Tuesday, August 3, 2010

thirunangaiyarin eluthukal......

மூன்றாம் உலகம் என்ற வார்த்தை அரசியல் சார்ந்த ஒரு சொல்லாடல் என்பதே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எனது புரிதலாக இருந்தது. ஆனால் மூன்றாம் பாலினம் ஆக இருக்கும் திருநங்கையர் நடுவே எழுதும் முனைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அறிந்த பின் இந்தச் சொல்லாடலின் மற்றொரு முனை என் மனதில் பதிந்தது.ப்ரியா பாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலை வாசித்த பொது கூட இந்த உண்மை அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை.அவர்களில் எழுத்தார்வம் உள்ள சிலரை உற்சாகப் படுத்த வேண்டும் என்றும் எழுதுக்களை சார்ந்த ஒர் உரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என்று ப்ரியா பாபு அழைப்பு விடுத்த போதும் கூட அதன் முழுப் பரிமாணமும் பிடிபடவில்லை.ஆனால் அந்த நிகழ்வின்போது தங்கள் ஏன் எழுத விரும்புகின்றனர்,அவ்வாறு எழுத விடாமல் அவர்களைத் தடுக்கும் சுவர்கள் எவை,எப்படி அந்தச் சுவர்களைத் தகர்ப்பது,எதை எழுதப் போகிறோம்,எப்படி எழுதலாம்,எழுதியவற்றை எப்படி நூலுருவில் கொணர்வது என்றெல்லாம் ஒரு நூறு கேள்விகளுடன் வந்திருந்த அவர்களின் நடுவே பேச முற்பட்ட போதுதான் அந்தப் பொருள் சார்ந்த என் அறியாமைகளை உணர முடிந்தது.எனக்குப் பிடித்த சில படைப்புகள்,அவை சார்ந்த சில உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களால் அதில் பெருமளவு ஈடுபாடு காட்ட முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.அந்த அசிரத்தை ஏன் என்ற கேள்விக்கான விடையை ப்ரியா பாபுவே கடைசியில் சொன்னார்.இலக்கியப் படைப்புகள் என்று எதையும் இன்னும் படிக்காதவர்கள்,படிக்கக் கிடைக்காதவர்கள்,படிக்க நேரமும் உகந்த வாழ்க்கை சுழலும் வாய்க்கaதவர்கள் வாழ்க்கையின் கோரப் பல்சக்கரங்களின் நடுவே அரைபட்டுக் கிடப்பவர்கள் என்ற நிலையில் எப்படி அவர்களால் நமது "உன்னத' இலக்கியங்களில் ஈடுபாடு காட்ட முடியும்?இந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்று?விடை தெரியாத கேள்வியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment