Sunday, October 11, 2009

ஒரு இடைவெளிக்குப்பின்.

அக்டோபர் 5 ஆம் நாளுக்குப்  பிறகு, இந்தப்பகுதியில் எதையும் எழுத முடியவில்லை. என்ன காரணம் என்றே தெரியாமல் ஒரு சோர்வு. நம் சிந்தனைகளில் ஓடுகிற அனைத்தையும் எழுதுவதால் என்ன விளைவு ஏற்படப்போகிறது? இலக்கியம் ஒரு கருவியாக நம் சிந்தனைகளைப் பிறர் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது.பிறர் சிந்தனைகளை நம் கவனத்தில் பதியக் கொண்டு வந்து சேர்க்கிறது.யாரோ எதிலோ எழுதும் விசயங்களில் நல்ல அம்சங்கள் இருப்பின் அது பற்றி நம் மனதில் ஓடும் எண்ணங்களை எழுதியவருடன் பகிர உதவுகிறது.அந்த வகையில் இந்த மாத புதிய ஆசிரியன் இதழில் தோழர் எஸ்.வி.வி. எழுதிய "பஞ்சமும் நோயும் மெய்யடியார்க்கோ" என்ற கட்டுரை படித்ததும் அது பற்றி அவருக்கு மெயில் மூலம் என் கருத்தைக் கொண்டு சென்றேன். அவரும் படித்து விட்டு தனது மகிழ்ச்சியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.இலக்கியம் என்பது இப்படி ஒரு அசைவை நிகழ்த்துகிறது.படித்து நீண்ட காலம் ஆகியும் நம் மனதில் அதிர்வுகளை ஏற்ப்படுத்தும் படைப்புகள் பல உண்டு.அவற்றின் தாக்கம் நீண்ட நாட்கள் ஆகிய பின்னும் ஒரு சிறிதும் மங்குவதில்லை.நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல் ஒரு உதாரணம். கன்னட மொழியில் நிரஞ்சனா எழுதிய சிரச்மரனே என்ற நாவலின் தமிழ மொழி பெயர்ப்பு இது.தமிழில் மொழி பெயர்த்தவர்   ப.ர.பரமேஸ்வரன் அவர்கள்.இந்த நாவலின் களம் பிரிடிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம்.விவசாய சங்கம் அமைத்த இளம் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தங்களின் நிலம் பிடுங்கப்பட்ட பின் அடைந்த வேதனையை சொல்கிறது.அவர்களும் அந்த கிராமத்தின் பிற விவசாய மக்களும் நடத்துகிற இயக்கம்,அதை நசுக்க பிரிடிஷ் ஆட்சி எடுக்கும் நடவடிக்கை,அதில் ஏற்ப்படும் ஒரு துரதிர்ஷ்ட வசமான சம்பவம்,அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலிஸ் எடுக்கும் கொடூரமான அடக்குமுறை,இறுதியில் அந்த நான்கு வீர இளைங்கர்களும் தூக்கு மேடை செல்லும் முடிவும்தான் நினைவுகள் அழிவதில்லை என்ற நாவல்.இதை எத்தனை முறை படித்திருக்கிறேன் என்று சொல்ல என்னாலேயே முடியாது.அத்தனை முறை படித்தும் புதிதாகப் படிப்பது போலத்ததான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது.நாவலை எழுதிய நிரஞ்சனா,அதை ஒரு கம்யூனிஸ்ட் பிரசார நாவல் என்று சிலராவது சொல்லவாய்ப்பு இருக்கிறது என்றும்,அனால் அதை எழுதிய போதும் சரி,அந்த உண்மை நிகழ்வை அருகில் இருந்து பார்த்த போதும் சரி,தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்றே சொல்கிறார்.தான் கண்ட ஒரு உண்மை நிகழ்வை தன மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்,அவ்வளவுதான்.அந்த நிகழ்வில் கண்ட அந்த மக்களின் துயரம் அவர் மனதைப் பாதிக்கிறது.சார்பு எதுவும் இல்லாமலே அவரின் நாவல் உண்மைகளை அந்தரங்க சுத்தியுடன் சொல்கிறது.இந்த நாவலில் இறுதிக்கட்டம் படிக்கிற யாரையும் உலுக்கி விடும்.தேஜஸ்வினி என்கிற நதி இந்த நாவலில் வெறும் ஒரு நதியாக மட்டும் இன்றி ஒரு பாத்திரமாகவே மாறி விடுகிறது.நாவலாசிரியரின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்திருக்கிறார் என்றால் அந்த நதியும் நதிக்கரை மக்களும் எவ்வளவு தூரம் அவரைப் பாதித்திருக்க வேண்டும்?தேஜஸ்வினி இன்று நன்கு அறியப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர்.நிரந்ஜனாவின் நாவலை அவர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார்."நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன"என்பது ஆங்கில மொழி பெயர்ப்பின் தலைப்பு.நாவலின் இறுதியில் தூக்கில் இடப்பட்ட சிருகண்டனின் மனைவி தன குழ்ந்தையிடம் வானில் தெரிகிற நட்சத்திரங்களைக் காட்டி "அதோ தெரிக்றார் பார் உன் அப்பா.அருகில் தெரிகிறவர்கள் அவரின் நண்பர்கள்" என்று சொல்லுவாள்.நம் கண்கள் குளமாகி விடும்.நெஞ்சமெல்லாம் வலிக்கும்.வரலாறு நெடுக உழைக்கும் மக்கள் தமது நியாயமான உரிமைகளைக் கூட தமது உயிரைக் கொடுத்த பிறகுதான் அடைகிறார்கள்;அல்லது உயிரைக் கொடுத்த பிறகும் கூட உரிமைகளை அடைய முடியாமலே இருக்கிறார்கள் என்பதை நாவல் மெளனமாக உணர்த்துகிறது.இலக்கியம் செய்கிற மாயம் இது.எழுத்து என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என்று நாம் உணர்கிறோம்.என்னை இடைவிடாமல் யோசிக்க வைக்கும் ஒரு சில் புத்தகங்களில் இதுவும் ஒன்று.இப்படி எழுத முடிந்தால் அந்த வகை எழுதுக்களை எழுதுவது பற்றி நாமும் யோசிக்கலாம்.இன்று காலையில் ஒரு கூட்டத்தில் வகுப்பு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்த போது இந்த நாவலின் பாத்திரங்கள் பற்றியும்,என் வாழ்வில் நான் சந்தித்த சில முக்கியமான தலைவர்கள் பற்றியும் அவர்களின் தன்னலம் அற்ற போது வாழ்க்கை பற்றியும் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன்.மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உத்வேகம் தருகிற புத்தகங்களில் இந்த நாவலும் தூக்கு மேடைக் குறிப்பு என்ற நினைவுக் குறிப்பு நூலும் முக்கியமானவை.இந்த நூல்கள் பற்றி நினைத்த உடனே வேறு சிந்தனைகளே எழாத வகையில் மனம் நிரம்பி விடுகிறது.............நினைவுகள் அழிவதில்லை நாவலின் முன்னுரையில் ஆசிரியர் வாசகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புவார்:"இந்த வீர நினைவுகள் உங்களுக்குத் தரும் உணர்வுகள் என்ன? நீர் நிரம்பிய கண்கள் மட்டும்தானa? ஓங்கி உயர்த்திய கரங்களும் கூடத்தான்"என்று வரும் வரிகள் நம் மனதில் பிரளயம் போல் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்கின்றன.நாவலின் இன்னொரு இடத்தில இப்படி வரும்:"நாம் சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரு போதும் சொல்ல முடிவதில்லை;நாம் கண்ணீர் வடிக்க வேஅண்டும் என்று நினைத்த போதெல்லாம் அழுதிருந்தால் தேஜஸ்வினி நதியில் வெள்ளம் பிரளய கால் வெள்ளமாயிப் பெருகியோடி இருக்கும்.அனால் நாம் செய்ய நினைப்பதை எல்லாம் செய்து விடுவதும் இல்லை" இப்படி வரும் வரிகள் நிறைய்ய....!                     

No comments:

Post a Comment