Wednesday, October 28, 2009

மண்ணில் நல்ல வண்ணம்

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" என்கிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல்."எந்த மார்க்கமும் தோன்றி இலது;என் செய்கேன்,ஏன் பிறந்தனன் இத் துயர் நாட்டிலே?" என்று பாரதி பாடுகிறார்.காரணம்?

"மாந்தர் பால் பொருள் நோக்கிப்பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை"என்பது பாரதியின் பதில்.விடுதலை வேள்வியில் தன வாழ்வை ஆகுதியாகிய கவிஞன் பாரதிக்கே இப்படி ஒரு விரக்தி ஏற்ப்பட்டது என்றால் சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

"நான் பிறந்தது இந்த நாட்டில்;இந்த மண்ணை நான் நேசிக்கிறேன்.இங்கிருந்து என்னை வெளியேறுமாறு சொல்கிறீர்களே,நான் எங்கே போவேன்?" இந்தக் கேள்வியை லண்டன் பி.பி.சி. நிகழ்ச்சியில் ஒரு நண்பர் இக கேள்வியை எழுப்பி இருக்கிறார்."மண்ணின் மைந்தர்களுக்கே அந்தந்த மண்ணில் வேலை, வாழ்க்கை,இருப்பிடம்-"--என்று ஒரு முழ்க்கம் இப்போது உலகு எங்கும் பரவி வருகிறது.அயலவர் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்களைதமது   மண்ணில் இருந்து வெளியேறுமாறு கூறுவதே இந்த முழக்கங்களின்அடி நாதமாக இருக்கிறது.

"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"என்று வாழ்வின் இலக்கணம் கண்ட மண் நம் தமிழ்  மண்.எனவே இந்த மண்ணின் மைந்தர் என்ற முழ்க்கம் நமக்கு உடன்பாடானதாக இருக்காது.நமக்கு மட்டும் இன்றி உலகில் சக மனிதர்களை நேசிக்கும் எந்த ஒருவருக்கும் ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்தாக இருக்காது.ஆனால் இன்று உலகின் பல பகுதிகளிலும் இப்படியான மனித விரோதக் கருத்துக்கள் விசிறி விடப் படுவதை நாம் பார்க்கிறோம். இது அறிந்தும் அறியாமலும் பரப்பப் படுகிற போது சக மனிதர்களை விரோதியாகப் பார்க்கும் போக்கு பரவுவதை நாம் காண்கின்றோம்.

உலகின் எந்த மூலையிலும் யாரும் சென்று உழைக்கவும்,பிழைக்கவும்,பகிர்ந்து உண்ணவும்,ஒன்றி நேசித்து வாழ்வும்,அன்பு செய்யவும்,அன்பினால் நனைக்கப் படவும் கூடிய ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும்.ஆனால் நடைமுறையில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப் படுவதும்,அதை உலகமே வேடிக்கை பார்த்துக் "கவலை" தெரிவிப்பதையும், கண்டனம் தெரிவிப்பதையும் செய்வது அறியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

நாம் படித்த எல்லா நீதிகளும்,போர் நெறிகளும்,சர்வதேச நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்படுவதை கையறு நிலையில் நின்று பரிதவிப்புடன் காண்கிறோம்,ஒரு காலத்தில் உலகப் பொதுமைக்கு சான்றுகள் என்று நாம் நினைத்த நாடுகள் கூட மனித குல விரோதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு மானுடப் படுகொலைகள் நிகழ்த்தியதை காணும் அவலம் நமக்கு நேர்ந்தது,அவரவர் நிலைக்கு நியாயம் கற்ப்பிக்க அவரவர் தரப்பு வாதங்கள் இன்று மயிர் பிளக்கும் "நுண்மான் நுழை புல"நுணுக்கங்களுடன் புவிப் பரப்பெங்கும் பரப்பப் பட்டு வருகிற நேரம் இது.

எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இதயம் பதற இந்த மானுடப் படுகொலைகள் பற்றி யோசிக்கும் ஒருவனின் குற்ற உணர்வுக்கு எது வடிகால்?அரசியல் விர்ப்பன்னர்கள் இந்த நிலைமை பற்றி ஆயிரம் விளக்கங்கள் தரலாம்.அனால் துயரமும் குருதியும் தோய்ந்த இந்தக்கதரல்களை யார் கேட்கப் போகிறார்கள்?இந்த அவல இசையின் சுருதி பிசகிய குறிப்புக்களை எந்தக்கலைஞனால் சரி செய்ய முடியும்?என்றைக்குச் சாத்தியமாகும் அது?

No comments:

Post a Comment