கல்வி என்ற ஒரு மருந்துதான் சமூகத்தின் பல அவலங்களுக்கும் நிவாரணி என்று உலகெங்கும் பல சிந்தனையாளர்கள் பல காலமாய் எழுதியும்,பேசியும் வந்திருகிறார்கள்.இந்திய நாட்டில் விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெற்றுவிட வேண்டும் என்ற கனவுடன் உழைத்தவர்கள் ஏராளம்.அவர்களில் குறிப்பாக கிறித்துவ இறைப் பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிகள் பெரும்பாலும் ஒடுக்குமுறை இயந்திரத்தின் பகுதியாகவே இருந்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் இந்த நாட்டு மக்களின்பால் அன்பும் அக்கறையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.சென்னையில் கர்னல் ஆள்காட் அவர்களில் ஒருவர். பஞ்சமர் இலவசப் பள்ளிகள் துவங்கி அவர் செய்த அரும்பணி பற்றிப் படிக்கும் போதுதான் தெரிகிறது இந்த மண்ணில் அவர் போன்றவர்கள் செய்த அளவுக்குக் கூட நம் நாட்டுத் தலைவர்கள் பலர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்ற உண்மை."பறையர் வரலாறு" என்ற தனது நூலில் ஆள்காட் சொல்கிறார்: "நிரந்தரமான நன்மைகளைத் தருமென்று நம்பியவைகளை மட்டுமே நான் அவர்களுக்குக் கொடுத்தேன். எந்த வகையான கட்டணமும் இல்லாமல் அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைத் திறந்தேன்......சமையல் செய்வது,கிழிந்த ஆடைகளைத் தைப்பது,உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது,குடும்பக் கணக்கினை எழுதுவது போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.அவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும்நல்ல ஊதியம் தருவதுமான வேலையைப் பெற்று அவற்றில் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இப் பயிற்சியை அவர்களுக்கு அளித்தேன்" என்கிறார் கர்னல்.இந்தப் பார்வை நம்மில் எதனை பேருக்கு இருந்தது?இருக்கிறது?
No comments:
Post a Comment