Monday, September 4, 2017

எழுதிக்கொண்டிருக்கும் காலம்

இந்தப்பகுதியில் நான் என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.2015--ஆம் ஆண்டில் இரண்டுமுறை பதிவு செய்ததற்குப்பின் இன்றுதான் மீண்டும் பகிர முனைந்துள்ளேன்.இதற்குப் பல காரணங்கள்.பணிகள், குடும்பத்தில் இடமாற்றம் போன்று எத்தனையோ.மீண்டும் இந்தப்பகுதியில் எழுதுவது என இன்று தோன்றியது.
         இந்த இடைக்காலத்தில் நான் மொழி பெயர்த்த இரண்டு முக்கியமான புத்தகங்கள் கடந்த ஜனவரியில் புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகின. ஒன்று ரொமிலா தாபரின் "சோமநாதர்-வரலாற்றின் பல குரல்கள்" என்ற நூல்.இரண்டாவது அமெரிக்காவில் ஜான் ஹாப்ஹின்ஸ் பல்கலையில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆனந்த்பாண்டியன் எழுதிய 'திரையகம் ' என்ற புத்தகம்.இரண்டுமே தலா  ஐநூறுக்கு மேற்பட்ட   பக்கங்கள் கொண்டவை. இவைதவிர 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "தட்டுப்படாத காலடிகள்' என்ற சிறுகதைத்தொகுதியும் வெளியானது.இது மலேசியத்தலைநகரான கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது.கலைஞன் பதிப்பகத்தின் அறுபது ஆண்டு விழாவை ஒட்டி அங்கு நான் உட்பட அறுபது எழுத்தாளர்கள் சென்றிருந்தோம்.எழுத்தாளர் உதயசங்கரின் 'தூரம் அதிக  மில்லை" என்ற தொகுப்பு உட்பட அறுபது புத்தகங்கள் அங்கு வெளியாகின.
           இந்த மாதம் முதல்தேதியன்று என் "அமைதிக்கு ஒரு சிற்றேடு" என்ற மொழிபெயர்ப்பு நூல்வெளியாகிஉள்ளது.பாரதி புத்தகாலயம் இதை மிக நல்ல முறையில் வெளியிட்டுள்ளது.இதை மொழிபெயர்த்து ஏழு,எட்டு ஆண்டுகள் ஆகியிருப்பினும் இப்போதுதான் பாரதியில் இது நூல்வடிவம் பெற முடிந்துள்ளது.அந்தப் புத்தகம் மதுரை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஐம்பது புதிய புத்தகங்களுள் ஒன்று.
       எழுதுகிறேன்;காலமும் எழுதிக்கொண்டிருக்கிறது...!    

No comments:

Post a Comment