Tuesday, April 20, 2010

களப்பணியாளர்களும் அங்கீகாரமும்..........!

அங்கன்வாடி என்கிற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் பணியாற்றுகின்ற களப் பணியாளர்களின் பணிகள் நடுவே நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,தொடர்ந்து சில தினங்களாக அவர்கள் நடுவே பேசியசந்தர்ப்பத்தில் சில உண்மைகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒப்பீடு அளவில் குறைந்த சம்பளம்;இன்னும் அரசு ஊழியர் என்ற நிரந்தரத் தகுதி பெறாத நிலை;நீண்ட காலமாகக் கோரி வரும் சில சலுகைகள் கிடைக்காத ஏமாற்றம்;இவ்வளவு இருந்தும் தம் பொறுப்பில் இருபத்தைந்து குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டிருகின்றனர் என்பதில் அவர்களுக்கே உரித்தான பெருமிதம்;சமூகம் அங்கீகரிக்க விட்டாலும் தம்மிடம் வளரும் குழந்தைகள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் தம்மை மதித்து வந்து எங்கே கண்டாலும் பேசு கிரார்கள்; என்கிற ஒரு நிறைவை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.அதுதான் அவர்களை இயக்கம் உயிராற்றல்.அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது பயிற்சியின் நோக்கம்.நாம் வாசிப்பு,பாடல்கள்,கதைகள்,பல்வேறு பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து சில எடுத்க்காட்டுக்கள் என்று அந்த ஈடுபாட்டை ஏற்படுத்தமுயல்கிறோம். அது நிறைவேறவும் செய்கிறது.அதை அவர்களின் முகப் பிரகாசத்திலும்,கண்களின் ஒளியிலும் ஓரளவு பேச்சிலும் நம்மால் உணர முடிகிறது.ஆனால், இந்த மாதிரிக் களப் பணியாளர்களுக்கு என்று,எப்படி,யார் அங்கீகாரம் வழங்கப்போகிறார்கள்?இந்தக் கேள்விதான் கடந்த ஒரு வருடமாகவே என் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது.அறிவொளி இயக்கம் என்கிற எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோர் கல்விப் பணியில் இருபது ஆண்டுகள் இடைவெளியே இல்லாமல் பணியாற்றிய அனுபவம்,பட்டறிவு மட்டுமே இப்போது மீந்திருக்கிறது.இந்தப் பணிகளின் வெற்றி,தோல்விகள் ஒரு புறமிருக்க,இப்படி பணி செய்திருக்கிறார்கள் என்பதையாவது இந்தச் சமூகம் தன மனதில் பதிவு செய்திருக்கிறதா?இது மில்லியன் டாலர் கேள்வி.இந்தக் கேள்வியை மனதில் சுமந்து கொண்டேதான் எங்களை போலவே களப்பணி செய்யும் அங்கன்வாடிப்  பணியாளர்களை உற்சாகப் படுத்தும் பயிற்சியை நடத்த நாங்கள் போகிறோம்.நல்ல நகைமுரண்தான் இது!

No comments:

Post a Comment