அவரும் ஒரு கூத்துக் கலைஞர் என்பதை அவரின் உடல்மொழி புரிய வைத்தது.ஒரு நிமிடத்தில் துரியோதனன் வேஷத்தில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் தருவும்,அடவும் அவரிடம் கொஞ்சி விளையாடின.தொழு நோய் கண்ட ஒரு கலைஞர் மேடை ஏறி வேஷம் கட்டியதும் துரியோதனன் ஆகவே மாறி சண்டமாருதம் போல் பொழியும் விந்தையை அவரின் நினைவு அடுக்கில் இருந்து நிகழ்த்திக் காட்டினார்.உலகம் மகிழத் தங்கள் கலைகளை அரங்கேற்றும் இவர்களின் சொந்த வாழ்க்கை இருட்டில் உழல்கிற சோகங்களை வெளி ரங்கராஜன் மிகுந்த  உணர்வு மயமான தொனியில் பதிவு செய்து கொண்டு போகிறார்.நமது சமகாலக் கலை ஆளுமைகளின் வாழ்வு இருட்டில் இருக்கும் போது கலை மாமணி விருதுக்கு நமது இயல் இசை நாடக மன்றங்கள் யாரைத் தேர்வு செய்கின்றன என்ற கேள்வி முக்கியமானது.விடைதான் கிடைப்பதில்லை.ரங்கராஜன் தேடி அலைந்த அனுபவங்கள் இவை.வாசித்துத் தீராத சோகங்களின் தொகுப்பு. 

Tuesday, November 4, 2014

புத்தகங்கள் வாசித்தலும்,அறிமுகமும்

பள்ளிக்கூட நாட்களில் இருந்து படிக்கும் பழக்கம் இருக்கிறது.வாய்த்த ஆசிரியர்களும் பள்ளி நூலகமுமே இதற்கு மிக முக்கியமான காரணம் என்றால்,இன்றுள்ள சூழலில் நம்புவதே கடினம்.ஆனால்,என் மனப் பரப்பில் அலையோடும் நினைவுகள் அந்த உண்மையை என்றென்றும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன.வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனது அறியாமைகளை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது.படிப்பதில் உள்ள மகிழ்வுக்கு சற்றும் குறைந்தது அல்ல,அந்தப் புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதில் உள்ள மகிழ்ச்சி.எனவேதான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் எழதி வரும் கட்டுரைகளில் மிகப் பெரும்பாலானவை நூல் அறிமுகக் கட்டுரைகளாக இருக்கின்றன.அவை விமர்சனங்கள் அல்ல.ஆய்வுரைகளும் அல்ல.அக்கட்டுரைகளை வெளியிடும் இதழ்கள் அவற்றை விமர்சன,மதிப்புரைக்கும் கட்டுரைகள் என்று ஏதேனும் தலைப்பிட்டிருந்த போதிலும்,என்னைப் பொறுத்தவரை அவை அடிப்படையில் ஒரு வாசகனாக நான் உணர்ந்ததை உணர்ந்தபடியே பதிவு செய்யும் முயற்சிகள் மட்டுமே.எந்த ஒரு நூலையும் ஒற்றை வரியில் தண்டம் என்றோ,குப்பை என்றோ தூக்கி எறிவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை.எவ்வளவு மோசமாக எழதப்பட்ட ஒரு நூலிலும் ஒரு வரியேனும் நமக்கு ஒர்  உண்மையை,ஒர் அழகை,ஒரு புதிய தகவலை நமக்கு வழங்குவதாக இருக்கும் என்பது என் அனுபவமும் நம்பிக்கையும் ஆகும்.ஆனால்,இந்த அணுகுமுறைதான் சரி என்று நான் வாதிடுவதில்லை.இன்று புகழும் பெரும் பெற்று விட்ட படைப்பாளிகள் சில நேரங்களில் போகிற போக்கில் பெரும்பாலான நூல்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பது போல தூக்கி எறிவதைப் படிக்கும் போது வருத்தம் எழுகிறது.இன்றைய அவர்களின் வளர்ச்சி நிலையில் அது சரிதான் என்று அவர்கள் கருதலாம்.ஆனால்,இத்தகைய நிராகரிப்புகளால் காயப்பட்டு,கருகிக் காணாமல் போகும் எழுத்தாளர்கள்தான் எனக்குப் பெரும் மனச்சுமையை உண்டாக்குகிறார்கள்.வெளிவந்து கொண்டிருக்கும் நூல்களை முடிந்தவரை வாசகப் பரப்பின் முன்வைப்பது அவசியம்.அது ஒவ்வொரு வாசகனின் கடமை.எஸ்.ஆர்.ரங்கநாதன்,தமிழ்நாட்டின் நூலகத் தந்தை.அவரின் ஐந்து.கட்டளைகளில் ஒன்று,ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாசகரைக் கொண்டது என்பது.இந்த அடிப்படையில்,ஒவ்வொரு நூலின் மீதும்  எங்கிருந்தோ யாரோ ஒரு கருத்தைச் சொல்லத் தவித்து,சொல்லியும்,சொல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு.அப்படி எங்கேனும் சன்னமாக தயக்கத்துடன்,தாழ்வு மனப்பான்மையுடன் ஒலிக்கும் குரல் கேட்கிறதா சற்று செவி கொடுப்போம் 

Saturday, October 25, 2014

meendum en jannalil

மீண்டும் என் ஜன்னலில்

 இந்த ஆண்டில் இதுவரை மூன்று பதிவுகள் மட்டுமே செய்திருக்கிறேன்.இன்று மீண்டும் என் ஜன்னலைத் திறந்து பார்க்கையில் சென்று மறைந்த நாட்களின் நினைவுகள் அலை மோதுகின்றன.காலம் ஒரு கொடூரம் மிகுந்த சக்தி.அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கும் போது எதைப் பற்றியும் அதற்குத் தாட்சண்ணியம் இருப்பதில்லை.எனது மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடங் கி கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடி விட்ட போதிலும்,முதல் அங்கீகாரம் சமீபத்தில் "திசை எட்டும்" காலாண்டு இதழின் மூலம் கிடைத்தது.குறிஞ்சிவேலன் எனக்கு "நல்லி-திசை எட்டும்"விருது வழங்கப் பட இருப்பதாகத் தெரிவித்த  நாளில்  சற்றே உற்சாகம் வரத்தான் செய்தது.ராஜபாளையம் நகரில் செப்டம்பர் பதினெட்டு அன்று விருதை வழங்கினார்கள்.அடுத்த மாதமே இன்னொரு விருதும் அந்த நூலுக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான்.கலை இலக்கியப் பெருமன்றமும்,என்.சி.பி.ஹெச்.புத்தக நிறுவனமும் இணைந்து வழங்கும் மொழிபெயர்ப்பு விருது அக்டோபர் பன்னிரண்டாம் தேதி அன்று வழங்கப் பட்டது.திருச்சியில் நடந்த விழா அது.அறுபதாவது வயதின் தொடக்கத்தில் இப்படி ஒரு விருது வழங்கப் படுவது என்ன விளைவை உண்டாக்கும் என்பது இனி இருக்கிற நாட்களில்தான் தெரிய வரும்.எழுதுவதும்,படிப்பதுமே வாழ்க்கை என்று இருந்து விட்ட பலரும் இறுதிக் காலத்தில் அடைகிற உணர்வு என்னவாக இருக்கும்?பெருபாலும் சோர்வு என்றுதான் தோன்றுகிறது. எனினும் இன்று ஒரு புதிய நூலில் ஒரு பக்கம் படிப்பது கூட ஒரு புத்துணர்வைக் கொண்டு வரத்தான் செய்கிறது.
புத்தகங்கள் செய்யும் மாயம் அது. 

Friday, April 4, 2014

தி. க .சியின் மறைவும் தமிழ் இலக்கிய உலகமும்

தி. க .சியின்  மறைவும் தமிழ் இலக்கிய உலகமும் பற்றி யோசிக்கையில் பெரும் துக்கம் வந்து மனதில் நிரம்பி விடுகிறது.தி. க. சி. அவர்கள் மறைந்த செய்தி கேட்டதுமே உடனே இறுதி அஞ்சலி செலுத்தப் போவது என்ற முடிவை எடுத்து விட்டேன்.பஸ்ஸில் கிளம்பி மதுரை போனதும் அருண்மணி சாரின் யோசனைப்படி அங்கு பையைப் போட்டு விட்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன்.அந்த நகரம் பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகி இருந்ததை உணர முடிந்தது.சுடலை மாடன் தெருவில் நுழைந்தபோது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கசிந்தது.தி. க.சியின் உடலுக்கு மாலை அணிவித்து விட்டு வண்ணதாசனின் கையைப் பற்றிக் கொண்டு மௌனமாயிருந்தேன்.வேறு என்ன செய்ய?அவரும் மிகத் தளர்ந்து போயிருந்தது நன்கு புலப்பட்டது.கமலவேலன்,நெல்லை.சு.முத்து ,ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன்,சிகரம் செந்தில்நாதன்,பிரின்ஸ் கஜேந்திர பாபு ,எஸ்.ஏ.பெருமாள்,இளையபாரதி,தோப்பில் முகம்மது மீரான்,ஜனநேசன்,என்று பல எழுத்தாளர்கள் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.மூத்த தலைவர்கள் பழ.நெடுமாறனும்,நல்லகண்ணுவும் வந்து இறுதி ஊர்வலம் தொடங்கும் வரை காத்திருந்தனர்.மிக எளிய விதத்தில் அந்த ஊர்வலம் தொடங்கியது.அவரின் பயணம் முடிந்ததைக் குறிக்கும் ஒரு பயணம் தொடங்கியது ஒரு துயர முரண்.தி.க.சி.ஒரு பாரம்பரியத்தின் இறுதிக் கட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்  தியவரோ என்றுதான் தோன்றுகிறது.அவர் முன்னெடுத்த ஒரு அணுகுமுறையை இன்றைய நவீன  எழுத்து முறைக்காரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.கேலிக்குரிய ஒன்றாக அவர் போஸ்ட் கார்டு பயன்படுத்துவதைக் கிண்டல் செய்த மாபெரும் இலக்கிய எழுத்து வேந்தர்கள்இங்கு அதிகம்.தன்னையும் தனது எழுத்து முயசிகளையும் தவிர வேறு எந்த எழுத்தாளரின் படைப்புகளையும் படிக்கக் கூட நேரம் இல்லாதவர்கள் இவர்கள்.இவர்களால் வேறு ஒரே ஒரு ஆளைக் கூட உத்வேகப்படுத்த முடியாது. மாறாக இடுப்பொடித்து எழுத விடாமல் முடமாக்கதான் முடியும்.ஆனால் தி.க.சியின் போஸ்ட் கார்டுகள் என்னையும் கமலவேலனையும் போல எண்ணற்ற பலரை உத்வேகப் படுத்தியவை.வண்ண நிலவன் கல்கியில் எழுதிய கட்டுரையை அவர்கள் மாச்சரியம் இல்லாமல் திறந்த மனதுடன் படித்தால் போதும்.அவர்களின் மனச் சான்றின் குரலுக்கு செவி சாய்த்தால் போதும். ஆனால்?     

Thursday, March 13, 2014

கனவுகள் சிறகு விரிக்கும் காலம்

இந்த ஆண்டின் இரண்டாவது பதிவு இது.எனது புத்தகம் "தமிழ் நாட்டில் தேவதாசிகள்' வெளியாகி பரவலான கவனம் பெற்றுள்ளது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் மொழியாக்கம் இது.இது தவிர கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூலையும் எழுதி அதை வையவி பதிப்பகம் மூலம் வெளியிட்டு உள்ளேன். பல புதிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.கனவுகள் சிறகு விரிக்கும் காலம் இது.இந்த மாத "புதிய புத்தகம் பேசுது' மற்றும் "உங்கள் நூலகம் 'இதழ்களில் எனது நூல் அறிமுகக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.சதத் ஹசன் மாண்டோ வின் சிறுகதைகளை நண்பர் உதயசங்கர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.உருது மொழியின் இணையற்ற படைப்பாளியான மாண்ட்டோ கதை உலகம் துயரம் நிரம்பியது.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கைப் பதிவுகள் அவை.அந்தக் கொந்தளிப்பை,அதன் வலியை ,உக்கிரத்தை வெடிப்புறப் பேசுகிற கதைகள் இவை.படிக்கிற போதே நம் குருதியை உறையச் செய்பவை..மதம் என்னும் பேயின் வெறியாட்டம் எப்படி இருக்கும்,என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்று அறியவும் உணரவும் இக்கதைகள் தம்முள் எண்ணற்ற வழிகளை திறந்து விடுகின்றன.உள்ளே நுழைந்து நாம் கவனிக்கத் தொடங்கினால் போதும்.நமது மனச்சான்று விழித்துக் கொள்ளும்.அதன் குரல் நம்மைத் தூங்க விடாது.இந்தப் பூமியில் இனி மானுடம் மதத்தின் பேரால் மோதி மடியாத காலம் வருமா என்று நம்மை ஏங்கச் செய்து விடுகிற கதைகள் இவை.நல்ல கனவுகள் நனவாகும் காலம் வருமா  

Wednesday, January 29, 2014

புதிய களங்களும் புதிய முயற்சிகளும்

இந்தப் பதிவில் இடுகை இட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டன.புதிய ஆண்டின் முதல் பதிவு இது.புத்தகக் கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்திருக்கிறது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய "தமிழகத்தில் தேவதாசிகள்" என்ற புத்தகத்தை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.வெண்ணிலா முருகேஷ் ஆகியோரின் அகனிவெளியீடாக வந்திருக்கிறது.தமிழ்நாட்டின் பண்பாடு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அம்சம் இந்த தேவதாசிகள் என்ற நிறுவனம்.இது தொடங்கிய போது மிக உயரிய விதத்தில் கலை,இலக்கியம்,நடனம் போன்ற அம்சங்களின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.கோயில் என்ற நிறுவனம் சார்ந்தே தேவதாசிகள் இயங்க வேண்டி இருந்ததால் அவர்களை சுரண்டி எல்லா விதமான ஊழல்களும் வளர்ந்து பெருகி விட்டன.அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசின் வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த தேவதாசி அமைப்பு விளங்கி வந்திருக்கிறது.அதன் தோற்றம், வளர்ச்சி,பின் காலப்போக்கில் அதன் சரிவு இறுதியில் அதன் முடிவு என்று எல்லா அம்சங்களையும் இந்த நூல் ஆராய்கிறது.ஏராளமான ஆவணங்களின் துணை கொண்டு எளிய முறையில் இந்த நூலை சதாசிவம் எழுதியிருக்கிறார்.